ஒரு ட்வீட்டின் விலை 9 ஆயிரம் ரூபாயா என்று உங்களுக்கு வியப்பாக இருக்கும். ஆனால் இது உண்மை.
அதுவும் ஒரு ட்வீட்டுக்கு இவ்வளவு செலவு செய்வது சென்னை மாநகராட்சி என்பது கூடுதல் அதிர்ச்சியளிக்கும் செய்தி.
சமூக வலைத்தளங்களின் அசுர வளர்ச்சியை அடுத்து, பெரும்பாலான அரசு துறைகள், குறிப்பாக, மக்கள் தொடர்பு இருக்கும் துறைகள், மக்களோடு நேரடியாக தொடர்பு இருக்கும் வகையில், சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பகிர்வதோடு பொதுமக்களோடு உரையாடுவதும் அவசியம் என தமிழக அரசின் துறைகள் மட்டுமல்ல, உலகலாவிய அளவில் இப்போக்கு வளர்ந்துள்ளது.
ஒன்றிய அரசின் பல்வேறு திட்டங்கள், அது குறித்த தகவல்கள், இது போல சமூக வலைத்தளங்களின் ஊடாகவே பகிரப்படுகிறது.
இந்த அடிப்படையில்தான் சென்னை மாநகராட்சியும் பொதுமக்களோடு சமூக வலைத்தளங்களில் மாநகராட்சியின் பணிகளை விளம்பரப்படுத்துவதோடு, பொதுமக்களுக்கு தகவல் பரிமாற்றங்கள் செய்யவும் முடிவெடுத்தது.
அதிமுக ஆட்சியில் ஒரு உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரு ப்ளீச்சிங் பவுடர் வாங்குவதாக இருந்தால் கூட அன்றைய உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியின் சம்மதம் இல்லாமல் வாங்க முடியாது. உள்ளாட்சி அமைப்புகளை தனது கைப்பிடிக்குள் வைத்திருந்தார் வேலுமணி. உள்ளாட்சி அமைப்புகள் மட்டுமல்ல, கொங்கு மண்டலத்தில் ஒரு இன்ஸ்பெக்டர் நியமனம் என்றாலும் வேலுமணிதான் முடிவெடுப்பார். அவர் வார்த்தையே வேதவாக்கு.
இந்த அடிப்படையில், சென்னை மாநகராட்சி, ஒரு ஆண்டுக்கு சென்னை மாநகராட்சியின் சமூக வலைத்தளங்களை பராமரிக்க ஒப்பந்த புள்ளிகள் கோருகிறது. டிஜிட்டல் வளர்ச்சிக்கு பிறகு தொழில்நுட்பம் பெரிய அளவில் வளர்ந்து விட்டதால், மின் டெண்டர்களே விடப்படுகின்றன.
மின் டெண்டர்கள் என்றதும், டெண்டர்கள் நியாயமாக நடைபெறுகிறதோ என்று எண்ணி விடாதீர்கள். கணினி தொழில்நுட்பத்தில் WhiteListing என்று ஒரு டெக்னாலஜி உள்ளது. இந்த டெக்னாலஜியை பயன்படுத்தினால், ஒரு குறிப்பிட்ட ஐபி அட்ரஸுக்கு மட்டுமே அந்த டெண்டர்கள் தொடர்பான இணையதளம் வேலை செய்யும். இதர ஐபி அட்ரஸ்களுக்கு அந்த இணையதளம் செயல்படாது.
இந்த WhiteListing முறையை பற்றி தெரிந்து கொள்ள இணைப்பு
சமூக வலைத்தளத்தை நிர்வகிக்க, டெண்டர் விடப்பட்டதும், இந்த ஒப்பந்தம் சென்னையை சேர்ந்த KS Smart Solutions என்ற ஒரு நிறுவனத்துக்கு கொடுக்கப்படுகிறது. இவர்களின் பணி, ஒரு ஆண்டுக்கு, சென்னை மாநகராட்சியின் ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யுட்யூப் போன்ற சமூக வலைத்தளங்களை நிர்வகிக்க வேண்டும். ஒரு வருடத்துக்கு இப்பணியை செய்வதற்கான தொகை எவ்வளவு தெரியுமா ?
