1992ல் நாடோடித் தென்றலில் பாரதிராஜா அறிமுகப் படுத்திய இந்த ஸ்ரீவள்ளி என்கிற ரஞ்சிதா தமிழ்த்திரையுலகில் அறிமுகமானாலும், தமிழ், தெலுங்கு, மலையாளம் என 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
திரைத்துறையில் உள்ள பெண்களுக்கு இருக்கும் அற்ப ஆயுளைப் போல, இவரும், சிறிது காலத்திற்குப் பிறகு, சின்னத் திரையில் தலை காட்டி விட்டு, திரையுலகை விட்டு விலகியே இருந்தார்.
கடந்த ஆண்டு மார்ச் 2010ல் புலனாய்வு பத்திரிக்கை என்று தன்னை அழைத்துக் கொள்ளும், நக்கீரனும், சன் டிவியும், தினகரனும், ரஞ்சிதா நித்யானந்தா என்ற சாமியாரோடு நெருக்கமாக இருக்கும் காட்சிகளை ஒளிபரப்பிய பிறகு, ரஞ்சிதாவின் வாழ்க்கை சரி செய்ய முடியாத வகையில் புரட்டிப் போடப்பட்டது.
சன் டிவி ஒளிபரப்பிய அந்தக் காட்சிகள், குடும்பத்தோடும், குழந்தைகளோடும் உட்கார்ந்து பார்க்க முடியாத வகையிலான மோசமான காட்சிகள். ப்ரைம் டைமில், அனைவரும் செய்தி பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தக் காட்சிகளை சன் டிவி ஒளிபரப்பியது.
நக்கீரன் இதழோ, நடிகை திரிஷா குளிக்கும் காட்சியை எப்படி ஃப்ரேம் ஃப்ரேமாக போட்டு காசு பார்த்ததோ அதே போல, இந்தக் காட்சிகளையும் வண்ணப் படங்களாக போட்டு காசு பார்த்தது. தினகரன் மற்றும் தமிழ் முரசு நாளேடும் இதற்கு விதிவிலக்கல்ல.
இந்தச் சமூகம் சாமியார்களிடம் வாழ்வுக்கான தீர்வுகளைத் தேடி செல்லும் வரை பல நித்யானந்தாக்கள் உருவாகிக் கொண்டுதான் இருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆன்மீகம் என்பது, இன்று பல்லாயிரம் கோடிகளை அள்ளித் தரும் ஒரு வளமான வியாபாரம். தனது சிந்தனைகளை நிறுவனமயப்படுத்தி வியாபாரம் ஆக்காத யு.ஜி.கிருஷ்ணமூர்த்தியைத் தவிர, அத்தனை சாமியார்களும் வியாபாரிகளே… இன்று பல்லாயிரக்கணக்கான கோடிகளில் புரண்டு கொண்டு ஆன்மீக வியாபாரம் நடத்திக் கொண்டிருக்கும், ஜக்கி வாசுதேவ் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உட்பட. நமது பிரச்சினைகளுக்கான தீர்வை நம்மை விட வேறு யார் கண்டறிந்து விட முடியும் ? பிரச்சினைகளுக்கான எளிதான இன்ஸ்டன்ட் தீர்வை தருவார்கள் என்று இந்த சாமியார்களை நம்பினால் அவர்கள் ஏமாற்றத் தானே செய்வார்கள் ?
நித்யானந்தாவை நம்பி அவர் பின்னால் அலைவதும், அவருக்கு நன்கொடை வழங்குவதும், அவர் ஒரு பெண்ணோடு நெருக்கமாக இருந்தார் என்று தெரியவந்ததும், அவர் படத்தை செருப்பால் அடித்து, அவர் ஆசிரமத்தை கொளுத்துவதும், மூடர்கள் செய்யும் செயலல்லவா ?
இந்தச் சாமியாரை அம்பலப் படுத்துகிறேன் பேர்விழி என்று, ரஞ்சிதா என்ற பெண்ணை அவமானப்படுத்துவது எந்த வகையில் நியாயம் ?
