அழகிரி உத்தரவின் படியே தா.கிருஷ்ணன் கொல்லப் பட்டார் என்று நாம் சொல்லவில்லை. அழகிரியின் கண்ணுக்கு கண்ணாக, இருந்த எஸ்ஸார் கோபி தான் இப்படிச் சொல்கிறார்.
நேற்று முன்தினம், நில அபகரிப்பு மோசடிக் புகாரில் சிக்கியுள்ள பொட்டு சுரேஷ் மற்றும் எஸ்ஸார் கோபியின் வீடுகளில் காவல்துறையினர் சோதனையிட்டனர். அந்த சோதனையின் போது, பொட்டு சுரேஷ் வீட்டில் இருந்து எஸ்ஸார் கோபி அழகிரிக்கு எழுதிய கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றி, உளவுத்துறையால் பத்திரிக்கைகளுக்கு லீக் செய்யப் பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
அந்த கடிதத்தில் உள்ளவற்றை அப்படியே சவுக்கு வாசர்களுக்கு அளிப்பதில் சவுக்கு பெருமை கொள்கிறது.
நான் உயிராக நினைத்து இருக்கும் அண்ணன் அழகிரி அவர்களுக்கு, உங்களின் உண்மை விசுவாசி தம்பி எஸ்ஸார் கோபி எழுதிக் கொள்ளும் உள்ளத்தின் வெளிப்பாடு.
முதலில் நான் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளேன். எதற்காக என்றால் நான் தீவிர அரசியலுக்கு வரக் காரணம் பணம் சம்பாதிப்பதற்காகவோ பதவி வாங்குவதற்காகவோ அல்ல. என் குடும்பமே லீலாவதி கொலை வழக்கில் சம்பந்தப் படாமலே சிக்கியதால் மருதுவையும் மாமா முத்துராமலிங்கம் அவர்களையும் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகத் தான் நான் அரசியலுக்கு வந்தேன்.
அதனால்தான் ஒரு வெறியுடன் தங்கள் கட்டளைகளை செய்ய முடிந்தது. உதாரணம் அருப்புக் கோட்டைத் தொகுதி இடைத் தேர்தலில் கடுமையாக உழைத்து வெற்றி பெறச் செய்தோம். அந்த வழக்குக்காக ஏழு வருடம் அலைந்து வெற்றி பெற்றேன். அடுத்து மிசா பாண்டியன் கொலை வழக்கில் விசாரணை என்ற பெயரில் தங்களின் விசுவாசி என்ற ஒரே காரணத்துக்காக 50 ரூபாய் வழிப்பறி செய்ததாக வழக்கு போட்டார்கள். அதுவும் நம்முடைய ஆட்சியில். அந்த வழக்குக்காக இரண்டு வருடம் அலைந்து அந்த வழக்கை முடித்தேன். அடுத்து தங்களை கட்சியை விட்டு நீக்கிய நேரத்தில், என்னுடைய ஏரியாவில் தான் முதன் முதலாக பஸ் எரித்தோம். அந்த வழக்கு இன்னும் நடந்து கொண்டு இருக்கிறது. அதே போல் வெளியில் சொல்ல முடியாத எவ்வளவோ விஷயங்களைச் சொன்னீர்கள். சீனிவேல் MLA அலுவலகத்தை எரித்தது. அக்னி ராஜ் வீட்டில் காரை எரித்தது. PTR அலுவலகத்தில் கண்ணாடி உடைத்தது. இவை எல்லாமே நீங்கள் சொல்லி நான் செய்தது. கடைசியாக தா.கி கொலை. இந்த வழக்கில் நான் பட்ட வேதனை கொஞ்ச நஞ்சமல்ல. ஒவ்வொரு போலீஸ் காரனும் கேட்ட கேள்வி இருக்கிறதே.. சொல்லவே நா கூசுகிறது. அவ்வளவு கேவலமாக பேசினார்கள். உதாரணத்திற்கு ஒன்றை மட்டும் சொல்கிறேன். உன் மனைவியிடம் எப்படி படுப்பாய் செய்து காமி என்று S.I. ஜெயக்குமார் என்பவன் கேட்டான். இதை விட கேவலமாக ஒரு மனிதனை அசிங்கமாக கேட்பதற்கு வார்த்தைகள் இருக்கிறதா ? இதையெல்லாம் நான் ஏன் சொல்கிறேன் என்றால், நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அதைப்பற்றி எல்லாம் உங்களுக்குத் தெரியாது என்று இப்போது நினைக்கிறேன். நண்பர் சுரேஷ் அவர்கள் என்னிடம் பேசும்போது என் உடன் உள்ள ஒவ்வொருவருக்கும் பதவி கொடுத்தாகி விட்டது. உங்கள் தம்பி சேர்மேன், கார்த்திக் ஒன்றிய செயலாளர், சேட் நகர் செயலாளர், சீனி வட்டச் செயலாளர் அப்புறம் எனக்கு தலைமை செயற்குழு உங்கள் கோட்டா முடிந்தது என்று சொன்னார். என் தம்பியை சேர்மேன் ஆக்கும் எண்ணம் சத்தியமாக எனக்கு கிடையாது. கார்த்திக்கைத் தான் நான் சேர்மேன் ஆக்குவேன் என்று சொன்னேன். ஆனால் என் குடும்பமே அதை எதிர்த்து என் தம்பிக்கு வாங்கிக் கொடுக்க என்னை நிர்பந்தித்தார்கள். அதனால் தான் நான் என் அம்மாவிடம் இன்று வரை பேசாமல் இருக்கிறேன். அந்த சேர்மன் பதவியை கைப்பற்ற 30 லட்ச ரூபாய் வரை செலவு செய்துதான் சேர்மன் ஆக்கினேன். கார்த்திக், சீனி, சேட் போன்றவர்களுக்கு பதவி கொடுத்தீர்கள் என்றால் அவர்கள் ஒன்றும் சும்மா வாங்கவில்லை. அவர்களும் வழக்கில் சிக்கி சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆட்கொள்ளப் பட்டார்கள். நமக்காக கஷ்டப்பட்டவர்களுக்கு…..