2 கோடியே 31 லட்சத்து 26 ஆயிரத்து 761 ரூபாய். இந்த நிறுவனம்தான் இப்போது சென்னை மாநகராட்சியின் சமூக வலைத்தளங்களை நிர்வகிக்கிறது.
சரி, KS Smart Solutions முறைகேடாகத்தான் இந்த டெண்டர்களை பெற்றார்கள் என்பதை எதை வைத்து முடிவு செய்வது ?
யார் அந்த நிறுவனத்தை நடத்துவது ? அவருக்கும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்பி.வேலுமணிக்கும் என்ன தொடர்பு என்பதை வைத்துத்தான்.
இந்த KS Smart Solutions நிறுவனத்தை தொடங்கியவர் சங்கர் வரதராஜன். இவர், KS Smart Solutions நிறுவனத்தை தவிர மேலும் 16 நிறுவனங்களை நடத்தி வருகிறார். இதர நிறுவனங்கள் எல்லாவற்றையும் பார்த்தால், உப்புமா நிறுவனங்கள் போலவே இருக்கிறது.
இவர் வேலுமணியோடு நெருக்கமாக இருந்து அதன் மூலம்தான் இந்த ஒப்பந்தத்தை பெற்றார் என்பதற்கான தரவுகள் இல்லை.
இந்த KS Smart Solutions நிறுவனத்தில், ஶ்ரீராம் கர்ணன் என்பவர் இயக்குநர் ஆகிறார். அவர் இயக்குநராகும் தேதி 26 டிசம்பர் 2020. இந்த ஶ்ரீராம் கர்ணன் யார் என்பதில்தான் சூட்சுமமே அடங்கியிருக்கிறது.
தமிழகத்தில் டி.என்.ஹரிஹரன் என்றொரு ஐஏஎஸ் அதிகாரி இருக்கிறார். இவர் க்ரூப் 1 தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டு 2003ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக நியமனம் செய்யப்படுகிறார். இவர் எஸ்பி.வேலுமணிக்கு மிகவும் நெருக்கம். இரண்டு வருடங்களுக்கு மேலாக கோவை மாவட்ட ஆட்சியராக இருந்தார். பின்னர் நகராட்சி நிர்வாக இயக்குநராக நியமிக்கப்படுகிறார். இதையடுத்து, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் இயக்குநராக நியமிக்கப்படுகிறார்.
இவர் இவ்வாரியத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டபோதே சர்ச்சைகள் எழுந்தன. ஏனெனில், இவ்வாரியத்துக்கு தலைவராக முதன்மை செயலாளர் அந்தஸ்த்தில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள்தான் நியமிக்கப்படுவார்கள். ஆனால், இவரை வேலுமணி நியமித்தது, புருவங்களை உயர்த்தியது. இணைப்பு
இந்த ஹரிஹரனுக்கு சுஷ்மித் குமார் ஹரிஹரன் என்று ஒரு மகன் உள்ளார். சுஷ்மித் குமாருக்கு, 6 பிப்ரவரி 2019 அன்று திருமணம் நடக்கிறது. மனைவி பெயர் வைஷ்ணவி கர்ணன். இந்த வைஷ்ணவியின் தந்தைதான், KS Smart Solutions நிறுவனத்தில் 26 டிசம்பர் 2020 அன்று புதிதாக இயக்குநராக இணைந்த ஶ்ரீராம் கர்ணன்.
ஹரிஹரன் ஐஏஎஸ்ஸின் சம்பந்திதான் ஶ்ரீராம் கர்ணன். இவர்தான் திடீரென்று 26 டிசம்பரில் KS Smart Solutionsத்தில் இயக்குநராகிறார்.
KS Smart Solutions நிறுவனத்தின் மொத்த முதலீடு எவ்வளவு தெரியுமா ? வெறும் ஒரு லட்சம். ஒரு லட்ச ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட நிறுவனத்துக்கு 2.31 கோடி ரூபாய் ஒப்பந்தம்.
