2002ம் ஆண்டு, 1 லட்சம் அரசு ஊழியர்கள் பதவி நீக்கம் செய்யப் பட்டது தொடர்பாக அமைக்கப் பட்ட மூன்று ஓய்வு பெற்ற நீதிபதிகள், போட்டி போட்டுக் கொண்டு, எப்படி அரசு ஊழியர்களை பதவி நீக்கம் செய்தது சரியே என்று தீர்ப்பளித்தார்கள் என்பது, வரலாறு.
திமுக ஆட்சியை எடுத்துக் கொண்டால், நீதிபதி சண்முகம் தலைமையில் இரண்டு விசாரணை கமிஷன்கள் அமைக்கப் பட்டன. முதல் கமிஷன் டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழில் வெளியான லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநருக்கும், தலைமைச் செயலாளருக்கும் இடையேயான உரையாடல் எப்படி வெளியாகியது என்பது குறித்து. இந்த கமிஷனின் அறிக்கை, கருணாநிதியின் மனதை குளிர வைக்கும் அளவுக்கு இருந்ததால், அடுத்து சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் தொடர்பான விசாரணை ஆணையத்துக்கும் சண்முகத்தையே நீதிபதியாக அறிவித்தார் கருணாநிதி.
நீதியரசர் சண்முகம் விசாரணை நடத்தும் போக்கு அலாதியானது. அவர் விசாரணை நடத்துவதை அருகில் இருந்து காணும் வாய்ப்பு கிடைத்ததால், தற்போதைய பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கும், சண்முகத்தையே விசாரணை ஆணைய தலைவராக நியமித்தால் அவர் எப்படி அறிக்கை கொடுத்திருப்பார் ? இப்படித்தான்.
விசாரணை ஆணைய அறிக்கை
அரசு ஆணை எண் 111 (நிலை) பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு) துறை நாள் 14.09.2011ன் படி, பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து நீதியரசர் சண்முகம் தலைமையில் அரசு விசாரணை ஆணையம் அமைத்தது.
விசாரணை ஆணைய வரம்புகள்.
1) 11.09.2011 அன்று பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு வழிகோலிய சூழ்நிலைகள் மற்றும் காரணங்கள்
2) 11.09.2011 அன்று காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைக்க துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டதா ? காவல்துறையினர் அவசியமின்றி சுட்டார்களா ? அத்துமீறல் ஏதேனும் இருந்ததா ? அவ்வாறெனில், தவறிழைத்த அதிகாரிகளை அடையாளம் கண்டு அவர்கள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து தெரிவித்தல்.
3) துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அரசு அளித்த இழப்பீடு போதுமானதா ? எவ்வளவு இழப்பீடு வழங்கலாம்.
4) ஆணையம் பரிந்துரைக்கும் வேறு ஏதாவது விஷயங்கள்.
இந்த விசாரணை ஆணைய வரம்புகளுக்கு விடை தேடும் வகையில், ஆணையம் விசாரணை நடத்தியது.
முதலில் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு காரணமாக அமைந்த இமானுவேல் சேகரன் என்பவரை விசாரிப்பதற்காக ஆணையம் சம்மன் அனுப்பியது. ஆனால் இமானுவேல் சேகரன் இறந்து விட்டதால் அந்த சம்மன் திரும்பி வந்து விட்டது.
