போலியாக கண்ணீர் வடிப்பதற்கு முதலைக் கண்ணீர் என்று உதாரணம் கூறுவார்கள். அப்படிப்பட்ட முதலைக் கண்ணீரை இன்று வடிப்பது யார் ?
வேறு யார், தமிழ்நாட்டின் மூத்த முதலையான கருணாநிதியைத் தவிர வேறு யார் ?
நேற்று உடன்பிறப்புகளுக்கு அவர் எழுதியிள்ள கடிதத்தில் ஈழத் தமிழரின் அவல நிலைப் பற்றி கண்ணீர் உகுத்துள்ளார். இது என்ன மாதிரி கண்ணீர் என்பதை உங்களுக்கு சொல்லி உணர்த்த வேண்டியதில்லை.
இந்தக் கண்ணீரையும் இப்போது உகுக்க வேண்டிய தேவை என்னவென்றால், காங்கிரஸ் கட்சியும், சோனியா காந்தியும், பழைய திமுக மீதான பழைய கரிசனத்தை காட்டாததும், வேண்டாத மருகளைப் போல திமுகவை நடத்துவதுமே ஆகும். 2004ல், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் வந்து, கருணாநிதியை சந்தித்த சோனியா, 2010ல் விமானநிலையத்தில், 10 நிமிடங்கள் மட்டுமே கருணாநிதிக்கு நேரம் ஒதுக்குகிறார் என்றால், கருணாநிதி எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
கடந்த ஒன்றரை வருட காலமாக தமிழ்ச் சொந்தங்கள் முள்வேளி முகாமுக்குள் தானே அடைபட்டுள்ளார்கள் ? அப்போதெல்லாம் இல்லாத கரிசனம், கருணாநிதிக்கு இப்போது என்ன ? என்னவென்றால், திமுகவை அனுசரித்து, சட்டசபைத் தேர்தலில் உரிய கூட்டணி வைக்காவிட்டால். திமுக தமிழர் பிரச்சினையை மீண்டும் கையில் எடுக்கும், காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் என்று சூசகமாக உணர்த்துகிறாராம்…..!!!!
ஆனால், காங்கிரஸ் இதையெல்லாம் கண்டு கொள்ளும் நிலையில் இல்லை. கருணாநிதி நெருக்கடி கொடுக்கத் தொடங்கினால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய புலனாய்வுத் துறையை முடுக்கி விட்டு, ஆ.ராசாவின் மென்னியைப் பிடித்து, அந்த விசாரணை, சிஐடி காலனி வரை கொண்டு செல்ல சோனியா காந்திக்கு தெரியும். பெயரில்தான் சோனி இருக்கிறதே தவிர, சோனியா சோனி அல்ல. அவர் சோனி நிறுவனத்தை போல திறமை வாய்ந்தவர். கடைந்தெடுத்த அரசியல்வாதி. 2014ல், ராகுல் காந்தியை பிரதமராக ஆக்கும் வரை மிக கவனமாக காய் நகர்த்தும் அளவுக்கு சாதுர்யம் படைத்த தேர்ந்த அரசியல்வாதி.
2011 தமிழக சட்டமன்றத் தேர்தல் என்பது, இது வரை இல்லாத அளவுக்கு, காங்கிரஸ் அடுத்த ஆட்சியை தீர்மானிக்கும் என்ற ஒரு வினோதமான சூழலுக்கு வழிவகுத்திருக்கிறது. இந்தச் சூழலை நன்கு அறிந்த கருணாநிதி, அதனால்தான், தன்னுடைய ஈகோவையெல்லாம் கோபாலபுரத்திலேயே மூட்டை கட்டி வைத்து விட்டு, மீனம்பாக்கம் சென்று, தன்னுடைய விசுவாசத்தை காட்டிக் கொண்டார்.
இந்தப் பின்னணியில்தான், விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிக்கப் பட்ட விவகாரத்தை ஆராய வேண்டும்.
2009 மே மாதத்திலேயே விடுதலைப் புலிகள் வீழ்த்தப் பட்டார்கள் என்று சிங்கள அரசாங்கம் அறிவித்தது. தேசியத் தலைவர் இறந்து விட்டார் என்றும் அறிவித்தது. இதை நம்பி, இந்திய அரசாங்கமும், பிரபாகரனின் இறப்புச் சான்றிதழை யாராவது ஒரு சிங்கள தாசில்தாரிடம் வாங்கிக் கொடுங்கள் என்று விண்ணப்பித்தது.
