நரேந்திர மோடி. பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, திருச்சிக்கு மோடி வருகிறார். மோடி தமிழகம் வருகை தரும் நாள் நெருங்க நெருங்க, தமிழகமெங்கும் ஒரு பரபரப்பு… இளைஞர்கள் இளந்தாமரை மாநாட்டை ஆவலாக எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்கள்.. மோடி என்ன பேசுவார்.. எப்படிப் பேசுவார் என்று தமிழகமே காத்திருக்கிறது. திருச்சியை இந்தியாவே திரும்பிப் பார்க்க இருக்கிறது.
இப்படியெல்லாம் பிஜேபி மற்றும் சங் பரிவாரங்கள் கொடுக்கும் பில்டப்புக்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது
இந்தியாவில் மோடி அலை வீசுகிறது. இன்று தேர்தல் வைத்தால் கூட, 545 சீட்டுகளில் 544 சீட்டுகளை மோடி கவ்விப் பிடிப்பார் என்று பிஜேபியினர் கூறி வருகிறார்கள். மோடி பிரதமரானால், ஓபாமா மோடியின் காலடியில் விழுவார் என்ற அளவுக்கு பேசுகிறார்கள். மோடி ஒரு சர்வரோக நிவாரணி. இந்தியாவை பீடித்திருக்கும் அத்தனை பிணிகளுக்கும் மோடி ஒருவர்தான் தீர்வு என்ற ரீதியில் பேசி வருகிறார்கள். இது உண்மையா ? மோடி இந்தியாவின் சர்வரோக நிவாரணியா ?
இடது சாரிகள் ஆதரித்தாலும் மக்களுக்கு எதிரான டாடா நானோ கார் ஆலையை மேற்கு வங்கத்திலிருந்து விரட்டியடித்தார் மம்தா பானர்ஜி. அங்கிருந்து பெட்டியைத் தூக்கிக் கொண்டு நேராக ரத்தன் டாடா சென்ற இடம் குஜராத். குஜராத்தில் கட்டப்படும் நானோ கார் ஆலைக்காக, 1100 ஏக்கர்கள் நிலம் ஒதுக்கப்பட்டன. மோடியின் ராஜதந்திரம் வென்று விட்டது. குஜராத்தை தொழில் வளர்ச்சியடைந்த முன்னோடி மாநிலமாக்க மோடி விரைந்து நடவடிக்கை எடுக்கிறார் என்று மோடியின் அடிப்பொடிகள் புகழ்ந்தனர். ஆனால், அந்த 1100 ஏக்கர் நிலத்தை வாங்குவதற்கான முத்திரைத்தாள் கட்டணம் கூட ரத்தன் டாடா நிறுவனத்திடமிருந்து வசூலிக்கப்படாமல் விலக்களிக்கப்பட்டது தெரியுமா ? மோடி அரசில் ஊழலே இல்லை என்று கூறப்படுகிறது. ஒரு மிகப்பெரிய முதலாளி. பல கோடி ரூபாய்களுக்கு அதிபதி. அந்த முதலாளியிடம் நிலம் வழங்கி, அதற்கு முத்திரைத் தாள் கட்டணம் கூட வசூலிக்காமல் தொழில் தொடங்கச் சொல்வது ராஜதந்திரமா ? அது மட்டுமல்ல…. ஒரு நிலத்தை விவசாய நிலத்திலிருந்து வேறு பயன்பாட்டுக்காக மாற்றினால், ஒரு சதுர மீட்டருக்கு குஜராத் விதிகளின்படி ரூபாய் 6 செலுத்த வேண்டும். இந்த 6 ரூபாய் செலுத்துவதிலிருந்தும் ரத்தன் டாடா நிறுவனத்துக்கு விலக்களிக்கப் பட்டுள்ளது. இணைப்பு.
