என்னடா இது புதுக் கதையாக இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா ? “காகிதப்பூ“ நாடகத்தில் கதாநாயகியாக நடித்தார் என்று தெரியும். கருணாநிதியின் மூன்றாவது மனைவி என்று தெரியும். என்னடா இது திடீரென்று சவுக்கு ராசாத்தி அம்மாளை தொழில் அதிபர் என்று அழைக்கிறதே என்று யோசித்தீர்கள் தானே ?
நீரா ராடியா என்ற பவர் ப்ரோக்கர் எவ்வளவு பெரிய ஆள் என்பது உங்களுக்குத் தெரியும். முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, சுனில் மிட்டல் போன்ற இந்தியாவின் மிகப் பெரிய தொழில் அதிபர்களெல்லாம் இவரது க்ளையன்டுகள் என்று தெரியும்.
இந்த நீரா ராடியாவோடு சரிக்குச் சமமாக பேச்சு வார்த்தை நடத்தினால் ராசாத்தி அம்மாளை என்னவென்று அழைப்பீர்கள் ? தொழில் அதிபர் என்று தானே .. … ? சவுக்கும் அப்படித்தான் அழைத்தது. ராசாத்தி அம்மாள் எதைப் பற்றிப் பேசினார் என்ற விபரத்துக்கு பின்னர் வருவோம். முதலில் இந்த உரையாடலைக் கேளுங்கள்.
ராசாத்தி வீட்டில் வேலை செய்பவர்: மார்னிங் மேடம்.
நீரா ராடியா : ஹாங். மார்னிங்.
வீட்டில் வேலை செய்பவர் : மேடம் பேச விரும்புகிறார்கள். (இந்தியில்) கொடுக்கவா… ?
நீரா ராடியா. ஹாங். கொடுங்கள்.
நீரா ராடியா : ஹலோ.
ராசாத்தி அம்மாள் : ஹலோ.
நீரா ராடியா ஹலோ. எப்படி இருக்கிறீர்கள் ?
ராசாத்தி அம்மாள். நன்றி நான் நன்றாக இருக்கிறேன். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் ?
(இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல)
நீரா ராடியா : மன்னிக்கவும். உங்களுடன் தொடர்பில் இல்லை. நான் பிசியாக இருந்து விட்டேன். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள். நன்றாக இருக்கிறீர்களா ?
ராசாத்தி அம்மாள். நான் நன்றாக இருக்கிறேன்.
நீரா ராடியா : சிஎம் எப்படி இருக்கிறார் ? நன்றாக இருக்கிறாரா ? (அவரு நல்லாத்தான் கீறாரு.. நாங்கதான் நல்லா இல்லை)
ராசாத்தி அம்மாள். நன்றாக இருக்கிறார்.
நீரா ராடியா : கனி… ? கனியை நான் கடந்த வாரம் பார்த்தேன். இந்த வாரம் பார்க்கவில்லை. கனி சென்னையிலா இருக்கிறார் ?
ராசாத்தி அம்மாள் : ஆமாம்.
நீரா ராடியா : அவர் திரும்பி வந்து விட்டார் அல்லவா ?
ராசாத்தி அம்மாள் : ஆமாம்.
நீரா ராடியா : மற்ற விஷயங்கள் எப்படி உள்ளன ? நன்றாக உள்ளன அல்லவா ?
ராசாத்தி அம்மாள் : ம் ம் ம் ம். (புரியாத குரலில்… … இருங்க இருங்க) என்ன ஆச்சு ?
நீரா ராடியா : எதற்கு என்ன ஆச்சு ? டாடா ?
ராசாத்தி அம்மாள்: ஆமாம். ஆமாம்.
நீரா ராடியா : அது முடியவில்லையா ?
ராசாத்தி அம்மாள்: முடியவில்லை.
நீரா ராடியா : ரத்னம் இருக்கிறாரா ? ரத்தினத்திடம் போனை கொடுங்கள். நான் எல்லாம் முடிந்து விட்டது என்றல்லவா இருந்தேன். ?
