மோடிக்கு ரஃபேல் தரும் தலைவலியின் 5 முக்கிய அம்சங்கள்
மார்ச் 6 அன்று, உச்ச நீதிமன்றத்தில் ரபேல் சீராய்வு மனுக்கள் தொடர்பாகக் காரசார விவாதம் துவங்கியது. அன்றைய தினம் மனுதாரர்களான பிரசாந்த் பூஷண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்டவர்களின் வாதங்கள் கேட்கப்பட்டன. ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் டிசம்பரில் அளித்தத் தீர்ப்பில், ஏன் தகவல் மற்றும் சட்டப்பிழைகள் இருந்தன என்பதை மனுதாரர்கள் தங்களின் வாதங்களாக முன்வைத்தனர்.
பூஷண் தனது முதல் வாதத்தை எடுத்து வைத்தார்: இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்கிற தனது, சின்ஹா மற்றும் ஷோரியின் முக்கியக் கோரிக்கையை நீதிபதிகள் பரிசீலிக்கவில்லை என அவர் கூறினார். தனது இந்த வாதத்தினை பரிசீலித்து இந்தத் தீர்ப்பினை சீராய்வுக்கு உட்படுத்தவேண்டும் என்று அவர் வாதிட்டார்.
தனது இரண்டாவது வாதத்தை அவர் துவக்கியதுமே, விசாரணை முற்றிலும் எதிர்பாராத திசையில் செல்லத் தொடங்கியது. மத்திய அரசு நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்தியது என்றும், நீதிபதிகளிடமிருந்து தகவல்களை மறைத்துள்ளது என்பதும் அவரது இரண்டாவது வாதம்.
தி இந்து , தி கேரவன் போன்ற ஊடகங்களில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு வெளிவந்த கட்டுரைகளை பூஷன் ஆவணங்களாக முன்வைத்தார். ‘முத்திரையிடப்பட்டு பாதுகாக்கப்பட்ட ‘ ரபேல் ஒப்பந்தத்தின் விவரங்கள், நடைமுறைகள் மற்றும் விலை நிர்ணயம் போன்றவற்றை அரசு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை என்பதை ஆதாரங்களோடு அந்த ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் மனு தாக்கல் செய்வதற்கு இதுவும் அடிப்படையாக அமைந்தது.
இப்படி அவர் முன்வைத்ததும் சூடுபிடிக்கத் தொடங்கின.
அரசு தலைமை வழக்கறிஞர் கேகே.வேணுகோபால் இதற்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தார். இந்த ஆவணங்கள் பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து திருடப்பட்டவை என்றும், இப்படிச் சட்ட விரோதமாக பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சீராய்வு மனு மற்றும் மத்திய அரசுக்கு எதிரான மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அவை தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று கூறி இதற்கு அவர் ஆட்சேபணை தெரிவித்தார்.
மேலும், இந்த ஆவணங்கள் மிகவும் ரகசியமானவை என்பதால், இவற்றைப் பயன்படுத்துவதும், வெளியிடுவதும் ரகசியப் பாதுகாப்புச் சட்டத்தை மீறுவதாகும் என அவர் தெரிவித்தார். எனவே, சட்டத்தை மீறியதற்காக நாளிதழ் மீதும் மனுதாரர்கள் மீதும் அரசு நடவடிக்கை எடுக்கப் பரிசீலிப்பதாக அவர் தெரிவித்தார்.
ஆனால், இதற்கெல்லாம் என்ன அர்த்தம்?
ஆவணங்களில் இருந்த தகவல்கள் உண்மையா, பொய்யா? முறைகேடுகளையும், சட்ட மீறல்களையும் வெளிக்கொணரும் பத்திரிகையாளர்கள் மீது இந்த அரசு ஏன் கிரிமினல் வழக்கு போடுவதாக மிரட்டுகிறது? திருடப்பட்ட ஆவணங்கள் என்பதால் அதில் உள்ள முக்கியத் தகவல்களை நீதிமன்றம் பரிசீலிக்காதா?
