கூடங்குளத்தின் கடல் ஓரத்தில் நடந்துவந்த போராட்டத்தை, நாடு முழுவதும் பரவ வைத்தது மட்டும்தான் தமிழ்நாடு அரசாங்கத்தின் ஒரே சாதனை. ‘ஈரைப் பேன் ஆக்கி பேனைப் பெருமாள் ஆக்குவது’ என்று கிராமத்தில் சொல்வார்கள். போலீஸ் கையில் அதிகாரத்தைக் கொடுத்தால், அமைதிப்படுத்துவதை விட தங்களது அதிகாரத்தை நிலைநாட்டுவதில் மட்டுமே குறியாக இருப்பார்கள் என்பது ஆட்சியாளர்களுக்கு இன் னமும் தெரியாமல் இருப்பது, தமிழ்நாட்டின் துரதிர்ஷ்டம்!
கூடங்குளத்தில் அணுமின் நிலையத்துக்கான அடிக்கல் நாட்டி, அதற்கான வேலைகள் தொடங்கி 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போது, இதை எதிர்த்து முழக்கமிட்டவர்கள் சில நூறுபேர்தான். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் சுற்றுச்சூழல் குறித்த ஆர்வம் அதிக மானதைத் தொடர்ந்து, போராட்டத்தில் அதிகம் பேர் ஈடுபடத் தொடங்கினர். திருப்பூர் சாயப் பட்டறைகள், கடலூர் கெமிக்கல் நிறுவனங்கள், திண்டுக்கல் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் ஆகியவற்றோடு கூடங்குளமும் பேசப்படும் நிலைக்கு வந்தது.
கடந்த ஆண்டு, ஜப்பான் ஃபுகுஷிமாவில் அணு உலை வெடிப்பு காரணமாக உலகம் முழுவதும் அணு உலைகளுக்கு எதிரான பிரசாரங்கள் பெருகின. அது தமிழகத்திலும் பற்றிக்கொண்டது. இந்தியாவில் உள்ள அணு உலைகள் அனைத்தின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் தரவேண்டிய நெருக்கடி, மத்திய அரசுக்கு ஏற்பட்டது. கூடங்குளம் மக்களைச் சந்தித்து அவர்களது பீதியை அதிகப்படுத்தும் அளவிலான வகுப்புகளை அணுமின் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் எடுக்க ஆரம்பித்தார்கள்.
‘அணு உலை வெடிச்சா, நீங்க என்ன பண்ணணும் தெரியுமா? முகத்தை மூடிக்கிட்டு மூணு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஓடணும்’ என்று தொடங்கி ‘ஆறு மாதங்களுக்கு ஊருக்குள் நீங்கள் வரக்கூடாது’ என்பது வரை வார்த்தைகளால் ரத்தத்தை உறைய வைத்தனர். தாங்கள், சாவுக்குப் பக்கத்தில் இருக்கிறோம் என்பதை கூடங்குளம் மக்கள் உணர ஆரம்பித்தனர். அப்போதுதான், ‘கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு இயக்கம்’ என்ற அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் தெருமுனைப் பிரசாரம் செய்யத் தொடங்கினனர். மாதத்துக்கு ஒரு கிராமத்தில் உண்ணாவிரதம் என்று ஆரம்பித்தார்கள். ஆண்கள் அனைவரும் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுவிட, பெண்கள் மட்டும் இதில் கலந்துகொள்வது என்று முடிவானது. முதலில் கூடங்குளம்… அடுத்து இடிந்தகரை… கூத்தங்குழி… பெருமணல்… வைராவிக் கிணறு… கூடுதாழை… செட்டிக்குளம் என்று பரவியது. மாதத்துக்கு ஓர் ஊர் என்று இருந்ததை, தொடர் உண்ணாவிரதமாக மாற்றினர். இடிந்தகரையில் பந்தல் போட்டு 127 பேர் உட்கார்ந்தனர். அணு உலையை எதிர்க்கும் அமைப்புகளும் வைகோ உள்ளிட்ட ஒருசில அரசியல் தலைவர்கள் மட்டுமே ஆதரித்த நேரத்தில்… இதற்கான எண்ணெய் வார்த்தவர் முதல்வர் ஜெயலலிதா.
உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் தூத்துக்குடியில் பேசிய அவர், ‘உங்களில் ஒருத்தியாக நான் அங்கேயே வந்து போராடத் தயார்’ என்ற அவருடைய அறிக்கைதான், கூடங்குளம் மக்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்து போராட்ட ஆர்வத்தைத் தூண்டியது. ‘மக்களின் அச்சத்தைக் களைந்த பிறகுதான் அணு உலைப் பணிகளைத் தொடர வேண்டும்’ என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். போராட் டக்காரர்களை அழைத்துப் பேசினார். அதையே அமைச்சரவைத் தீர்மானமாகவும் ஆக்கினார். டெல்லிப் பயணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிந்ததும், கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனே திறப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசாங்கத்துக்கு முதல்வர் கோரிக்கை வைத்தார். ‘அணுஉலை ஆபத்தானது. நான் உங்களோடு சேர்ந்து போராடுவேன்’ என்று அறிவித்த அவர், ‘அணு உலையைத் திறக்க வேண்டும்’ என்று உத்தரவிடும் போதாவது கூடங்குளம், இடிந்தகரை பகுதி மக்களை நேரில் அழைத்து மனமாற்றம் செய்திருக்க வேண்டும். அல்லது அந்தப் பகுதிக்குச் சென்று மக்களைச் சந்தித்து இருக்க வேண்டும்.