இது மட்டுமல்ல, ரத்தன் டாட்டாவின் காலடியில் மொத்த குஜராத்தையே அடகு வைத்தவர்தான் மோடி. மேற்கு வங்கத்திலிருந்து ரத்தன் டாட்டாவை மம்தா பானர்ஜி விரட்டியடித்ததும் குஜராத் அரசோடு ஒப்பந்தம் கையெழுத்திட்டார் ரத்தன் டாட்டா. இந்த ஒப்பந்த த்தின் ஒரு பகுதி என்ன தெரியுமா ? குஜராத்திலிருந்து டாட்டா நானோ ஆலையின் இயந்திரங்கள் மற்றும் இதர பாகங்களை குஜராத்தில் உள்ள ஆலைக்கு எடுத்து வர ஆகும் மொத்த செலவான 700 கோடியையும் குஜராத் அரசே ஏற்றுக் கொள்ளும். சரி.. இந்த சலுகையோடு நிறுத்தப்பட்டதா என்றால் இல்லை. நானோ கார் ஆலையை குஜராத்தில் தொடங்குவதற்காக மோடி அரசு அரசு, டாட்டா நிறுவனத்துக்கு 9570 கோடி ரூபாய் கடன் வழங்கும். இந்தக் கடனை டாட்டா நிறுவனம் அடுத்த 20 ஆண்டுகளில் மெள்ள மெள்ள திருப்பிச் செலுத்தினால் போதும். இதற்கான வட்டி எவ்வளவு தெரியுமா ? அதிர்ச்சி அடையாதீர்கள். புள்ளி ஒரு சதவிகிதம்தான் இதற்கான வட்டி.
இது மட்டும்தான் சலுகையா என்றால், இல்லை. முதல் இரண்டாண்டுகளுக்கு டாட்டா நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 1100 ஏக்கருக்கான தவணைத் தொகையை செலுத்த வேண்டியதில்லை. இது தவிரவும், தொழில் வரி, மற்றும் இதர வரிகளுக்கு சலுகை. டாட்டா நானோ கார் தொழிற்சாலை குஜராத்துக்கு வந்தது முதல் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு, குஜராத் மக்களின் வரிப்பணம் டாட்டாவுக்கு அள்ளி வழங்கப்படும் அளவு என்ன தெரியுமா ? 30 ஆயிரம் கோடி. 20 ஆண்டுகளில் 50 லட்சம் நானோ கார்களை உற்பத்தி செய்வதாக டாட்டா நிறுவனம் அறிவித்திருந்த்து. ஒரு காரின் விலை ஒரு லட்சம் என்று வைத்துக் கொண்டால், 50 லட்சம் கார்களுக்கு குஜராத் மக்கள், ஒரு காருக்கு 60 ஆயிரம் வீதம் மானியமாக அளிக்கிறார்கள். இன்று சாலையில் ஓடும் ஒவ்வொரு நானோ காரும், குஜராத் மக்களின் வரிப்பணத்தில் கிடைத்த மானியத்தால் ஓடுகிறது. குஜராத் மக்களின் வரிப்பணத்தில் சலுகை பெற்ற ரத்தன் டாட்டாவுக்கு வெறும் லாபம் மட்டுமே. இணைப்பு
இந்த விபரத்தை மோடி ஆதரவாளர்களிடம் கூறினால், குஜராத்தில் வேலை வாய்ப்பை பெறுக்குவதற்காக மோடி இந்தச் சலுகைகளை அளிக்கிறார் என்று கூறுவார்கள். 30 ஆயிரம் கோடி செலவழித்து வேலை வாய்ப்பை பெருக்குவதற்கு பதிலாக, அரசே மேலும் பல பணியிடங்களை உருவாக்கினால், பல்வேறு வேலை வாய்ப்புகள் உருவாகுமே… !!! ரத்தன் டாட்டா போன்ற பன்னாட்டு முதலாளிக்கு லாபத்தை வழங்கி எதற்காக வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும்… ? சரி ஒரு வாதத்துக்காக இதை ஏற்றுக் கொள்ளலாம். உண்மையில், குஜராத்தில் தொடங்கப்பட்ட நானோ கார் ஆலையால் வேலை வாய்ப்பு பெருகியதா ?