ஒரு புறம், இறப்புச் சான்றிதழை தாருங்கள் என்ற இலங்கைக்கு விண்ணப்பித்து விட்டு, மறுபுறம், புலிகள் இயக்கத்தை 2010 மே 14 அன்று தடை செய்து ஒரு அறிவிக்கையை வெளியிடுகிறது.
இந்த அறிவிக்கையை சரியா தவறா என்று முடிவு செய்ய, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புத் தீர்ப்பாயம் ஒன்று, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி விக்ரம்ஜித் சென் தலைமையில் அமைக்கப் படுகிறது.
இதே விக்ரம்ஜித் சென்தான், 2008ல், புலிகள் இயக்கம் மீதான தடையை உறுதி செய்தார்.
இந்நிலையில், இத்தீர்ப்பாயத்தின் இரண்டாவது கூட்டம், சென்னையில் அக்டோபர் முதல் வாரத்தில் நடந்தது. அக்கூட்டத்தில், மதிமுக பொதுச் செயலர் வைகோ, பழ.நெடுமாறன் ஆகியோர், புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்கின்றனர். தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பாகவும், புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கு என்று ஒரு மனு தாக்கல் செய்யப் படுகிறது.
அந்த மனு விசாரணைக்கு வந்த போது, தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பாக, வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் ஆஜராகி வாதாடினார்.
தனது வாதத்தின் போது, புலிகள் இயக்கம் அழிந்து விட்டாலும், அதன் ஆதரவாளர்களும், அனுதாபிகளும், அந்த இயக்கத்துக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறார்கள் என்று புலிகள் இயக்கத்தை தடை செய்த அறிவிக்கையில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. அந்த அறிவிக்கையில் ஆதரவாளர்களைப் பற்றி குறிப்பிட்டுருப்பதால், ஆதரவாளர் என்ற முறையில் தமிழக மக்கள் உரிமைக் கழகத்தை ஒரு அனுதாபியாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று வாதாடினார்.
அந்த மனுவை நிராகரித்த நீதிபதி விக்ரம்ஜித் சென் தனது தீர்ப்பில், தமிழக மக்கள் உரிமைக் கழகம் என்பது ஒரு பதிவு செய்யப் படாத அமைப்பு, மேலும், அந்த அமைப்பின் முகவரி முழுமையாக இல்லை (தெருப் பெயர் குறிப்பிட தவறுதலாக விடுபட்டு விட்டது.) என்று இரு பெரும் காரணங்களையும், சட்டத்தில் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் தான் தீர்ப்பாயத்தின் முன் வர வேண்டும் என்ற ஒரு முக்கியமற்ற காரணத்தையும் குறிப்பிட்டு, மனுவை தள்ளுபடி செய்தார் நீதியரசர் விக்ரம்ஜித் சென். இந்த முகவரி தொடர்பாக, நீதிபதி சந்தேகம் எழுப்பிய போது, தெருப்பெயர் தவறுதலாக விடுபட்டு விட்டது என்று விளக்கத்தை அவருக்கு அளித்து, திருத்தப் படும் என்று வாக்குறுதி அளித்த பின்பும், முகவரி சரியில்லை என்பதை மனுவை தள்ளுபடி செய்வதற்கு ஒரு காரணமாக குறிப்பிட்டுள்ளார் என்றால், நீதியரசர் விக்ரம்ஜித் சென்னின் நீதிபரிபாலணத்தை பார்த்துக் கொள்ளுங்கள்.
இதையடுத்து தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து, ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப் பட்டது. அந்த மனுவில், மனுதாரரை விசாரிக்காமல், தீர்ப்பாயம் மனுவை தள்ளுபடி செய்தது சட்ட விரோதம் என்றம், அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை மீறிய செயல் என்றும் வாதிடப் பட்டது. மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால் மற்றும் சிவஞானம் அடங்கிய டிவிஷன் பென்ச் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.