ராசாத்தி அம்மாள்: ஒரு நிமிடம்.
நீரா ராடியா : ஹாய் ரத்னம்.
ரத்னம் : எஸ் மேடம்.
நீரா ராடியா : என்ன ஆச்சு ? அது இன்னும் முடியவில்லையா ?
ரத்னம் : இல்லை மேடம். முடியவில்லை. இப்போதுதானே உங்களுக்கு மெசேஜ் அனுப்பினேன்.
நீரா ராடியா : மேசேஜ் ஏதும் வரவில்லையே ? நான் எனது மொபைலை மாற்றி விட்டேன். என்னுடைய புது நம்பர் தெரியுமா ?
ரத்னம் : நான் அந்த நம்பரில்தான் உங்களுக்கு முயற்சி செய்து கொண்டிருந்தேன். அவர் கூட முயற்சி செய்தார்.
நீரா ராடியா : இல்லை. இல்லை. இதுதான் என்னுடைய ரெகுலர் நம்பர். இன்டிகாம். டாடா இன்டிகாம்.
ரத்னம் : டாடா இண்டிகாம். உங்கள் மொபைல் நம்பரை மாற்றி விட்டீர்களா ?
நீரா ராடியா : ஆமாம். 09250008888
ரத்னம் : இந்த நம்பர் எங்களுக்கு கொடுக்கப் படவில்லை.
நீரா ராடியா : கடந்த வாரமே நான் சிசிலியாவிடம் சொன்னேன்.
ரத்னம் : சிசிலியாவை தொடர்பு கொள்ளவே முடியவில்லை.
நீரா ராடியா : நான் ஏன் என்று சொல்கிறேன். கடந்த வாரம் அவர் தாயார் மருத்துவமனையில் இருந்தார்.
ரத்னம் : அது எனக்கு தெரியும்.
நீரா ராடியா : அவர் ரொம்ப உடம்பு முடியாமல் இருக்கிறார். அதனால்தான் அவர் கொஞ்சம் பிரச்சினையில் இருந்தார்.
ரத்னம் : ஆனால் நீங்கள், நீங்களாகவே முடித்து விடுவேன் என்று சொன்னீர்கள் அல்லவா ?
நீரா ராடியா : ஆமாம்.
ரத்னம் : அது போல முடியவில்லை. அதனால்தான் உங்களுக்கு மெசேஜ் அனுப்பினேன்.
நீரா ராடியா : என்னால் நம்பவே முடியவில்லை. எப்படி என்று ?
ரத்னம் : ஆமாம் மேடம். ஆமாம் மேடம்.
நீரா ராடியா : எப்படி இப்படி ஆயிற்று ? டாடாவைப் பற்றி என்ன ? அதில் என்ன நடக்கிறது ?
ரத்னம் : எல்லாம் ஓகே. ஆனால் இந்த 50 சதவிகித வாடகை. நேற்று எனக்கு ஒரு மெயில் வந்தது. நேற்று கூட உங்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்தேன். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் 50 சதவிகித வாடகையை நாங்கள் கட்ட வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் நாங்கள் ஏற்கனவே கிருஷ்ணகுமாருக்கு அது முடியாது என்று பதில் அனுப்பி விட்டோம். கிருஷ்ணகுமாருக்கு நான் தொலைபேசி செய்தேன். ஆனால் அவர் எடுக்கவேயில்லை. அதனால் நான் சஞ்சய் ஓபாலியாவை தொடர்பு கொண்டேன். அவர் கிருஷ்ணகுமாரை தொடர்பு கொண்டு விஷயங்களை முடித்து தருவதாகச் சொன்னார்.
நீரா ராடியா : நீங்கள் பாம்பேயில் இருக்கும் போது அவர்கள் அதற்கு ஒத்துக் கொண்டார்கள் அல்லவா ?
ரத்னம் : கிருஷ்ணகுமாரும் அப்போது, தெளிவாக வோல்டாஸ் நிறுவனத்தோடு பேசி, வாடகையை ரத்து செய்வதாக தெரிவித்தார்.