நேற்று வெளிவந்த குமுதம் ரிப்போர்ட்டர் இதழில், நக்கீரன் காமராஜின் புகைப்படத்தோடு, ஜாஃபர் சேட் தொடர்பாக வந்த ஒரு கட்டுரைக்காக இரண்டு நாட்களாக தையா தக்கா என்று குதித்திருக்கிறார் காமராஜ். அவரும் ஜாபரும் கூட்டு சேர்ந்து கொண்டு, கடந்த ஆட்சியில் ஆட்டம் போட்டார்கள் ? புகைப்படத்தோடு ஒரு செய்தியை வெளியிட்டதற்காக இப்படி குதிக்கும் காமராஜ், ரஞ்சிதாவை இப்படி சித்தரிக்கையில் சிந்தித்திருக்க வேண்டாமா ?
நாமும் ஒரு பெண் வயிற்றில்தானே பிறந்தோம்…. ? எத்தனை பெண்களோடு பழகுகிறோம் ? ஒரு பெண் நடிப்பை தொழிலாக கொண்டுள்ளார் என்ற ஒரே காரணத்துக்காக, அவர் படுக்கையறையில் எட்டிப் பார்க்கும் உரிமையை நமக்கு யார் கொடுத்தது ? இந்தக் காட்சிகள் ஊடகங்களில் வெளியான உடனேயே சவுக்கு, “எனக்கு வேற வழி தெரியல“ என்ற சிறுகதை மூலமாக தனது ஆதங்கத்தை பதிவு செய்திருந்தது.
நேற்று மாநகர ஆணையாளரிடம் தினகரன், நக்கீரன் மற்றும் சன் டிவி மீது புகார் அளித்துள்ளார் ரஞ்சிதா. புகார் அளித்து விட்டு, பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த ரஞ்சிதா, தமிழ்நாட்டுக்கு வந்தால் தான் கைது செய்யப் பட்டு விடுவோம் என்று மிரட்டப் பட்டதாக தெரிவிக்கிறார். இவரை மிரட்டியது தினகரன், நக்கீரன் மற்றும் சன் டிவி குழுமத்தைச் சேர்ந்தவர்களே என்று கூறுகிறார்.
நேற்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த நித்யானந்தா, 100 கோடி ரூபாய் கேட்டு மிரட்டி அந்தப் பேரம் 60 கோடிக்கு படிந்ததாகவும், நேற்று தெரிவித்தார். நித்யானந்தா சிடி வெளியானது எப்படி என்று ஜுன் மாதத்தில் வெளிவந்த சவுக்கு கட்டுரையில் உள்ள தகவல்களை நித்யானந்தாவின் கூற்று உண்மையாக்கியிருக்கிறது.
நித்யானந்தா ஒரு தந்திரக்கார சாமியார் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. இன்றைக்கு ரஞ்சிதாவுக்கு ஓரளவுக்கு ஆதரவு வரத் தொடங்கியிருந்தாலும், மார்ச் 2010ல் ரஞ்சிதாவின் நிலைமை என்ன என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.
இந்த காட்சிகள் ஊடகங்களில் வெளியாகிய உடன் யார் மேல் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் ? இந்தக் காட்சியை ஒளிபரப்பிய ஊடகங்கள் மீது தானே ? ஆனால், ரஞ்சிதா மீதும், நித்யானந்தா மீதும், சென்னையில் சில விஷமக் கார வழக்கறிஞர்கள் கண்ணாயிரத்திடம் புகார் அளித்தனர். அந்தப் புகாரில், நித்யானந்தா ஏமாற்றி விட்டார் என்றும், ஆபாசமாக நடந்து கொண்டு தமிழ்க் கலாச்சாரத்தை சீரழித்து விட்டார் என்றும், அந்தப் புகாரில் கூறப்பட்டிருந்தது. இவ்வாறு புகார் கொடுக்கச் சென்ற வழக்கறிஞர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படி இருக்கிறார்கள் என்பது சவுக்குக்கு நன்றாகத் தெரியும். ஆனால், பரபரப்புக்காக இது போன்ற ஒழுக்க சீலர் வேஷம் போட்டு, தமிழ்க் கலாச்சாரம் சீரழிந்து விட்டது என்று ஊளையிடுகிறார்கள்.