ஓர் ஆண்டு காலமாக கூடங்குளத்தைச் சுற்றி இருக்கும் சுமார் 25 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் உண்ணாவிரதம் இருப்பது, ஓர் அரசாங்கம் சமாதா னப்படுத்தும் பிரச்னையாகத் தெரியவில்லையா? முதல்வர் செல்லவில்லை… இன்று முதல்வருக்கு அடுத்த நிலை முக்கியஸ்தர்களாகச் சொல்லப்படும் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் அகியோராவது சென்றார்களா? தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக இருக்கும் தேபேந்திரநாத் சாரங்கிக்கு கூடங்குளம் எந்தத் திசையில் இருக்கிறது என்பது தெரியுமா? சட்டம் ஒழுங்கையும் உளவுத் துறையையும் ஒருசேரக் கவனிக்கும் டி.ஜி.பி. ராமானுஜம் ஒரு முறையாவது அந்தப் பகுதிக்குப் போய் வந்திருப்பாரா? அந்த மக்களைச் சந்தித்து இருப்பாரா? அவருடைய போலீஸ் வாழ்க்கை ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தில்தான் ஆரம்பித்தது. அந்தப் பாசமாவது இருந்திருக்க வேண்டாமா? காதி கிராமத் துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் ஒரே ஒரு முறை உண்ணாவிரதப் பந்தலுக்குச் சென்றார். உதயகுமாரனும் புஷ்பராயனும் கேட்கும் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லத் தெரியாதது மட்டுமல்ல… அந்தக் கேள்வியைக்கூட உள்வாங்கிக்கொள்ள செந்தூர்பாண்டியனால் முடியவில்லை. தமிழக அரசாங்கம் அமைத்த குழுவினராவது அந்த உண் ணாவிரதப் பந்தலுக்குப் போனார்களா? அணு உலையை மட்டும் பார்த்துவிட்டுத் திரும்பினார்கள்.
இப்படி எந்த முயற்சியும் எடுக்காத முதல்வர் ஜெயலலிதா, விவகாரத்தை அடக்குவதற்குத் தேர்ந் தெடுத்த நபர் ராஜேஸ் தாஸ். தென் மண்டல ஐ.ஜி. கேரளாவுக்கு எதிராக முல்லைப் பெரியாறு அணையைக் காப்பாற்ற ஆர்ப்பாட்டங்களை நடத்திய தேனி, பெரியகுளம் மக்களைப் பார்த்து, கோப வார்த்தைகளைச் சொல்லிச் சீண்டிவிட்டு, அடிதடிக் கலவரமாக அந்தப் போராட்டத்தை மாற்றியவர். ஒரு ஜான் பாண்டியனுக்கு பாதுகாப்பு கொடுத்து, அவரைப் பத்திரமாகக் கொண்டுபோய் சேர்க்கத் தெரியாமல்… தடுத்து… துப்பாக்கிச் சூடு நடத்தி ஆறு பேர் கொலையான சம்பவமும் இவரது காலத்தில்தான். இப்போது, அவருக்குக் கூடங்குளம் அசைன்மென்ட். ‘ஒழுங்கா இருங்க… இல்லைன்னா உதயகுமாரைத் தூக்கிடுவேன்’ என்று, எந்தப் போலீஸ் அதிகாரியாவது, கொந்தளித்து இருக்கும் மக்கள் முன்னால் சொல்வாரா? ஐ.ஜி. ஓர் இடத்தில் இருந்தாலே, கீழே உள்ள போலீஸ்காரர்கள் துணிச்சலாக அடிக்க ஆரம்பிப்பார்கள் என்பது தெரிந்த விஷயம்தானே. ஊருக்குள் அமைதியான முறையில் உண்ணாவிரதம் இருந்தவர்களை சமாதானப்படுத்துவதற்கான எந்த முயற்சியும் எடுக்காமல்… அவர்களைக் கடலுக்குள் விரட்டிவிட்டு… அவர்களுக்கு ஆதரவாக சென்னை தொடங்கி எல்லா இடங்களிலும் போராட்டத்தைப் பரவவிட்டு… அதன்பிறகு, ‘மீனவர்கள் மாய வலைகளுக்குள் சிக்க வேண்டாம்’ என்று அறிக்கை விடுவதுதான் ஒரு முதலமைச்சரின் விரைந்து முடிவெடுக்கும் திறனா?