தங்களது தீர்ப்பில், சென்னை உயர்நீதிமன்றம், தீர்ப்பாயம் மனுதாரருக்கு உரிய வாய்ப்புகள் அளித்துள்ளதால் (??????) தீர்ப்பாயத்தின் உத்தரவில் நாங்கள் தலையிட எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறியுள்ளனர். இதில் ஒரு விசித்திரம் என்னவென்றால், இந்த வழக்கின் வாதங்கள் நடந்து கொண்டிருந்த போது, ஜமாத் ஏ இஸ்லாமிக் ஹிந்த் என்ற ஒரு அமைப்பு தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வழக்கறிஞர் ராதகிருஷ்ணன் குறிப்பிட்டார். இத்தீர்ப்பை தங்களது தீர்ப்பிலும் சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிடுகையில், அந்த தீர்ப்போடு சேர்த்து, லிபர்ட்டி ஆயில் மில்ஸ் என்ற மற்றொரு வழக்கையும் சேர்த்து குறிப்பிட்டுளளனர். என்னடா இது சம்பந்தமில்லாமல், ஒரு வழக்கை குறிப்பிடுகிறார்களே என்று ஆராய்ந்தால், ஜமாத் வழக்கு தீர்ப்பின் நகலை நீதிமன்றத்துக்கு வழங்கிய போது, அந்த வழக்கின் தீர்ப்பு முடிந்தவுடன், லிபர்ட்டி ஆயில் மில்ஸ் என்ற அடுத்த வழக்கின் ஒரே ஒரு பத்தி மட்டும் அந்த நகலில் இருந்தது. (தள்ளுபடி பண்றதுல அவ்வளவு அவசரம்….. ம்ம்ம்.) இது ஒரு சாதாரண தவறு என்று விட்டு விடலாம். இது போன்ற ஒரு சாதாரண தவறுதானே, தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் முகவரியில் தெருப் பெயர் விடுபட்டுப் போனதும் …. ? பதினோரு ஆண்டுகளாக, டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் ஒரு மூத்த நீதிபதி, இதை ஒரு காரணமாக சுட்டிக் காட்டி, புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்க வேண்டும் என்று மனுத் தாக்கல் செய்யும் ஒரு அமைப்பின் மனுவை தள்ளுபடி செய்கிறார் என்றால், இந்தத் தீர்ப்பாயம், நீதிபரிபாலணம் எல்லாம் எப்படி ஒரு சடங்காக இருக்கிறது என்று பாருங்கள்.
தீர்ப்பாயத்தின் அடுத்த அமர்வு ஊட்டியில் 20 அக்டோபர் அன்று நடைபெற்றது. (ஊட்டியில் என்ன பொட்டு அம்மனும், சூசையும் இருக்கிறார்களா…. எதற்கு ஊட்டியில் என்று அதிகப் பிரசங்கி மாதிரி கேள்வி கேட்காதீர்கள். நீதியரசரும், அவர் பரிவாரங்களும் ஊட்டியை சுற்றிப் பார்க்க வேண்டாமா ?) ஊட்டியில் அமர்வு தொடங்கியதும், விக்ரம்ஜித் சென், சிறிது அதிர்ச்சி அடைந்தார். காரணம், ஊட்டியில் வைத்தால் யாரும் வரமாட்டார்கள் என்று நினைத்து வந்தவர், நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மதுரையிலிருந்து வந்திருப்பதைக் கண்டார்.
சிறைக் கைதிகள் உரிமை மையம் என்ற அமைப்பின் சார்பாக, அதன் இயக்குநர் புகழேந்தி சார்பாக, ஒரு மனு தாக்கல் செய்யப் பட்டது. அந்த மனுவை வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் நீதிபதி விக்ரம்ஜித் சென்னிடம் அளித்ததும், நீதியரசர் கடுமையாக கோபம் அடைந்தார். “என்ன இது… உங்களுக்கு இதே வேலையாகப் போய் விட்டது. நாங்கள் தீர்ப்பாயத்தை முடிக்க வேண்டாமா. நாங்கள் ஒரு காலகட்டத்திற்குள் இதை முடித்தாக வேண்டும். உங்கள் இஷ்டத்துக்கு மனு தாக்கல் செய்து கொண்டிருந்தால் நாங்கள் எப்போது இத்தீர்ப்பாயத்தை முடிப்பது“ என்று கோபமாக கூறினார்.
ராதாகிருஷ்ணன் என்ற சிங்கம் சீறியது… “நாங்கள் அளித்த மனுவை படித்துப் பார்க்காமல் இவ்வாறு கூறாதீர்கள். மனுவை ஏற்க மறுப்பதற்கு தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் இல்லை. மனுவை முதலில் படித்துப் பாருங்கள். இந்த அமைப்பு எத்தனை பொதுநல வழக்குகள் போட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த அமைப்பை இரண்டு ஆண்டுகளாக எப்படி நடத்தியுள்ளது என்பதை அந்த மனுவை படித்துப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். யாரையுமே அனுமதிக்க முடியாது என்றால் யாருக்காக தீர்ப்பாயம் நடத்துகிறீர்கள் ? மனுவை படித்துப் பார்த்து விட்டு மனுவை தள்ளுபடி செய்யுங்கள். நாங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து கொள்கிறோம்“ என்று கூறினார்.