அடுத்ததாக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், இந்தக் கலவரத்திற்கு பெரும் காரணமாக இருந்தவர் என்று சொல்லப்படும் ஜான் பாண்டியன் இந்த ஆணையம் முன்பு ஆஜராகினார். 11.09.2011 அன்று இமானுவேல் நினைவு தினத்திற்கு காவல்துறையினரின் தடையையும் மீறி செல்ல முயன்றீர்களா என்று ஆணையம் கேட்ட கேள்விக்கு, அதை மறுத்து பதிலளித்தார் ஜான் பாண்டியன்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கருவாடுகள் சிறந்த முறையில் கிடைப்பதாகவும், நீண்ட நாட்கள் சிறையில் இருந்ததால் கருவாடு சாப்பிட இயலாத காரணத்தால், கருவாடு சாப்பிட வேண்டும் என்ற ஆசையில் 11.09.2011 அன்று, ராமநாதபுரம் மாவட்டத்துக்கு சென்றதாகவும், அன்று ஞாயிற்றுக் கிழமை ஆனதால் பெரும்பாலான கருவாட்டுக் கடைகள் விடுமுறையில் இருக்கும் என்ற செய்தியை கேள்விப் பட்டு, செல்லவில்லை என்றும் தெரிவித்தார். இதற்கு ஆதாரமாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் “காய்ந்த கருவாட்டுக் கடை” என்ற கடையை நடத்தும் இசக்கி என்பவரை ஆணையம் விசாரித்தது. அவர் சனிக்கிழமை (10.09.2011) அன்று ஜான் பாண்டியன் தொலைபேசி மூலம் கருவாடு பற்றி விசாரித்ததாகவும், அவர்தான் ஞாயிற்றுக் கிழமை கடை விடுமுறை என்பதை தெரிவித்ததாக கூறினார். இதை மறுப்பதற்கு அரசுத் தரப்பில் எந்த ஆதாரத்தையும் தாக்கல் செய்யாத நிலையில், ஜான் பாண்டியனின் கூற்றை ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.
அடுத்தாக இந்த ஆணையம், துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்று சொல்லப் படும், காவல்துறை துணை ஆணையர் டாக்டர் செந்தில் வேலனை இந்த ஆணையம் விசாரித்தது. அவர் தனது சாட்சியத்தில், தான் அடையாறு துணை ஆணையராக பணியாற்றி வந்ததாகவும், ராமநாதபுரம் மாவட்டத்துக்கு சிறப்பு பணியாக தன்னை அரசு அனுப்பியதாகவும் தெரிவித்தார். ராமநாதபுரம் சிறப்புப் பணிக்காக செல்லும் போது, வழியில் இரண்டு பேர், தங்களுக்கு உடல் நிலை சரியில்லை என்று தன்னிடம் தெரிவித்ததாகவும், தான் மருத்துவம் படித்திருப்பதால் அவர்களுக்கு வைத்தியம் பார்த்து ஊசி போட்டதாகவும் தெரிவித்தார். இதற்கு ஆதாரமாக, தான் வாங்கிய எம்பிபிஎஸ் சான்றிதழின் நகலை சமர்ப்பித்தார். (சான்றுப் பொருள் 1)
மேலும், அவர் போட்ட ஊசிக்கான சான்றாக, இரண்டு பயன்படுத்தப் பட்ட சிரின்ஞ்சுகளை தாக்கல் செய்தார் (சா.பொ.2). அவர் மருத்துவப் படிப்பு படித்திருப்பதால், அவர் இரண்டு நோயாளிகளுக்கு வைத்தியம் பார்த்தார் என்பதை மறுப்பதற்கு யாரும் எந்த ஆதாரத்தையும் தாக்கல் செய்யாத நிலையில், செந்தில் வேலன் தாக்கல் செய்திருக்கும் இரண்டு காலி சிரின்ஞ்சுகளை நம்பாமல் புறந்தள்ள இயலவில்லை.