அந்தப் புகார் அப்போது கமிஷனராக இருந்த கண்ணாயிரத்தைச் சென்று அடைவதற்கு முன்பாகவே, கல்யாணி என்ற வழக்கறிஞர், சன் டிவி, நக்கீரன், தினகரன் மற்றும் தமிழ் முரசு ஊடகங்களின் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரை சரக்கடித்து விட்டு வாயைத் துடைக்கும் டிஷ்யூ பேப்பராக பயன்படுத்திய கண்ணாயிரம், வழக்கறிஞர்கள் கொடுத்த புகாரின் மீது மட்டும் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். வழக்கு பதிவு செய்தார்.
வழக்கு பதிவு செய்ய உத்தரவிடும் முன்பாக, கண்ணாயிரத்தின் தனிப்பட்ட நடவடிக்கைகளை இது போல படம் பிடித்துக் காட்டினால் எப்படி இருந்திருக்கும் என்பதை சிந்தித்துப் பார்த்திருக்க வேண்டும். அவருக்கு மிகவும் பிடித்தமான ஸ்காட்ச் விஸ்கியை பருகிய பிறகு, அவர் அடித்த கூத்துக்களை படம் பிடித்து சன் டிவியில் ஒளிபரப்பினால் எப்படி இருந்திருக்கும் என்பதை சிந்தித்துப் பார்த்திருக்க வேண்டாமா ?
ஆனால், தாமதமாக இருந்தாலும் தற்போதாவது ரஞ்சிதா புகார் கொடுக்க முன் வந்தார் என்பதில் மகிழ்ச்சியே… இந்தப் புகாரின் மீது எடுக்கப் படும் நடவடிக்கைகைள் தனி நபர்களின் அடிப்படை உரிமைகளை மீறி ஆபாசமான செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் ஒரு முறைக்கு இரு முறை யோசிக்க வேண்டும்.
எழுத்தாளர் ஞாநி ஓ பக்கங்களில் ரஞ்சிதா விவகாரம் தொடர்பாக, ரஞ்சிதாவுக்கு எழுதியிருக்கும் கடிதத்தை பிரசுரிப்பது பொருத்தமாக இருக்கும்.
அன்புள்ள ரஞ்சிதாவுக்கு, முதலிலேயே உங்களுக்கு ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். வீடியோவில் காட்டியபடி நித்யானந்தனுடன் நீங்கள் கொண்டிருந்த உறவை நான் ஆபாசமானதாகக் கருதவில்லை. அதில் எந்தக் குற்றமும் நீங்கள் செய்யவில்லை. அந்த வீடியோவை ஒளிபரப்பிய தொலைக்காட்சியை நடத்துபவர்களாகட்டும், வெளியிட்ட பத்திரிகையாளர்களாகட்டும், பார்த்த எண்ணற்ற பொதுமக்களேயாகட்டும் அவர்கள் யார் வீட்டுப் படுக்கையறைக்குள் கேமராவைக் கொண்டு போய் வைத்தாலும், அது பதிவு செய்யக் கூடிய காட்சி இதே போலவோ இதைவிட ‘கிளுகிளுப்பாகவோ’ தான் இருக்க முடியும். ஆண் & பெண் பாலுறவு என்பது அப்படித்தான் இருக்கும்.
தனியறைக்குள் நடந்ததை படம் எடுத்துக் கொண்டு வந்து ஓயாமல் 36 மணி நேரம் காட்டியதும், அதை அச்சிட்டு விற்று வியாபாரம் செய்ததும்தான் ஆபாசம் என்று நான் கருதுகிறேன்.
உங்களுடைய தனி நபர் உரிமைகள் மிக மோசமாக மீறப்பட்டிருக்கின்றன. நீங்கள்விரும்பும் ஆணுடன் உறவு கொள்வது முழுக்க முழுக்க உங்கள் உரிமை. தங்களை அது பாதித்தாலன்றி, அதில் தலையிடவோ, விமர்சிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது. அப்படிப் பார்த்தால் அது அதிகபட்சம் உங்கள் குடும்பப் பிரச்சினையாக இருக்கலாமே தவிர சமூகத்தின் பொதுப் பிரச்சினையே அல்ல.