குஜராத்தில் அமலில் உள்ள சட்டத்தின் படி ஒரு தொழிற்சாலை தொடங்கப்படுகையில் 85 சதவிகிதமான பணியாளர்கள் உள்ளுரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இது தவிரவும் மேலாண்மை மற்றும் கண்காணிப்பாளர் பணியிடங்களில் (Managerial and Supervisorial positions) குறைந்தபட்சம் 60 சதவிகிதம் உள்ளுர் மக்களால் நிரப்பப்பட வேண்டும். இந்த சட்டம், உள்ளுர் வேலைவாய்ப்பை உத்தரவாதப் படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது.
ஆனால் டாட்டாவின் நானோ ஆலைக்காக இந்த சட்டத்தையும் தளர்த்தி உத்தரவிட்டுள்ளார் மோடி. அப்படி தளர்த்தி உத்தரவிடப்படுகையில், அதில் குறிப்பிடப்பட்டுள்ளது என்ன தெரியுமா ? “டாட்டாவுக்கு வழங்கப்படும் இந்தச் சலுகை சிறப்புச் சலுகை. இந்தச் சலுகை மற்ற தொழிற்சாலைகளுக்கும், தொழில்களுக்கும் பொருந்தாது”. இணைப்பு. எப்படி இருக்கிறது மோடியின் ராஜதந்திரம் ?
மோடியின் இந்த செயலுக்கும், ஸ்பெக்ட்ரத்தை சகாய விலையில் முதலைகளுக்கு விற்ற ஆ.ராசாவின் செயலுக்கும் ஏதாவது வேறுபாடு இருக்கிறதா ?
குஜராத்தில் தொழில் முதலீடு அதிக அளவில் இருக்கிறது என்றால்… அதில் வியப்படைய என்ன இருக்கிறது ? இப்படி சலுகைகள் வழங்கப்பட்டால் எந்த தொழில் அதிபர் குஜராத்தில் தொழில் தொடங்க விரும்பமாட்டார் ?
வறுமை ஒழிப்பு, சத்துக்குறைவான குழந்தைகள் என்று பல்வேறு அளவீடுகளில் குஜராத் மற்ற மாநிலங்களை விட பின்தங்கியே உள்ளது. முன்னேற்றம் என்ற பெயரில் சந்திரபாபு நாயுடு ஐதராபாத்தை முன்னேற்றியதும், கர்நாடகா மாநிலத்தில் பெங்களுரு மட்டும் முன்னேறியதும் போலவே, அகமதாபாத் உள்ளிட்ட நகர்ப்புறங்களில் மட்டும் உட்கட்டமைப்பை மேம்படுத்தி, ஒட்டு மொத்த குஜராத்தே வளர்ந்து விட்டதாக மாயையை உருவாக்குகிறார் மோடி. இணைப்பு 1. இணைப்பு 2 வறுமையில் உள்ளவர்களை சென்றடையாத வளர்ச்சி என்ன வளர்ச்சி ?
மோடி ஊழலுக்கெதிரானவர் என்று வாதிடுகின்றனர் பிஜேபியினர். பிஜேபி கட்சியைச் சேர்ந்த பாபு போகாரியா என்பவர் சட்டவிரோதமாக குவாரி நடத்தியதற்காக 2006ம் ஆண்டு வழக்கில் சிக்கியவர். அவர் மீதான குற்றச்சாட்டுகள் விசாரணையில் இருந்தபோதே, அவரை தன் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்ட நேர்மையாளர்தான் மோடி. இணைப்பு. ஊழலுக்கு எதிராக போராடும் போராளியாக தன்னைக் காட்டிக் கொண்ட மோடிதான், வலுவில்லாத ஒரு லோக்பால் மசோதாவை குஜராத் மாநிலத்தில் அறிமுகப்படுத்தியவர்.