இந்த விசாரணையில் தெரியவரும் முக்கிய விஷயங்கள் வருமாறு:
- ஆவணங்கள் உண்மையானவை
என். ராம் மற்றும் மற்றவர்கள் வெளியிட்ட இந்தக் கட்டுரைகளில் வெளியான வெவ்வேறு ஆவணங்களின் நம்பகத்தன்மை குறித்து விசாரணையின் எந்தக் கட்டத்திலும் அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் கேள்விகுள்ளாக்கவில்லை. இந்த ஆவணங்கள் “திருடப்பட்டது” என்று சொல்வதன் மூலமாக அவர் இது பாதுகாப்புத் துறையிடமிருந்து வெளிவந்த ஆவணங்கள் தான் என்றும் அது ஜோடிக்கப்பட்டதல்ல என்பதையும் ஒப்புக் கொண்டிருக்கிறார்
இது முக்கிய நிகழ்வாகும். ஏனெனில் இது பல விஷயங்களை உணர்த்துகிறது:
- பிரதமர் அலுவலகம் இந்த ஒப்பந்தத்திலும் சமசரக்குழுவின் நிலைப்பாட்டிலும் தலையிட்டதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கருதியுள்ளனர்.
- இந்த ஒப்பந்தம் குறித்து தீர்மானம் மேற்கொள்ள பாதுகாப்பு கேபினெட் குழு (சிசிஎஸ்) கூட்டம் கூட்டப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பே பிரதமர் அலுவலகம் இறையாண்மையையும் வங்கி உத்தரவாதத் தேவைகளையும் விட்டுக் கொடுக்க முடிவு செய்திருக்கிறது.
- ஆகஸ்ட் 2016ல், சிசிஎஸ் இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த பிறகு அரசாங்கம் ஊழலுக்கு எதிரான சட்ட விதியினைக் கைவிட ஒப்புக் கொண்டிருக்கிறது,.
- ஒப்பீடு விலை, விமானங்களை ஒப்படைப்பதில் டசால்ட்டின் திறன் மற்றும் இறையாண்மை உறுதிப்பாடு போன்றவை குறித்து சமரசக்குழு பல ஆட்சேபனைகளை எழுப்பியிருக்கிறதுறது. இவற்றுக்கு சரியாகத் தீர்வு காணப்படவில்லை.
- அரசிடமிருந்து தேவையான எல்லாத் தகவல்களும் உச்ச நீதிமன்றத்திற்குக் கிடைக்கவில்லை.
ஆவணங்கள் ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் உண்மையானவை தானா என்பதை தற்போதே சொல்ல இயலாது. ஏனெனில் இவற்றில் இடம்பெற்றிருக்கிற தகவல்கள் மத்திய அரசால் உச்ச நீதிமன்றத்திடம் வழங்கப்படவில்லை எனத் தோன்றுகிறது (ஏன் வழங்கவில்லை என்னும் கேள்வி இதனால் எழும்).
2016 ஆகஸ்ட்டில் சிசிஎஸ் ஒப்பந்தத்திற்கு அனுமதி அளித்த பிறகு, 2016 செப்டம்பரில் ஊழலுக்கு எதிரான ஷரத்து கைவிடப்பட்டது என்பது மிகவும் தீவிரமான பிரச்சனையாகும். ஏனெனில் இதனால் பாதுகாப்பு கொள்முதல் விதிமுறை அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. நீதிபதிகள் இது “பரவலாக பின்பற்றப்பட்டதாக” கருதுகின்றனர்.
இதே போன்று டிசம்பர் மாதம் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எந்த மாதிரியான விதிமுறைகள் பின்பற்றப்பட்டன என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன்படி ஏழுபேர் கொண்ட இந்திய சமரசக்குழு (ஐஎன்டி) இந்த ஒப்பந்தத்தின் வணிக அம்சங்களை பரிசீலித்து ஜூலை 2016 ல் சிசிஎஸ் க்கு அனுப்பியுள்ளது. அந்த சமயத்தில் தான், அதாவது ஆகஸ்ட் 2016 ல் சிசிஎஸ் இறையாண்மை உறுதிப்பட்டினைக் கைவிட ஒப்புதல் அளித்திருக்க வேண்டும். இதில் பிரதமர் அலுவலகத்தின் பங்கு இருந்ததாக எந்தக் குறிப்பும் இல்லை.
எதுவாயினும் பிரதமர் அலுவலகத்தின் தலையீடு குறித்த பாதுகாப்பு அமைச்சகத்தின் குறிப்பு தெளிவாகச் சுட்டிக்காடடுகிறது. ஃபிரெஞ்சு அதிகாரிகளுடன் சேர்ந்து தான் உறுதிப்பாடுகளை பிரதமர் அலுவலக அதிகாரிகள் கைவிட்டனர் என்கிறது குறிப்பு.
ஏர் மார்ஷலான எஸ்பிபி சின்ஹாவும் பிர்ஹமர் அலுவலகத்தைக் காப்பாற்ற முயற்சி செய்தார் என்றாலும் அவரே கூட நவம்பர் 2015ல் இவ்வாறு நடைபெற்றதாக ஒப்புக் கொள்கிறார்.