இதுவே மேலை நாடாக இருந்தால், நீங்கள் உங்கள் அந்தரங்கத்தில் அத்துமீறியதற்காக அத்தனை ஊடகங்கள், பத்திரிகைகள் மீதும் வழக்கு தொடுத்து பெரும்தொகைகளை இழப்பீடாகப் பெறுவதற்கான சட்டப்பூர்வமான உரிமைகள் தெளிவாக இருக்கின்றன. நம் நாட்டில் அவையெல்லாம் இன்னும் சரியாக வடிவமைக்கப்படவில்லை என்பது வருத்தத்துக்குரியது.
நித்யானந்தா என்ற ஆன்மீக வாதி, ஊருக்கெல்லாம் பிரும்மச்சரியத்தை போதித்துவிட்டு தான் அதைப் பின்பற்றாத ஒரு போலி மனிதன் என்று அம்பலப்படுத்த ஒருவர் விரும்பினால், அதற்கு அவருக்கு முழு உரிமை இருக்கிறது. அரசியல் முதல் ஆன்மீகம் வரை, டி.வி. முதல் பத்திரிகை வரை, சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாக பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருப்போரை அம்பலப்படுத்த நடக்கும் முயற்சிகளை நான் ஆதரிப்பேன்.
அதே சமயம் அந்த வீடியோவில் உங்கள் முகத்தை மறைத்துவிட்டு வெளியிடுவதுதான் நியாயமானதாகவும் நேர்மையானதாகவும் இருந்திருக்க முடியும். ஏனென்றால் அம்பலப்படுத்தப்பட வேண்டிய போலி நீங்கள் அல்ல. இன்னொருவர்தான்.
அந்த வீடியோவில் உங்களுக்கு பதில் வேறு ஏதோ ஊர் பேர் தெரியாத பெண் அல்லது ஏதோ ஒரு அதிகாரி, தொழிலதிபர், அலுவலர் வீட்டுப் பெண்இருந்திருந்தால் இந்த அளவு மீடியா ஆனந்த தாண்டவம் ஆடியிருக்காது. நடிகை என்பவள் நம் சமூகத்தில் இன்னமும் பெருவாரியாகப் பலராலும் தேவடியாளாகவேக் கருதப்படுகிறாள். அவளைத் துகிலுரியவும், அதை ரசிக்கவும் கொன்டாடவும் மனநிலை இருக்கிறதே தவிர, அவளை மதிப்பதில்லை. புவனேஸ்வரி கைதின்போது வெளியான அவதூறு செய்திகளுக்காக வெறியாட்டம் ஆடிய நடிகர் சங்கமும் நடிக & நடிகைகளும் இப்போது உங்கள் விஷயத்தில் உரத்த மௌனம் சாதிப்பது வெட்கக்கேடானது. நீங்கள் ஒன்றும் விபசாரம் செய்ததாக அந்த வீடியோ சொல்லவில்லை. உங்களுக்கு விருப்பமான ஒருவருடன் உறவுகொள்கிறீர்கள். அவ்வளவுதான்.
யாருடன் உறவு கொள்ள வேண்டும் என்பது முழுக்க முழுக்க உங்கள் உரிமை. ஆனால் என்னைப் போன்றவர்களுக்குப் புதிராக இருப்பதெல்லாம் உங்களைப் போன்ற பல பெண்கள் ஏன் சாமியார்களிடம் போய் சிக்கிக் கொள்கிறீர்கள் என்பதுதான். இப்போது கூட ஒரு உயர் பெண் அதிகாரி, ‘சுவாமிஜி இந்த சோதனையை எல்லாம் கடந்து வருவார்’ என்று சொன்னதாகக் கேள்விப்பட்டேன்.