சிஏஜி அறிக்கை ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஏற்பட்ட மொத்த இழப்பீடாக குறிப்பிட்ட ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடியை வைத்து இன்று வரை அரசியல் செய்து கொண்டிருக்க க்கூடிய கட்சி பிஜேபி. இந்த பிஜேபியின் பிரதம வேட்பாளராக, ஊழலுக்கு எதிரான பிதாமகனாக தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும் நரேந்திர மோடியின் அரசு, 16 ஆயிரம் கோடி ஊழலில் ஈடுபட்டிருப்பதாக 2012ம் ஆண்டுக்கான சிஏஜி அறிக்கை குற்றம் சாட்டுகிறது. இந்த அறிக்கை குஜராத் சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டபோது, எந்த விதமான விவாதமும் நடத்த அனுமதிக்காமல், ஒட்டுமொத்த எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் சஸ்பெண்ட் செய்தவர்தான் இந்த மோடி. இணைப்பு. 2013ம் ஆண்டுக்கான அறிக்கையில், ரிலையன்ஸ், எஸ்ஸார் உள்ளிட்ட பல்வேறு பன்னாட்டு முதலாளிகளுக்கு சலுகைகளை அள்ளி வழங்கி கோடிக்கணக்கில் நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறார் மோடி என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இணைப்பு.
குஜராத் சட்டமன்றத்தில் எவ்விதமான எதிர்ப்பையோ விவாதத்தையோ அனுமதிக்க மறுப்பவர் மோடி. சட்டமன்றத்தில் விவாதத்தில் பங்கெடுப்பதை விட, அரசியல் மேடைகளில் சோனியா குடும்பத்தையும், மன்மோகன் சிங்கையும், பாகிஸ்தானையும், திட்டுவதையே முழு நேர வேலையாக வைத்துள்ளார் மோடி.
இந்த மோடிக்கும், காங்கிரஸ் கட்சியில் உள்ள அரசியல்வாதிகளுக்கும் என்ன வேறுபாடு ? காங்கிரஸ் கட்சி அரசியல்வாதிகளுக்கு எந்த விஷயத்திலும் வேறுபாடு இல்லாதவரே இந்த மோடி. சென்னை மொழியில் சுருக்கமாகச் சொன்னால், மோடி ஒரு டுபாக்கூர் பேர்விழி.
இவரது டுபாக்கூர் வேலைகளுக்கான சிறந்த உதாரணம், உத்தராகாண்ட் வெள்ளத்திலிருந்து ஒரே நாளில் 15 ஆயிரம் பேரைக் காப்பற்றினார் என்ற ப்பி.ஆர் ஸ்டன்ட். இணைப்பு
அதனால், 10 ஆண்டுகளாக ஆண்ட காங்கிரஸ் கட்சிக்குப் பதிலாக மோடி ஒரு ஐந்து ஆண்டுகள் ஆண்டால் என்ன ? கருணாநிதி ஐந்து ஆண்டுகள் ஆண்ட பிறகு ஒரு மாற்றத்துக்காகத்தானே ஜெயல லிதாவை தேர்ந்தெடுத்தோம்… அது போல மோடிக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் என்ன ? ஒரு மாற்றம் அவசியம்தானே… ?
கேள்விகள் ஏற்றுக் கொள்ளக்கூடியவையாகத்தான் இருக்கின்றன. ஆனால் மோடியை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. வரும் நாட்களில் அதற்கான காரணங்களை ஆராய்வோம்.
இந்த வாதங்கள் போசுமானதல்ல மோடி மத வெறியர் என்று கூட சொல்லலாம் ஆனால் ஊழல் செய்தார் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை அதனால்தான் காங்கிரஸ் கூட மத வெறி எதிர்ப்பை பயன்படுதுகிறது