தென் மண்டல ஐஜி ராஜேஷ் தாஸ் என்பவரை ஆணையம் சாட்சியாக விசாரித்தது. ராஜேஷ் தாஸ் தனது சாட்சியத்தில், சம்பவம் நடந்த அன்று ஞாயிற்றுக் கிழமை ஆதலால் தான் ஓய்வில் இருந்தாகவும், அன்று அரசு விடுமுறை என்றும் தெரிவித்தார். மேலும், ஞாயிற்றுக் கிழமை என்பதால், ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்த அனைத்து துப்பாக்கிகளும், நடிகர் விஜய் நடிக்கும் வேலாயுதம் திரைப்பட ஷுட்டிங்குக்கு வாடகைக்கு விடப் பட்டிருந்ததாகவும், அதனால் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்த வாய்ப்பே இல்லை என்றும் தெரிவித்தார். ராஜேஷ் தாஸ் கூறிய இந்த விபரத்தின் உண்மைத் தன்மையை சோதிக்க நடிகர் விஜய்க்கு சம்மன் அனுப்பப் பட்டது. அவர் நேரில் ஆஜராகவில்லை. ஆனால் ஆணையத்திற்கு ஒரு கடிதத்தை எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில்
நான் அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
ஓடிப் போனா வீடு போயி
சேர மாட்ட
என்ற பாடல் வரிகளையும்,
நான் திங்கிறது பன்னு
எனக்கு எதுக்குடா கன்னு
மற்றும்
துப்பாக்கில இருக்கறது தோட்டா
நான் போட்ற செருப்பு பேட்டா
என்ற இரண்டு பன்ச் டயலாக்குகளையும் எழுதி அனுப்பியிருந்தார். அவரின் இந்த பாடல் வரிகளையும் பன்ச் டயலாக்குகளுக்கும் என்ன பொருள் என்று இந்த ஆணையத்திற்கு விளங்காததால், இதற்கு விளக்கம் அளிக்குமாறு, உளவுத்துறையின் கூடுதல் டிஜிபி டி.ராஜேந்திரன் என்பவருக்கு இந்த ஆணையம் சம்மன் அனுப்பியது.
அவர் தனது சாட்சியத்தில், நடிகர் விஜய், அந்த துப்பாக்கிகள் தனது பட ஷுட்டிங்கில் சம்பவம் நடந்த அன்று பயன்படுத்தப் பட்டிருக்கின்றன என்பதை ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
நான் அடிச்சா தாங்க மாட்ட என்ற பாடலை பாடிக் கொண்டே எதிரிகளை துப்பாக்கியால் சுடுவது போன்ற காட்சிக்காக பயன்படுத்தியது தெளிவாகத் தெரிகிறது என்றும், அந்த பன்ச் டயலாக்குகள் இரண்டும் அவர்தான் துப்பாக்கிகளை அன்று பயன்படுத்தியுள்ளார் என்பதை தெளிவாக ஒப்புக் கொண்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், அரசு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதால், பெரும்பாலான மாவட்டங்களில் அரசு விடுமுறை நாட்களில் காவல்துறையினர் துப்பாக்கிகளை வாடகைக்கு விட்டு, அதன் மூலம் வரும் வருமானத்திலே காவல்துறையினருக்கான ஊதியம் வழங்கப் பட்டு வருவதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்தார் (சா.பொ.3)
உளவுத் துறையின் கூடுதல் டிஜிபிக்கு இந்த விபரங்கள் தெளிவாகத் தெரிந்திருப்பதால், அவரின் சாட்சியத்தை இந்த ஆணையம் அப்படியே ஏற்றுக் கொள்கிறது.
7 பேர் இறந்ததற்கு யார் பொறுப்பு என்பதைக் கண்டறிய, ஆணையம் தமிழகத்தின் மிகச் சிறந்த புலனாய்வு அதிகாரி சாரங்கன் தலைமையில் குழுவை அமைத்தது.