பலருக்கும் அப்படிப்பட்ட முட்டாள்தனமான பக்தி இருக்கிறது. அப்படி இந்தசாமியார்கள் நமக்கு அளிப்பதாகக் கூறும் மன நலத்துக்கும் உடல் நலத்துக்கும்அவர்கள் சொல்லும் வழிகள் மூன்றுதான். யோகா, மூச்சுப் பயிற்சி, தியானம்.இந்த மூன்றையும் கற்க கடவுளும் தேவையில்லை. மதமும் தேவையில்லை. சடங்குகளும் தேவையில்லை. கிருஷ்ணமாச்சாரியாரின் யோக மந்திரம் போன்றபல அமைப்புகள் ஒரு பள்ளிக்கூடம் போல இவற்றை சொல்லிக் கொடுத்துவிடுகின்றன. கடவுள் நம்பிக்கையற்றவர் என்று தன்னைக் கூறிக் கொள்ளும் நம்முதலமைச்சர் கூட இவற்றால் பயனடைய முடிந்திருக்கிறது.
நீங்கள் எங்கே என்ன படித்தீர்கள், உங்கள் குடும்பப் பின்னணி என்ன என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் பெருவாரியான ஆண்களும் பெண்களும் சாமியார்களிடம் தஞ்சமடைவதற்குக் காரணம், நம் குடும்பங்களும்கல்வி முறையும்தான்.
பத்து வாழ்க்கைத் திறன்கள் நம் ஒவ்வொருவருக்கும் தேவை என்று உலக சுகாதாரநிறுவனம் வரையறுத்திருக்கிறது. தன்னை அறிதல், தன்னைப் போல் பிறரைஉணர்தல், இன்னொருவருடன் சரியாக உறவாடக் கற்றல், உரையாடக் கற்றல்,எதையும் கேள்வி கேட்கப் பழகுதல், எதற்கும் நாமே பதில் தேடப் பழகுதல், தெளிவாக முடிவெடுத்தல், சிக்கல்களை அவிழ்த்தல், உணர்ச்சிகளை உணர்ந்து கொள்ளுதல், அழுத்தங்களை லேசாக்குதல் என்ற பத்து வாழ்க்கைத் திறன்களைப் பழகிவிட்டால் வாழ்க்கை இனிமையாகிவிடும்.
இந்த வாழ்க்கைத் திறன்களை நம் குடும்பத்தில் கற்கலாம். பள்ளியில் கற்கலாம். ஆனால் அதற்கு மாறாக ஒவ்வொரு பிரச்சினை வரும்போதும் கடவுள், கோவில், சாமியார், மடம் என்று குடும்பமே நம்மை வேறு திசைக்கு இழுத்துப் போய் விடுகிறது. செக்ஸ் எப்படி முழுக்க முழுக்க அந்தரங்கமான விஷயமோ அதே போல கடவுள் நம்பிக்கை என்பதும் முழுக்க முழுக்க அந்தரங்கமானதாக மட்டுமே இருந்தால் போதும் என்ற பார்வையை நாம் பெறுவதில்லை.
இதன் விளைவு உங்களைப் போன்றவர்கள் தன்னைத்தானே நம்பாமல்,சாமியார்களை நம்பத் தொடங்குகிறீர்கள்.
பல வருடம் நம்முடன் பழகிய பெற்றோரோ, உறவினரோ, நண்பர்களோ,ஆசிரியர்களோ காட்டாத வழியை முன்பின் தெரியாத ஒரு சாமியார் காட்டுவார் என்பதே பெரும் மூட நம்பிக்கைதான். இதைத்தான் தங்கள் முதலீடாக சாமியார்கள்வைத்துக் கொள்கிறார்கள்.
பேச்சுத் திறமை இருந்தால் அரசியலுக்குப் போய் பிழைத்துக் கொள்ளலாம் என்ற நிலை இப்போது இல்லை. அங்கே வாய்ப்புகள் குறைந்துவிட்டன. குடும்பத்துக்குள்ளேயே போட்டா போட்டி போடும் அளவுக்கு நெரிசலாகிவிட்டது.
எனவே சாமியாராவது நல்ல மாற்றுத் தொழிலாக இருக்கிறது. கொஞ்சம் யோகா,கொஞ்சம் தியானம், கொஞ்சம் சடங்கு, பத்து வாழ்க்கைத் திறன்களிலிருந்தும் கொஞ்சம் கிள்ளியெடுத்து பேச்சில் தெளித்தல், இத்துடன் காவி காஸ்ட்யூம் சேர்த்தால் சாமியார் தயார். கறுப்புப் பணத்தை கொண்டு வந்து கொட்டத் தொழிலதிபர்கள் தயாராக இருக்கிறார்கள். அதனால்தான் எந்த சாமியாரும் பின்தங்கிய ராமநாதபுரம் மாவட்டத்துக்குப் போவதில்லை. ஈரோடு, கோவை என்று வளமான பகுதிகளில் மடம் வைக்கிறார்கள்.