இதையடுத்து நீதியரசர் விக்ரம்ஜித் சென், மனுவை பொறுமையாக படித்துப் பார்த்தார். படித்து முடித்து விட்டு, அரசு வழக்கறிஞரைப் பார்த்து, இத்தீர்ப்பாயத்திற்கு உதவி செய்வதற்காகவே இவர்கள் மனு தாக்கல் செய்துள்ளார்கள். அதனால் இந்த மனுவை ஏற்றுக் கொள்ளலாம் என்று கூறினார். (இதத் தானே நாங்க மொதல்லயே சொன்னோம். படிக்காமலே அவசரப் பட்டு முடிவெடுக்கக் கூடாது சார்)
இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கான இயக்குநர் பி,கே.மிஷ்ரா என்பவர் சாட்சியாக விசாரிக்கப் பட்டார். அவர் தனது சாட்சியத்தில், விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்வதற்கான காரணங்களையும், ஆதாரங்களையும், வழங்கியது தமிழக காவல்துறை என்று கூறினார். கருணாநிதி முதலைக் கண்ணீர் வடிக்கிறார் என்று கூறியதற்கான காரணம் என்னவென்று இப்போது புரிகிறதா ?
மேலும் அந்த அதிகாரி தனது சாட்சியத்தில், நாடுகடந்த தமிழீழம் அமைக்கப் பட்டுள்ளது என்றும் இதுவும் புலிகள் இயக்கத்தை தடை செய்வதற்கான காரணம் என்றும் கூறினார். நாடுகடந்த தமிழீழத்திற்கான தேர்தல் நடந்த போது அதன் சிறப்பு பார்வையாளர் யார் தெரியுமா ? அமெரிக்க அரசாங்கத்தின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் ராம்சே மெக்டொனால்ட். தடைசெய்யப் பட்ட அமைப்பை அமேரிக்க அரசாங்கம் தனது நாட்டில் மாநாடு நடத்த அனுமதிக்குமா ? இது போல இன்னும் பல்வேறு சொத்தைக் காரணங்களை அந்த அதிகாரி கூறினார். இவரை குறுக்கு விசாரணை செய்ய வைகோவுக்கும், நெடுமாறனுக்கும், சிறைக் கைதிகள் உரிமை மையத்திற்கும் நீதியரசர் அனுமதி வழங்கினார்.
சாட்சிகள் குறுக்கு விசாரணையை அடுத்து, 28ம் தேதிக்கு அடுத்த அமர்வு ஒத்தி வைக்கப் பட்டது.
தனது நலனையும், தன் குடும்பத்தின் நலனையும் கருத்தில் கொண்டு, போரை நிறுத்த வேண்டும் என்று தமிழகமே போராடிக் கொண்டிருந்த போது தன்னால் இயன்றதையெல்லாம் செய்து, அந்த போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்து, ஒரு அடிமை இன்னொரு அடிமையிடம் என்ன கேட்க முடியும் என்று பசப்பி லட்சக்கணக்கான தமிழ் உயிர்கள் பலியாகக் காரணமாக இருந்த கருணாநிதி இப்போது மீண்டும் வடிக்கத் தொடங்கியிருக்கும் முதலைக் கண்ணீர், அடுத்த சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு தான்.
ஆனால், இனியும் உலகத் தமிழர்கள் கருணாநிதியை நம்பத் தயாராக இல்லை. 1991 தேர்தல் முதல் ஒவ்வொரு தேர்தலிலும், இதுதான் எனது கடைசித் தேர்தல், இதுதான் எனது கடைசித் தேர்தல் என்று கருணாநிதி கூறுவார்.
ஆனால் இப்போது சவுக்கு கூறுகிறது. இதுதான் கருணாநிதியின் கடைசித் தேர்தல். அவர் முழுமையாக மக்களால் புறக்கணிக்கப் படப் போகிறார். தனது குடும்பத்தை வளர்த்து விட்டு, தமிழகத்தை சூறையாட விட்டு வேடிக்கைப் பார்த்த கருணாநிதியை மக்கள் மன்னிக்கப் போவதே இல்லை.