நீரா ராடியா : சரி.
ரத்னம் : ஆனால் நேற்று முழு நாளும் நான் கிருஷ்ணகுமாரை தொடர்பு கொண்டேன். 10 முறை முயற்சி செய்தேன். அவர் ஏதோ மீட்டிங்கில் இருக்கிறார் போல.
நீரா ராடியா : ஆமாம். நேற்று இந்தியா ஹோட்டல்களின் போர்டு மீட்டிங். வருடாந்திர கணக்குகளை வெளியிட்டார்கள். அதோடு பாம்பேயில் சீ ராக் ஹோட்டலை வாங்குவது தொடர்பாகவும் பேசினார்கள். அதனால் தான் கிருஷ்ணகுமாரை நேற்று தொடர்பு கொள்வது மிகவும் சிரமம்.
ரத்னம் : அதனால்தான் நான் உங்களை தொடர்பு கொண்டேன். இதைப் பற்றி சொல்வதற்காக.
நீரா ராடியா: விடுங்கள். நான் அவரோடு பேசுகிறேன். அவரோடு நான் திங்கள் கிழமை பேசுகிறேன். ஏனெனில் அவர் சேர்மேனோடு போய் விட்டார் என்று நினைக்கிறேன். அவர் அமேரிக்கா போய் விட்டார் என்று நினைக்கிறேன்.
ரத்னம் : யார் மேடம் ?
நீரா ராடியா: கிருஷ்ணகுமார் மீண்டும் இன்று அமேரிக்கா செல்கிறார் என்று நினைக்கிறேன்.
ரத்னம் : ஒரே ஒரு நாள்தான் என்று நினைக்கிறேன். வியாழக்கிழமை தான் அவர் திரும்பி வந்தார்.
நீரா ராடியா: இல்லை இல்லை. அவர் மீண்டும் சென்றிருக்கிறார். அவர் அவருடைய சேர்மேனோடு இன்று செல்கிறார்.
ரத்னம் : அப்படியா மேடம்.
நீரா ராடியா: ஆமாம். ஆமாம். அவர் இன்று காலை ஏர் இந்தியா விமானத்தில் கிளம்ப வேண்டியது. நான் செக் செய்கிறேன். நான் செக் செய்து விட்டு சொல்கிறேன். அவருடன் நான் பேசுகிறேன். ஆனால் எனக்கு மிக ஆச்சர்யமாக இருக்கிறது.
ரத்னம் : ஆமாம் மேடம். அந்த இன்னொரு விஷயம்…. … அதற்காகத் தான் நான் மீண்டும் மீண்டும் அழைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் என்னால் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. மற்றொரு மொபைல் அணைத்து வைக்கப் பட்டிருந்தது.
நீரா ராடியா: நான் அவரோடு பேசுகிறேன். பேசி விட்டு சொல்லுகிறேன்.
ரத்னம் : சொல்லுங்கள். உங்களின் அந்த நம்பர்.
நீரா ராடியா: ஆமாம் அதில் நான் இருப்பேன். ஒன்று செய்யுங்கள். உங்களின் அந்த போனிலிருந்து ஒரு மிஸ்டு கால் கொடுங்கள். உங்களிடம் வேறு போன் இல்லையா ?
ரத்னம் : இருக்கிறது மேடம்.
நீரா ராடியா: அதிலிருந்து ஒரு மிஸ்டு கால் கொடுங்கள்.
முதலில் 2007ல் ராஜ்ய சபை உறுப்பினரான கனிமொழி தனது சொத்துக் கணக்கு என்று என்ன தாக்கல் செய்துள்ளார் என்பதை பார்த்து விடுவோம்.