அடுத்த ஸ்டெப் அரசியல் செல்வாக்கு. உங்கள் நண்பர் நித்யானந்தா அதிலேதான் வழுக்கிவிட்டார். அரசியல் செல்வாக்கு இருக்கும் எந்த சாமியாரும் இதுவரை அம்பலப்பட்டதில்லை. பெரும் கூட்டத்தை திரட்டி அரசியல்வாதிகளை பயமுறுத்தினால், கூட்டணிக்கு வந்து விடுவார்கள். வீட்டுக்கே அழைத்து ஆசி கேட்பார்கள். ஒரு கூட்டணி சிக்கலானால் இன்னொரு கூட்டணி அரசியலில் அமைப்பது போல இதிலும் அமைக்கலாம். அப்போது எதிலாவது சிக்கினாலும் வழக்கு சாட்சிகள் கூட பல்டி அடிப்பார்கள்.
இந்த தந்திரங்களை இன்னும் நித்யானந்தா சரியாகப் பழகிக் கொள்ளாததால் அடிபட்டுவிட்டார். கூட சேர்ந்து நீங்களும் அடிபட்டிருக்கிறீர்கள் என்பதுதான் பாவமாக இருக்கிறது.
சாவித்திரி முதல் காஞ்சனா, கனகா, நீங்கள் வரை நடிகைகளின் வாழ்க்கை பெரும்பாலும் சோகமும் வேதனையும் நிரம்பியதாகவே முடிகின்றன. அதற்குக் காரணம் கல்வி இல்லாதது, தப்பானவர்களையே நம்புவது, எது உண்மையான ஆனந்தம் என்ற அறிவை வளர்த்துக் கொள்ளாதது, தற்காலிக மகிழ்ச்சிகளில் தன்னைத் தானே தொலைத்துக் கொள்வது இவையெல்லாம் தான்.
உங்கள் அனுபவங்களை நீங்கள் பகிரங்கமாகச் சொல்ல முன்வரவேண்டும்.அதிலிருந்து வருங்கால நடிகைகள் மட்டுமல்ல, ஒவ்வொரு பெண்ணும் கற்றுக்கொள்ள நிறைய பாடங்கள் இருக்கும் என்று நான் நம்புகிறேன். நம்முடைய வாழ்க்கையை இன்னொருத்தர் தீர்மானிக்க விட்டுவிட்டால் என்னவெல்லாம் கஷ்டங்கள் ஏற்படும் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். என் வாழ்க்கை என் கையில் என்ற உறுதியோடு நம் சமூகத்தில் ஒவ்வொருவரும் வளர, உங்கள் பங்களிப்பாக உண்மைகளை உரக்கச் சொல்லுங்கள்.
உங்களைச் சூழ்ந்துவிட்ட இழிவிலிருந்து விடுதலை பெற அது ஒன்று தான் வழி.
அன்புடன்
ஞானி
தற்போது, ரஞ்சிதா மற்றும் நித்யானந்தா கொடுத்துள்ள புகார்களின் மீது பாரபட்சமில்லாமல் விசாரணை நடத்தப் படுவதோடு மட்டுமல்லாமல், ரஞ்சிதா மற்றும் நித்யானந்தா மீது வழக்கு பதிவு செய்யச் சொல்லி உத்தரவிட்டும், வழக்கறிஞர் கல்யாணி அளித்த புகாரின் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் தன் கடமையில் இருந்த தவறிய காரணத்துக்காக அப்போதைய கமிஷனர் கண்ணாயிரத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்ப்பார்ப்பு. ஜெயந்திரர் மீது துணிச்சலாக நடவடிக்கை எடுத்த ஜெயலலிதா, இதையும் செய்வார் என்று நம்புவோம்.