செயல்முறை எல்லாம் சரியாகப் பின்பற்றப்பட்டுள்ளனவா என்பதை நீதிபதிகள் தீர்மானிக்க இந்தத் தகவல்கள் எல்லாம் முக்கியமானவை. எனவே இந்தத் தகவல்களை நீதிமன்றத்திற்கு அளிக்காதது மத்திய அரசுக்குப் பிரச்சினைதான்.
- தகவல் கசிவுகள், சீராய்வு மனுக்கள் ஆகியவற்றால் மோடி அரசு தடுமாறுகிறது
இந்தப் பிரச்சினைகளை மீறி, இந்தத் தகவல்கள் பொருத்தமானவை அல்ல என்றோ அல்லது அது தொடர்பாகச் செய்தி வெளியிடுவது அர்த்தம் இல்லாதது என்றோ வாதிட்டிருக்கலாம். அல்லது இது குறித்த ஊடகக் கட்டுரைகள் பின்புலத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளத்தகாதவை, ஆவணங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு எழுதப்பட்டவை என்றும் அரசு வாதிட்டிருக்கலாம்.
மாறாக அரசு, இவை பொருத்தமான ஆதாரங்களாக எடுத்துக்கொள்ளப்படக் கூடாது என்பதை உறுதிசெய்ய முயன்றது. அத்துடன், இந்த ஆவணங்களை வெளியிட்டதற்காக பத்திரிகையாளர்களையும், நீதிமன்றத்திடம் சமர்பித்ததற்காக மனுதாரர்களையும மிரட்டியுள்ளது.
இது தகவல் கசிவுப் பிரச்சினையைக் கையாள்வதற்கான மோசமான அணுகுமுறையாகும், அரசிடம் மறைக்க ஏதோ இருக்கிறது என இது நினைக்க வைக்கிறது. இந்த அணுகுமுறை பின்பற்றப்பட்டால், வெளிப்படையான தன்மைக்கு இது சாவு மணியாக அமையும். அவர்கள் உண்மையைப் பேசினாலும்கூட, எதிர்ப்பாளர்கள் வாயை மூடுவதில்தான் அரசு அக்கறை கொண்டுள்ளது என்பதை இது உணர்த்துகிறது.
இது போதாது என்று, இதே வாதத்தை சீராய்வு மனுக்களைத் தள்ளுபடி செய்யவும் பயன்படுத்துகின்றனர். உச்ச நீதிமன்ற நீதிபதி அரிஜித் பசவத்தின் 2004ஆம் ஆண்டின் தீர்ப்பு தன் நிலைக்குப் பக்கபலமாக இருப்பதாக வேணுகோபால் கூறினாலும், சட்ட விரோதமான முறையில் பெறப்பட்டது என்பதற்காகவே பொருத்தமான ஆதாரங்களைப் பரிசீலிக்க முடியாது எனும் வாதத்தை நீதிபதிகள் அப்போதும் ஏற்கத் தயாராக இல்லை.
நிதீபதி கே.எம்.ஜோசப்தான் இதற்கு முதலில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். பொருத்தமாக இருந்தால் இத்தகைய ஆதாரங்கள் ஏற்கப்படும் என்றார். எந்தக் குற்றம் வேண்டுமானாலும் நடைபெறலாம், ஆனால் இது பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பானது என்பதால் நீதிமன்றம் பரிசீலிக்க முடியாதா எனத் தலைமை நீதிபதி கோகாய் கேள்வி எழுப்பினார். நீதிபதி எஸ்.கே.கவுல், அரசு தலைமை வழக்கறிஞர் கூறுவது சரி என்றாலும்கூட, இது ஒட்டுமொத்தமான தடையாகிவிட முடியாது என்றார்.
தேசிய பாதுகாப்பு மற்றும் ஆதாரம் வெளியான விதம் தொடர்பான வாதங்கள் அரசு நிலையை பலவீனமாக்கின.
தேசியப் பாதுகாப்பு குறித்த தொடர் கட்டுப்பாடுகளாலும் அரசு தரப்பின் பதற்றம் வெளிப்பட்டது. இது தலைமை வழக்கறிஞர், அரசுத் தரப்பு ஆகியோரின் வாதத்தை பலவீனமாக்கியது. ஏனெனில், இதன் காரணமாக, நீதிமன்றத்திற்குப் பொருத்தமில்லாத வாதங்களை அவர் மேற்கொள்ள வேண்டியிருந்தது.