அந்தக் குழு விசாரித்து தனது அறிக்கையை ஆணையத்தின் முன்பு சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின் படி, சம்பவம் நடந்த 11.09.2011 அன்று, நரிக்குறவர் கூட்டத்தினர் 10 பேர், பரமக்குடியில் காக்கைகள் ஏராளமாக இருப்பதாகவும், அந்தக் காகங்களை வேட்டையாடலாம் என்றும் கிளம்பியிருக்கிறார்கள். அந்த நேரத்தில், பரமக்குடியில் மாங்காய்கள் கிடைக்கின்றன என்றும் அந்த மாங்காய்களை பறிக்கலாம் என்றும் இன்னொரு குழுவினர் கிளம்பியிருக்கிறார்கள். அவர்கள் அவ்வாறு மாங்காய் பறிக்க கிளம்பியதற்கான காரணம், டாஸ்மாக் பார்களில் மாங்காய் ஊறுகாய்களோ, மாங்காய் துண்டுகளோ விற்பனை செய்யப் படுவதில்லை என்பதால், சரக்குக்கு மாங்காயைப் போன்ற சிறந்த சைட் டிஷ் கிடையாது என்பதாலும், பரமக்குடியில் மாங்காய் பறிக்கலாம் என்று கூட்டமாக கிளம்பியிருக்கின்றனர். மாங்காய் பறிக்க வந்த குழுவினர் மரங்களில் ஏறி மாங்காய்களை பறித்துக் கொண்டிருந்த நேரத்தில், காக்காய்களை வேட்டையாட வந்த நரிக்குறவர்கள் காகங்களை சுடும் போது அந்த குண்டுகள் மாங்காய் பறிக்க வந்தவர்களின் மீது விழுந்து அதன் காரணமாகவே 7 பேர் உயிர் பறிபோயிருக்கிறது என்றும் தெரிய வருகிறது. இதற்கு ஆதாரமாக 5 மாங்கொட்டைகளை (சா.பொ.4) ஆணையத்தின் முன் தாக்கல் செய்துள்ளனர் விசாரணைக் குழுவினர்.
தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் செயலாளர் புகழேந்தி, தானாக முன் வந்து இந்த ஆணையத்தின் முன் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அவர் தனது சொந்த ஊர் ராமநாதபுரத்துக்கு சென்றிருந்ததாகவும், அப்போது இந்தத் துப்பாக்கிச் சூட்டை நேரில் பார்த்ததாகவும், காவல்துறையினர்தான் பொது மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசுத் தரப்பு, காவல்துறையினர் தங்கள் துப்பாக்கிகளை வேலாயுதம் திரைப்பட பட பிடிப்புக்கு வாடகைக்கு விட்டது, தெளிவாக நிரூபிக்கப் பட்டுள்ளதாகவும், ஆகையால் புகழேந்தியின் வாதத்தை நிராகரிக்கும் படியும் கோரினர். மேலும், காக்கி உடை அணிந்த சிறுவர்கள், தீபாவளிக்கு வெடிக்கும் கேப் துப்பாக்கிகளை வெடித்துக் கொண்டிருந்தார்கள் என்றும், அதைப் பார்த்து விட்டு, புகழேந்தி காவல்துறையினர் சுட்டார்கள் என்று தவறாக கருதி விட்டார் என்றும் தெரிவித்தனர். இதற்கு ஆதாரமாக, கேப் துப்பாக்கிகள் இரண்டும் (சா.பொ.5) ரோல் கேப்புகள் இரண்டையும் (சா.பொ 6) இந்த ஆணையத்தின் முன் சமர்ப்பித்தனர்.
வழக்கறிஞர் புகழேந்தியின் வாதத்தையும் அரசுத் தரப்பு வாதத்தையும் வைத்துப் பார்க்கும் போது, புகழேந்தி தனது வாதத்துக்கு ஆதரவாக எந்த ஆதாரங்களையும் சமர்ப்பிக்கவில்லை. ஆனால் அரசுத் தரப்பு அதை மறுத்து ஏராளமான சான்றாவணங்களை இந்த ஆணையத்தின் முன் சமர்ப்பித்துள்ளது.
இதனால் வழக்கறிஞர் புகழேந்தியின் வாதத்தை இந்த ஆணையம் நிராகரிக்க வேண்டியுள்ளது.
ஏராளமான ஆவணங்களையும், சாட்சிகளையும் வைத்து தீர விசாரித்து, இந்த ஆணையம், அரசு நியமித்துள்ள விசாரணை வரம்புகளுக்கு பின் வருமாறு விடையளிக்கிறது.
1) 11.09.2011 அன்று பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு வழிகோலிய சூழ்நிலைகள் மற்றும் காரணங்கள்.