எதற்கு எடுத்தாலும் நண்பர் சுரேஷ் சொல்வது உங்கள் குடும்பத்திற்கு ஒரு பதவி கொடுத்து விட்டாகி விட்டது என்று. திரும்ப திரும்ப நான் பதவி கேட்கும் போதெல்லாம் இதையே சொல்வார். அப்படி பார்த்தால் தளபதி தங்கைக்கு நகராட்சி தலைவர் பதவி, தளபதிக்கு MLA சீட், அதில் தோற்ற பின்பு நகர் மாவட்டச் செயலாளர் பதவி, கவுஸ் பாட்ஷாவிற்கு துணை மேயராக இருக்கும் போதே அதை ராஜினாமா செய்து விட்டு MLA பதவி. இவர்கள் எல்லாம் அப்படி உங்களுக்காக என்ன தியாகம் செய்தார்கள். நான் செய்த தியாகத்தில் 1% ஆக விசுவாசத்துடன் நடந்து இருப்பார்களா ? நான் கவுன்சிலர் சீட் கேட்டேன், ஆவின் சேர்மேன் கேட்டேன். எதையாவது கொடுத்தீர்களா ? ஏன் கொடுக்கவில்லை என்ற காரணமும் எனக்கு தாங்கள் சொல்லவில்லை. எல்லாரையும் போல எனக்கும் பதவிக்கு வர வேண்டும் என்ற ஆசை இருக்காதா அப்படி நான் உங்களுக்கு என்ன துரோகம் செய்து விட்டேன் அண்ணன் அவர்களே..
துரோகம் என்பது எங்கள் வம்சத்திற்கே தெரியாது. மனதில் பட்டதை பேசுவேன். ஒருவரைப் பற்றி போட்டுக் கொடுப்பதோ, பொய் சொல்லவோ எனக்குத் தெரியாது. பத்து ஆண்டு காலம் உங்களின் விரல் அசைவிற்காக காத்திருந்து ஒவ்வொரு வேலையையும் மன நிறைவோடு செய்திருக்கிறேன். மத்திய தொகுதி இடைத் தேர்தலில் ராஜன் செல்லப்பாவையும், முன்னாள் அமைச்சர்களையும் ஓட ஓட விரட்டி அடித்தேன். அதிமுக கரை வேட்டியே தெரியாத அளவுக்கு அந்த தேர்தல் நடத்தி வெற்றி பெற்றோம். நீங்கள் பதவி கொடுத்த யாராவது இப்படி செய்தார்களா ? நாளை அதிமுக ஆட்சிக்கு வந்தால் என்னை சும்மா விடுவார்களா ? இதை ஏன் நீங்கள் சிந்திக்கவில்லை. யாரோ ஒருவரை திருமங்கலத்தில் வேட்பாளராக நிறுத்தப் போகிறீர்கள். என்னை ஏன் மறந்தீர்கள். எனக்கு என்ன தகுதி இல்லை ? இன்று (16.12.2008) உங்கள் வீட்டிற்கு வந்தேன். வீட்டில் இருந்து கொண்டே இல்லை என்று சொல்லி அனுப்பினீர்கள். அதற்கு நீங்களே கூப்பிட்டு, இப்ப வேண்டாம் எஸ்ஸார் பின்னாடி பார்ப்போம் என்று சொன்னால் நான் என்ன கேட்காமலா போய் விடுவேன். இவ்வளவு கஷ்டப்பட்ட போதும் எங்காவது உங்களைப் பற்றி விமர்சனம் பண்ணியதுன்டா, ஒரு வார்த்தை கூட உங்களை குறைத்துப் பேசியிதில்லை. நான் பதவி கேட்கும் போதெல்லாம் என்னை தட்டி கழித்தால் நான் என்ன செய்வேன். யாரிடம் தான் போவேன். எனக்கு உங்களைத் தவிர யாரையும் தெரியாது. நீங்களே பதவி கொடுக்கவில்லை என்றால் எனக்கு யார் பதவி கொடுப்பார்கள். இன்று உங்களால் பதவிக்கு வந்த எல்லோரும் உங்களுக்கு துரோகம் செய்தவர்கள் தான். என்னை மட்டும் ஏன் ஒதுக்கி வைத்துள்ளீர்கள். இப்போது இருக்கின்ற அரசியல் சூழ்நிலையில் எல்லோருமே பணம் பதவிக்காக அரசியல் பண்ணுகிறார்கள். நான் வழக்கில் சிக்கியவர்களை காப்பாற்ற வந்து நானும் வழக்கில் சிக்கி பல இன்னல்களை சந்தித்து விட்டேன். இப்போது எல்லா பிரச்சினையில் இருந்து மீண்டு விட்டேன் என்றால் அதற்கு காரணம் நீங்கள் தான். அதற்கு என்னுடைய நன்றி.
இனிமேல் ஆவது நிம்மதியாக என் மனைவி குழந்தைகளுக்கு ஆக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். மனதில் பட்டதை எழுதி விட்டேன். நான் எழுதியதில் ஏதாவது அண்ணன் மனம் புண்படும்படி எழுதியிருந்தால் என்னை மன்னித்து விடும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன் தங்கள் நலம் விரும்பும்
எஸ்ஸார் கோபி
17.12.2008