இது மட்டும்தான் ஹரிஹரனுக்கும் KS Smart Solutions நிறுவனத்துக்கும் தொடர்பா என்றால் இல்லை.
இந்நிறுவனத்தில் செப்டம்பர் 2019ல் இயக்குநராக இணைந்த மற்றொருவர் ஹரிஹரன் ஐஏஎஸ்ஸின் மகன் சுஷ்மித் குமார் ஹரிஹரன். இவர் தனது லிங்கிட்இன் பக்கத்தில், KS Smart Solutions நிறுவனத்தில் செப்டம்பர் 2019 முதல் இயக்குநராக இருப்பதாக அவரே பதிவிட்டிருக்கிறார்.
திருகல் வேலை செய்து, KS Smart Solutions நிறுவனம் ஒப்பந்தம் பெற்றுள்ளது என்பது தெளிவாகி விட்டது. சரி இந்நிறுவனத்துக்கு சமூக வலைத்தளங்களை நிர்வகிக்க 2.31 கோடி கொடுத்தது நியாயமா ?
சென்னை மாநகராட்சியின் ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யுட்யூப் பக்கங்களை ஆராய்ந்ததில், சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு ஏழு போஸ்ட் வருகின்றது. இவற்றை உருவாக்குவதில் மூளை உழைப்பு பெரிதாக இருப்பதாக தெரியவில்லை. தடுப்பூசி எந்த இடத்தில் போடப் படுகிறது. மாஸ்க் அணியுங்கள். மாநகராட்சி குப்பை அள்ளுவது, போல பதிவுகள் வருகின்றன. ஒரு பதிவு உருவாக்கப்பட்டு, அவை காப்பி பேஸ்ட் செய்யப்படுகின்றன.
சில நாட்களில் வெறும் 2 பதிவுகள். சில நாட்கள் 10 அல்லது 12. சில நாட்களில் பதிவுகளே சென்னை மாநகராட்சியின் பக்கங்களில் இல்லாமல் இருக்கிறது. ஆக சராசரியாக ஒரு நாளைக்கு ஏழு பதிவுகள் சென்னை மாநகராட்சியின் சமூக வலைத்தள பக்கங்களில் வருகிறது என்று எடுத்துக் கொண்டால், 365 நாட்களுக்கு (மொத்த ஒப்பந்த காலம்) 2555 பதிவுகள் வருகின்றன.
ஒரு வருடத்துக்கு சமூக வலைத்தளங்களை நிர்வகிக்க மாநகராட்சி KS Smart Solutions நிறுவனத்துக்கு அளித்த தொகை 2,31,26,761 ரூபாய். இரண்டு கோடியே 31 லட்சத்து 761 ஆயிரம் ரூபாய்.
இதை KS Smart Solutions ஒரு வருடத்துக்கு பதிவு செய்யும் மொத்த பதிவுகளான 2555 பதிவுகளில் வகுத்தால் 9,051 ரூபாய் வருகிறது.
இப்படி ஒரு ட்வீட்டுக்கு 9051 ரூபாய் சென்னை மாநகராட்சி செலவு செய்ய வேண்டிய அவசியம் என்ன ?
சென்னை மாநகர காவல் துறையின் சமூக வலைத்தள பக்கங்களை உதவி ஆய்வாளரும், காவலர்களும் நிர்வகிக்கின்றனர். இதே போல, பல அரசு துறைகளில் விசாரணை செய்ததில், அவர்களும் அத்துறை பணியாளர்களையே பயன்படுத்துகிறார்கள் என்பது தெரிய வருகிறது.
இக்கட்டுரைக்காக, ஹரிஹரனை பற்றி விசாரிக்க ஒரு ஐஏஸ் அதிகாரியிடம் பேசியபோது, “நான் மாவட்ட ஆட்சியராக இருக்கிறேன். எங்கள் மாவட்ட செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களில் வருவாய்த் துறை ஊழியர்கள்தான் பதிவிடுகிறார்கள். இதற்கு எதற்கு 2.31 கோடி” என வியந்தார்.