எஃப் 16 விமானங்களை எதிர்கொள்ள நமக்கு விமானம் தேவையா எனும் கேள்வி செயல்முறைகள் மீறப்பட்டதா எனும் கேள்விக்குப் பொருத்தமற்றது. ரகசியக் காப்புச் சட்டம் மீறப்பட்டிருந்தாலும்கூட, அரசு கிரிமினல் வழக்கு தொடரலாமே தவிர, சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்ய முடியாது. இந்த ஆட்சேபணைகளால் ஒப்பந்தத்தைத் தாமதமாக்கும் அபாயம் இல்லை. ஏனெனில் அதை நிறுத்த முயற்சிக்கவில்லை என நீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. மனுதாரரும் இதைக் கோரவில்லை.
ஆவணங்களை யார் அளித்தது என மனுதாரர்கள் தெரிவிக்க வேண்டும் என்றும் வேணுகோபால் வலியுறுத்தினார். ஆவணங்கள் உண்மையானவை என ஒப்புக்கொண்ட பிறகு இந்தக் கருத்து மோசமானது. ஆதாரம் பொய்யாக இருந்தால் மட்டுமே, தகவல்களை ஜோடனை செய்திருந்தால் மட்டுமே, ஆதாரம் வழங்கியவர் தொடர்பான கேள்வி முக்கியம்.
உண்மையான பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு பதில் அரசு தவறான போர்களில் ஈடுபடத் தயாராக இருப்பதையே இவை உணர்த்துகின்றன. அது மட்டும் அல்ல, இதைவிட வலுவான, சாட்சிகள் சட்டம் 123இன் கீழ், இந்த ஆவணங்கள் பிரத்யேகமானவை என வாதிடுவதற்கும் அரசு வழக்கறிஞருக்கு போதுமான நேரம் இருக்கவில்லை.
- அரசியல்மயமாக்கல் என கூறியது நீதிமன்ற அவமதிப்பாகலாம்
வேணுகோபால், தேசியப் பாதுகாப்புடன் நிறுத்திக்கொள்ளவில்லை. நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல், டிவி சேனல்கள் மீதான கேள்விகள் என அவர் ரஃபேல் சர்ச்சையை அரசியல்மயமாக்கல் பற்றியும் குறிப்பிட்டார். இது நாடாளுமன்றம் கவனிக்க வேண்டிய விஷயம், நீதிமன்றம் தலையிடக் கூடாது என்றார்.
இந்த ஒப்பந்தம் குறித்து நீதிமன்றம் ஏற்கனவே விசாரித்திருப்பதாலும், இந்த ஆட்சேபணை அப்போது எழுப்பப்படவில்லை என்பதாலும், இந்த வாதம் குழப்பம் தருகிறது. அது மட்டுமல்ல, “உங்களுடைய ஒவ்வொரு வரியும் எதிர்க்கட்சிகளால் அரசை நிலைகுலைய வைக்கப் பயன்படுத்தப்படும். மேதகு நீதிபதிகள் இதற்கு உடன்படப்போகிறீர்களா?’ என அவர் கேட்டபோது இது மேலும் மோசமானது.
இதன் மூலம் தலைமை வழக்கறிஞர் என்ன சொல்ல வருகிறார்? சட்டத்தின் அடிப்படையில் ஒரு பிரச்சினையின் தன்மையைத் தீர்மானிக்கும்போது, உச்ச நீதிமன்றம் எப்போது அரசியல் நோக்கங்களைக் கருத்தில் கொண்டிருக்கிறது? 2013இல், 2ஜி உரிமங்களை ரத்து செய்தபோது, அதற்கான தீர்ப்பு வழங்குவதற்கு முன் பாஜக அதை எப்படி பயன்படுத்தும் என்று நீதிமன்றம் பரிசீலித்ததா? மத்திய அரசு சட்டத்தை மீறி இருந்தாலும்கூட, அதை எதிர்க்கட்சிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துக்கொள்ளலாம் என்பதற்காக நீதிபதிகள் ஆளுங்கட்சிக்கு எதிராகத் தீர்ப்பு அளிக்கக் கூடாதா?
இதுபோன்ற வாதங்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்படுவது கவலை அளிக்கிறது. வேணுகோபால், தேசத்தைச் சீர்குலைப்பது பற்றிப் பேசவில்லை, எதிர்க்கட்சிகளால் அரசு பாதிக்கப்படுவது பற்றிப் பேசுகிறார். நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் இத்தகைய அரசியல் நோக்கிலான கருத்திற்கு எந்த இடமும் இல்லை. முக்கியமாக அரசியல் சாசனப் பொறுப்பு வகிக்கும் தலைமை வழக்கறிஞர் இவ்வாறு கூற இடமில்லை.