இந்தியன் வங்கியில் நிரந்தர வைப்புத் தொகை 6,40,00,000
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 16,52,000
ஷேர்கள் 3,50,000
டொயோட்டா கேம்ரி கார் 17,50,000
நகை 3,61,000
அண்ணாசாலையில் வணிக வளாகம் 1,61,47,000
மொத்தமாக ஒரு எட்டு கோடி ரூபாய் வைத்துக் கொள்ளலாம். இந்த எட்டு கோடி ரூபாயே கனிமொழிக்கு ஏது என்பது தனிக் கதை. தற்போது, சென்னை அண்ணா சாலையில் எஸ்ஐஈடி கல்லூரி எதிரில் வோல்டாஸ் ஏ.சி நிறுவனம் ஏறக்குறைய 40 ஆண்டுகளாக தொழில் செய்து வருகிறது. வோல்டாஸ் நிறுவனம் டாடா குழுமத்திற்கு சொந்தமானதாகும். இந்த இடத்தில் வோல்டாஸ் நிறுவனம் வாடகைக்கு இருந்தது. வோல்டாஸ் நிறுவனத்துக்கும், நிலத்தின் சொந்தக் காரருக்கும் ஒரு பிரச்சினை வருகிறது. வோல்டாஸ் நிறுவனம் அந்த இடத்தை வாங்க முயற்சி செய்ய, சொந்தக் காரர் மறுக்க பிரச்சினை பஞ்சாயத்துக்காக தொழில் அதிபர் ராசாத்தி அம்மாளிடம் செல்கிறது.
ராசாத்தி அம்மாள் பிரச்சினையை சிறப்பான முறையில் தீர்த்து வைக்கிறார். என்ன செய்கிறார் என்றால், நீங்கள் இருவரும் அடித்துக் கொள்ளாதீர்கள். நிலத்தை நானே வாங்கிக் கொள்கிறேன் என்று கூறி, அதன் படியே வாங்கிக் கொள்கிறார். அந்த இடம் மொத்தம் 18 கிரவுண்டுகள். 2009 அன்று சந்தை நிலவரப்படி 300 கோடிக்கு போகும். ராசாத்தி அம்மாள் என்ன விலை கொடுத்து வாங்கினார் என்று தெரியவில்லை. ஆனால், இதற்கு பதிலாக ரத்தன் டாடா அவரிடம் ஒரு பேரம் பேசுகிறார். என்னவென்றால், தயாநிதி மாறன், தொலைத் தொடர்பு அமைச்சர் ஆகக் கூடாது என்பதுதான் அந்தப் பேரம். இதை ஒட்டியே கனிமொழி நீரா ராடியாவிடம் மாறனை மந்திரி சபையில் சேர்க்கக் கூடாது என்று பேசுகிறார்.
மாறன் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆகாவிட்டால், அதற்கு பதிலாக அந்த இடத்தில் என்ன கட்டிடம் கட்டுகிறார்களோ, அந்தச் செலவு டாடா குழுமத்தினுடையது என்று பேசி முடிக்கப் படுகிறது.
ராசாத்தி அம்மாள் ஐந்து நட்சத்திர விடுதி கட்டலாம் என்றும், கனிமொழி “ராசாத்தி மருத்துவமனை“ கட்டலாம் என்றும் திட்டமிடுகின்றனர்.
தற்போது அண்ணா சாலை வழியாக சவுக்கு வாசகர்கள் சென்றால், அந்த வோல்டாஸ் கட்டிடத்தை கடைசியாக ஒரு முறை பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், அந்தக் கட்டிடம் டிசம்பர் 31க்குள் இடிக்கப் படப் போகின்றது.
வோல்டாஸ் நிறுவனம் கிண்டிக்குச் செல்கிறது.
வோல்டாஸ் நிறுவனத்தை அடுத்து, இந்தியன் ஏர்லைன்ஸ் அலுவலகம் ஒரு பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. அந்த இடம், அண்ணா சாலையில் புகைப்பட ஸ்டுடியோ வைத்திருக்கும் ஜி.கே.வேல் நிறுவனத்திற்கு சொந்தமான 20 கிரவுண்டு நிலம்.
இந்த நிலத்தையும் ராசாத்தி அம்மாள் என்ற தொழில் அதிபரே வாங்கி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
இப்போது மீண்டும் இந்த உரையாடலை ஒரு முறை படித்துப் பாருங்கள். ராசாத்தி அம்மாள் தொழில் அதிபர் தானே… … ?