நிலைமை இப்படி இருக்க, சென்னை மாநகராட்சி மட்டும் ஏன் 2.31 கோடிக்கு அதன் சமூக வலைத்தள பக்கங்களை நிர்வாகம் செய்ய நமது வரிப்பணத்தை செலவிட வேண்டும் என்பதுதான் முக்கிய கேள்வி.
இக்குற்றச்சாட்டு குறித்து உங்கள் பதில் என்ன என்று ஹரிஹரன் ஐஏஎஸ் அவர்களிடம், வாட்ஸப் செய்தி அனுப்பியபோது அவர் பதிலளிக்கவில்லை. அவர் பதில் வந்ததும், கட்டுரையில் அது சேர்க்கப்படும்.
அதிமுக அரசில் நடைபெற்ற பகாசுர ஊழல்களுக்கு, இந்த ஊழல் ஒரு சிறு துளி. தோண்ட தோண்ட இன்னும் நம்மை அதிர்ச்சியடைய வைக்கும் பல ஊழல்கள் வெளியே வர உள்ளன.
மக்கள் பணத்தை சுரண்டிய கொள்ளையர்கள் சிறை செல்லட்டும்.
குறிப்பு : சென்னை மாநகராட்சியின் இந்த சமூக வலைத்தள நிர்வாக ஊழல் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை தன் விசாரணையை தொடங்கியிருக்கிறது.
அருமையான பதிவு
sp velimanikku kovai yil niraya sothu ullathu. matrum anaikattiyil periya idam vaanki resort kattuvathava oru vathanthi irukirathu.. athu pattiru yeluthavum
ஹரிஹரன் ஐஏஎஸ்,ஹரிஹரன் ஐஏஎஸ்ஸின் மகன் சுஷ்மித் குமார் ஹரிஹரன், கடந்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்பி.வேலுமணிஹரிஹரன் ஐஏஎஸ்ஸின் சம்பந்தி ஶ்ரீராம் கர்ணன். சுஷ்மித் குமார் ஹரிஹரன் என்று ஒரு மகன் உள்ளார். சுஷ்மித் குமாரு மனைவி வைஷ்ணவி மற்றும் இந்த ஊழ்வாதிகளுக்கு துணையாக இருந்த EPS, மாநகராட்சி நிர்வாகம் அனைவரையும் கைது செய்து இவர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்து, பினாமி சொத்துக்களையும் பறிமுதல் செய்து அரசின் வருவாயில் சேர்க்கவும் வேண்டும்.
ஊழ்வாதிகளுக்கு சிறை தண்டனையும், ஊழல் செய்த பணத்தை பறிமுதல் செய்து அரசின் வருவாயில் சேர்க்கவும் வேண்டும்.நல்ல புலன் ஆய்வு பதிவு.
This is a really good article and appreciate the action taken by current government based on your article
Sir.
From following your twitter account recently, I thought your focus has now been shifted more towards name shaming BJPians, but very glad to read this post after a long gap, in your style. This underscores that TN’s Assange is still quite active behind the screens. Post’s like these are your unique identity, please keep up the great work! Culprits swindling the public exchequer must not be spared. Even if he is the CM or the PM.
ஓட்டுக்கு பணம் ?
Those posts are a layman and also a single person job. Even the best final cut pro editors and website managers requires no more than a few lakhs for this kinda tasks. GCC could have appointed a dept employee and a few other external hires(if required). It does’t require investments amounting to crores. Moreover the contract must be benefitting the former minister S. P. Velumani in certain ways. The ruling party right now shall blacklist all of KS Solution’s each and every other such govt contracts.
At the EOD, Our taxes are being easily wasted. Keep up the people’s work Savukku!
சவுக்கு ஷங்கர் அவர்களே தயவுசெய்து இது குறித்து வழக்கு தொடுங்கல்
வாழ்க ஜனநாயகம்,வளர்க பண நாயகம் .
பாவம் நடுத்தர மக்கள். என்று தீருமோ இந்த மாதிரியான கொள்ளை செயல்கள்.