இதன் பொருத்தமில்லாத தன்மை தவிர, நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் 1971, பிரிவு 2(c)(ii)இன் கீழ் இது கிரிமினில் அவமதிப்பாகவும் விளங்கும். இந்தப் பிரிவின்படி எந்த நீதிமன்றச் செயல்முறையிலும் குறுக்கிடும் விதத்திலோ அல்லது தலையிடும் வகையிலோ அல்லது நீதிமன்றத்தின் மீது சார்பு கற்பிப்பதாகவோ இருக்கும் எந்தக் கூற்றும் நீதிமன்ற அவமதிப்பாகும்.
ரஃபேல் ஒப்பந்தத்தில் நீதிமன்றத்தின் எந்த ஒரு கருத்தும் அரசை பாதிக்கும் என்று சொல்வது நீதிமன்ற அவமதிப்பாகவே அமையும் என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம்.
- நீதிமன்றம் தொடர்பாக விமர்சனக் கருத்துக்களைக் கூறுவதில் மனுதாரர்கள் கவனமாக இருக்க வேண்டும்
நீதிமன்ற நிகழ்வுகளில் மேலும் ஒரு நிகழ்வு சரியான கவனத்தைப் பெறவில்லை. நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தவர்களில் ஏஏபி எம்பி சஞ்சய் சிங்கும் ஒருவர். விசாரணையின் துவக்கத்தில், சிங்கின் வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டேவிடம், தலைமை நீதிபதி, அவரது மனுவை விசாரிக்க முடியாது ஏனெனில் அவர் ரஃபேல், அலோக் வர்மா வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தின் மீதும் அதன் நீதிபதிகள் தொடர்பாகவும் தரக்குறைவான கருத்துகளைக் கூறினார் எனத் தெரிவித்தார்.
எந்தக் கருத்துகளால் அதிருப்தி அடைந்தனர் என நீதிபதிகள் தெளிவுபடுத்தவில்லை. ஆனால், அவரது மனுவை ஏற்காதது குறைந்தபட்ச நடவடிக்கைதான் என்றும் அவர் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் தெரிவித்தார்.
இந்த முடிவின் சட்டபூர்வத் தன்மை தெளிவாகவில்லை. பொதுவாகப் பார்த்தால், சஞ்சய் சிங்கின் மனுவும், அவமதிப்புப் பிரச்சினையும் வேறு வேறானவை. நீதிமன்றம் அவரை அவமதிப்புக்காகத் தண்டித்துக்கூட, மனுவை விசாரிக்கலாம்.
இந்த முடிவு சரியா, தவறா என்பதைத் தாண்டி, நீதிமன்றம் மற்றும் வழக்குகள் தொடர்பான பத்திரிகைச் செய்திகளை தலைமை நீதிபதி கோகாய் கவனிக்கிறார் என இதன் மூலம் தெளிவாகிறது. அலோக் வர்மா வழக்கிலும் இது ஒரு பிரச்சினையாக இருந்தது. வர்மாவும் மனுதாரர்களும் தகவல்கள் கசியவிடுவதாகத் தோன்றியதை அடுத்துப் பல வாரங்களுக்கு அவர் விசாரணையைத் தள்ளிவைத்தார்.
பூஷண், ஷோரி, சின்ஹா, எம்.எல்.சர்மா உள்ளிட்ட மனுதாரர்கள் இந்த வழக்கு பற்றி என்ன பேசுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது. சிபிஐ இடைக்கால இயக்குனர் நாகேஸ்வர ராவ் நியமனம் தொடர்பாக தெரிவித்த கருத்துக்களால் பூஷண் ஏற்கனவே அவமதிப்பு புகார் நடவடிக்கைக்கு உள்ளாகியிருக்கிறார்.
ஆனால், அவரும் ஷோரியும், தாங்கள் பிரச்சினையில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்காக இந்த வழக்கில் சர்ச்சைக்குரிய அறிக்கைகளை வெளியிடாமல் கவனமாக இருக்கின்றனர். இதை அவர்கள் தொடர்ந்து மனதில் கொள்ள வேண்டியது முக்கியம்.
வகாஷா சச்தேவ்
நன்றி: தி க்வின்ட்
https://www.thequint.com/news/law/key-takeaways-rafale-review-petitions-hearing-supreme-court-kk-venugopal
#PackupModi கட்டுரைகள் அனைத்தும் வேற லெவல் சார். வாழ்த்துகள் 👍💐