இது ஏதோ ஜெயலலிதாவின் சொந்தப் பிரச்னை என்பது மாதிரி, மத்திய காங்கிரஸ் அரசாங்கம் தன் வாய், கண், காது மூன்றையும் மூடிக்கொண்டு விட்டது. உண்ணாவிரதம் இருப்பதும் போராட்டம் நடத்துவதும் மாநில அரசாங்கம் சம்பந்தப்பட்ட சட்டம் ஒழுங்குப் பிரச்னையாக இருக்கலாம். ஆனால், அந்த மக்கள் கிளப்பும் சந்தேகங்கள் அனைத்துக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டது மத்திய அரசாங்கம்தான். அவர்கள் அமைத்த விசாரணைக் குழுவினரும் உண்ணாவிரதப் பந்தலுக்கு வரவில்லை. அமைச்சர் நாராயணசாமி மட்டும் தெரியாத்தனமாக ஒரு முறை வந்தார். அவரால் எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை. ‘அணு உலை பாதுகாப்பானது என்றால், உங்கள் மாநிலத்தில் கொண்டுபோய் வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கும்தான் கடல் இருக்கே’ என்று, மக்கள் கிண்டல் செய்ததைப் பார்த்து நொந்துபோய், ‘மக்களின் உணர்வுக்கு மதிப்புக் கொடுக்கிறேன்’ என்று சொல்லி விட்டுப் போனார். தமிழகத்தை டெல்லியில் பிரதிபலிக்கக்கூடிய ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் போன்றவர்கள் மக்களை மனமாற்றம் செய்ய வரவில்லை. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் டி.வி.க்களில்களில் மட்டுமே பேசினர். ‘இரண்டு வாரத்தில் அணுஉலை செயல்படத் தொடங்கும்’ என்பதைச் சொன்னாலே அணுஉலை செயல்பட ஆரம்பித்து விடும் என்று மத்திய அரசு மௌனமாக இருந்தது. இப்போதுகூட அது ஜெயலலிதாவின் சுமை என்ற அலட்சியம்தான் டெல்லி காங்கிரஸ் தலைகளுக்கு இருக்கிறது.
பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டிவிடுவதில் கை தேர்ந்த கருணாநிதி, இப்போது புதிய புத்தராகப் பரிமாணம் பெற்றுள்ளார். ‘மத்திய, மாநில அரசுகள் போராட்டக் குழுவினரிடம் பேசி ஆபத்து ஏற்படாது என உத்தரவாதம் தர வேண்டும். காவல்துறையை வைத்துக்கொண்டு போராட்டத்தை ஒடுக்க ஜெயலலிதா கருதிவிடக் கூடாது’ என்று உபதேசம் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் கருத்தே சொல்லாமல் இருந்த கருணாநிதி, திடீரென கடந்த பிப்ரவரி மாதம், ‘கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு ஏன் அலைய வேண்டும். கூடங்குளத்தை செயல்பட விடாமல் ஏன் வைத்துள்ளீர்கள்? போராட்டக்காரர்களுடன் ஏன் முதல்வர் பேசுகிறார்? அவர்களை இவரே தூண்டி விடுகிறாரா?’ என்று பேசியதன் மூலமாகத்தான் ஜெயலலிதா சினம்கொண்டு… உடனே நடவடிக்கைகளில் இறங்கினார். யாரோ போட்ட உத்தரவுக்காக அன்று தூண்டிவிட்ட கருணாநிதி… இன்று அப்படியே மாற்றிப் பேசுவது எத்தகைய நாடகம். ‘கூடங்குளம் பிரச்னை ஒன்று போதும், தென் மாவட்டத்தில் நாம் ஜெயிக்க!’ என்று இப்போதே சில தி.மு.க. பிரமுகர்கள் பேச ஆரம்பித்து விட்டார்களாம். அந்த அளவுக்கு அரசியல் கொக்குகள் மீன்களுக்காகக் கரையில் காத்திருக்கின்றன.
இந்தச் சூழ்நிலையில், மற்றவர்களைவிட ஜெய லலிதாவுக்குத்தான் பொறுப்பு அதிகம் உள்ளது. மத்திய அரசாங்கம், இந்தியாவில் உள்ள அணு உலைகளை ஆய்வு செய்து அறிக்கை கொடுக்கச் சொன்னது. அதன்படி அமைக்கப்பட்ட குழு 11 விதிமுறைகளைக் கொடுத்தது. அதில் இதுவரை 6 மட்டுமே கூடங்குளத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தவும் அதை விளக்கி கூடங்குளம் மக்களிடம் மனமாற்றம் செய்யவும் ஜெயலலிதா முயற்சிக்க வேண்டும். அந்த மக்களிடம் அவர் பேச வேண்டும். அப்போதுதான் தென் மண்டலம் அமைதியாகும்.
ஜெ. நினைத்தால் அமைதிப்படுத்தலாம். ராஜேஸ் தாஸ்களால் நிச்சயம் முடியாது!
– ப.திருமாவேலன்
நன்றி ஜுனியர் விகடன்