காகங்களை வேட்டையாடச் சென்ற நரிக்குறவர்களும், மாங்காய் பறிக்க பரமக்குடி சென்ற குழுவினரும் ஒரே நேரத்தில் தங்கள் வேலையில் ஈடுபட்டதால், காகங்களை சுடுவதற்காக சென்ற நறிக்குறவர்கள் தவறுதலாக மாங்காய் பறிக்கச் சென்றவர்களை சுட்டிருக்கிறார்கள்.
2) 11.09.2011 அன்று காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைக்க துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டதா ? காவல்துறையினர் அவசியமின்றி சுட்டார்களா ? அத்துமீறல் ஏதேனும் இருந்ததா ? அவ்வாறெனில், தவறிழைத்த அதிகாரிகளை அடையாளம் கண்டு அவர்கள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து தெரிவித்தல்.
காவல்துறையினர் அத்து மீறி செயல்பட்டார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. காவல்துறையினர் செயல்படவே இல்லாத போது அத்து மீறி செயல்பட்டார்கள் என்ற கேள்வியே எழவில்லை. ஐபிஎஸ் அதிகாரியாக ஆனாலும், தான் படித்த மருத்துவப் படிப்பை மறக்காமல், பணிக்குச் செல்லும் போதும் இரண்டு பேருக்கு வைத்தியம் பார்த்ததை இந்த ஆணையம் பாராட்டுகிறது. அபாண்டமாக காவல்துறையினர் மீது பழி போட்ட காரணத்துக்காக வழக்கறிஞர் புகழேந்தி மீது நடவடிக்கை எடுக்க இந்த ஆணையம் பரிந்துரைக்கிறது.
3) துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அரசு அளித்த இழப்பீடு போதுமானதா ? எவ்வளவு இழப்பீடு வழங்கலாம்.
அரசு ஏற்கனவே அளித்துள்ள இழப்பீடான ஒரு லட்ச ரூபாய் மிக மிக அதிகம். துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள் மாங்காய் பறிக்க சென்றிருந்தனர். அதனால் இறந்தவர் குடும்பங்களுக்கு தலா இரண்டு கிலோ மாங்காய்களை இழப்பீடாக வழங்கலாம் என்று இந்த ஆணையம் பரிந்துரை செய்கிறது.
4) ஆணையம் பரிந்துரைக்கும் வேறு ஏதாவது விஷயங்கள்.
மாங்காய் பறிப்பது போல, தேங்காய், பனங்காய் போன்ற எந்தக் காய்களை பறிக்கும் போதும், எந்தக் கலவரம் நேர்ந்து உயிரிழப்போ கலவரமோ ஏற்பட்டால் அந்த சம்பவங்களுக்கும் இந்த ஆணையத்தின் நீதிபதியாக உள்ள சண்முகத்தையே விசாரணை ஆணைய நீதிபதியாக நியமிக்குமாறு இந்த ஆணையம் பரிந்துரை செய்கிறது.
டாஸ்மாக் பார்களில் மாங்காய் ஊறுகாய்களும், மாங்காய் துண்டுகளும் தாராளமாக கிடைக்காத காரணத்தாலேயே பரமக்குடியில் 7 பேர் இறந்த சம்பவங்கள் நடந்திருக்கிறது என்பதால், டாஸ்மாக் பார்களை ஏலத்தில் எடுப்பவர்கள், கட்டாயமாக மாங்காய் ஊறுகாய்களையும், மாங்காய் துண்டுகளையும், தங்கள் பார்களில் கட்டாயம் விற்க வேண்டும் என்று அரசு உத்தரவு போடலாம். இவ்வாறு மாங்காய்கள் விற்கப் படுகிறதா என்பதை கண்டறிய, பறக்கும் படைகளை அமைத்து, அனைத்து டாஸ்மாக் பார்களிலும் சோதனை நடத்தலாம்.
மேற்குறிய வகையில், அரசு விதித்துள்ள வரம்புகளுக்கு விடையளித்து, இந்த ஆணையம், புரட்சித் தலைவி, டாக்டர் அம்மா அவர்களில் பொற்பாதங்களில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கிறது.