தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீது உள்துறை செயலாளர் மற்றும் காவல் துறை தலைமை இயக்குநருக்கு அனுப்பப்பட்டுள்ள புகார்கள் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று தகவல்கள் கூறுகின்றன.
தருமபுரி மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக உள்ளவர் அஸ்ரா கர்க். இவர் 2004ம் ஆண்டு நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி. உத்திரப்பிரேதசத்தைச் சேர்ந்த இவர், திருநெல்வேலி, மதுரை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் பணியாற்றியவர். கடந்த இரண்டாண்டுகளாக தருமபுரி மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். தருமபுரி மாவட்டம் நத்தம் நாயக்கன் கொட்டாய் ஆகிய இடங்களில் இரண்டாண்டுகளுக்கு முன்பு 300க்கும் மேற்பட்ட தலித்துகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட போது, கண்காணிப்பாளராக இருந்து சிறப்பாக செயல்பட்டதாக, தலித்துகள் மற்றும் வன்னியர்கள் ஆகிய இரு தரப்பிலும் நற்பெயரை பெற்றார். இவர் பெயர் மத்திய புலயாய்வுத் துறை மாறுதலுக்கு பரிசீலனையில் உள்ளது.
இந்நிலையில், சவுக்கு தளத்தில் இவரைப் பற்றிய பல்வேறு புகார்களை உள்ளடக்கி “அஸ்ரா கர்க் என்ற அப்பாடக்கர்” என்ற கட்டுரை வெளியாகி காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சவுக்கு தளத்தில் வெளியாகிய கட்டுரையின் அடிப்படையில், தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்ராக கர்க், தலித்துகளுக்கு எதிராகவும், வன்னியர்களுக்கு ஆதரவாகவும் நடந்து கொள்வதாகவும், ஆறு தலித் இளைஞர்களை நக்சலைட்டுகள் என்று போலியாக கைது செய்துள்ளதாகவும், சவுக்கு தளத்தில் வெளியான கட்டுரையில் உள்ள புகார்களின் மீது விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும், செங்கொடி என்ற சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் உள்துறை செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர் ஆகியோரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

உள்துறை செயலாளரிடம் புகார் அளித்து விட்டு பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் வழக்கறிஞர்கள் மார்க்ஸ், ரஜினிகாந்த் மற்றும் செங்கொடி
தனது புகாரில் செங்கொடி சவுக்கு இணையதளத்தில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்ரா கர்க் தனது பதவியை பயன்படுத்தி செய்து வரும், சட்டவிரோத சமூகவிரோத செயல்கள் அதிர்ச்சியை அளிப்பதாகவும், அக்கட்டுரையில் உள்ள தகவல்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கோரியுள்ளார்.
புகார் அனுப்பியது குறித்து செங்கொடியிடம் பேசியபோது, “அஸ்ராகர்க், தலித் மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அவர் விநாயகா மருத்துவக் கல்லூரியில் தனது உறவினருக்கு மருத்துவ சீட் பெற்ற விவகாரம் குறித்து நாங்கள் கேள்விப்பட்டிருந்தோம். அது குறித்து விசாரித்துக் கொண்டிருந்தோம்.
குறிப்பாக ஆறு தலித் இளைஞர்களை நக்சலைட்டுகள் என்று அவர் பொய் வழக்கில் கைது செய்தது எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சையை ஏற்படுத்தியது. 2012ம் ஆண்டு, நத்தம் காலனியில் நடந்த வன்முறைக்குப் பிறகு நாங்கள் தொடர்ந்து அப்பகுதி மக்களோடு தொடர்பில் இருந்து வருகிறோம். அம்மக்கள், அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் அதிர்ச்சியிலிருந்தே இன்னும் மீளவில்லை.
350க்கும் மேற்பட்ட வீடுகள் எரிக்கப்பட்டபோது கூட அம்மக்கள் வன்முறையில் ஈடுபடவில்லை. இளவரசன் தற்கொலை செய்து கொண்டபோது கூட அம்மக்கள் வன்முறையில் ஈடுபடவில்லை. ஆனால், தற்போது ஆறு இளைஞர்கள் வன்னியர் தலைவர்களை கொலை செய்ய தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டார்கள் என்று கூறி கைது செய்தது எங்களுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.
நக்சலைட் என்று கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவரான சக்தி என்பவர் அந்த ஊரின் தலைவராக உள்ளார். 22 ஜுன் அன்று அவர் என்னை தொடர்பு கொண்டு, இளவரசனின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்கிக்கு மைக் மற்றும் பேனர் கட்ட அனுமதி வாங்கி விடலாம் அல்லது இறுதி நேரத்தில் காவல்துறையினர் சிக்கல் ஏற்படுத்துவர் என்று கூறியதும், நான் கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்தில் அனுமதி கேட்டு கடிதம் எழுதித்தருமாறு கூறியிருந்தேன்.
அவரும் அதன்படியே, கடிதம் எழுதி காவல் நிலையம் சென்றால் வாங்க மறுத்து எஸ் பி அலுவலகம் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அவரும் எஸ்.பி அலுவலகம் சென்றார். எஸ்பி அலுவலகத்திலும் வாங்க மறுத்துள்ளனர். பின்னர் அவர் கலெக்டர் அலுவலகம் சென்று மனுவை கொடுத்து விட்டு வந்தார். ஆனால், கலெக்டர் அலுவலகத்தில் எந்த பதிலும் வரவில்லை.
இந்நிலையில் கிருஷ்ணாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் 24ம் தேதி அன்று வந்து 144 தடை உத்தரவு போடப்பட்டதற்கான உத்தரவின் நகலில் கையெழுத்து பெற்றுச் சென்றதாக தெரிவித்தார். நான் 144 உத்தரவின் நகலை பெற்று அனுப்புங்கள், நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெறலாம் என்று கூறினேன். ஆனால், எஸ்பி அலுவலகத்திலும், கலெக்டர் அலுவலகத்திலும், ஆணையின் நகலை தராமல் இழுத்தடித்த விபரத்தையெல்லாம் என்னிடம் 25 மற்றும் 27ம் தேதி அன்று தொலைபேசி மூலம் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். இந்த நிலையில் அவரையும் மேலும் ஐந்து பேரையும் ஆயுதப்பயிற்சி எடுத்தார்கள் என்று எஸ்.பி. அஸ்ரா கர்க் கைது செய்திருப்பது, இளவரசனின் முதலாமாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சியை நடத்த விடாமல் செய்வதற்காகத்தான் என்ற சந்தேகம் இருந்தது.
இந்த நேரத்தில் சவுக்கில் வந்த கட்டுரை எங்கள் சந்தேகங்களை உறுதி செய்தது. இதனால், இந்த விவகாரங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்பதற்காகவே புகார் அளித்தோம்.
எங்கள் புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறை தலைமை இயக்குநர், விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்” என்று கூறினார் செங்கொடி.
இதற்கிடையே, ஆறு தலித்துகள் நக்சலைட்டுகள் என்று கைது செய்யப்பட்டது குறித்து உண்மை அறியும் குழு மூலமாக களத்தில் சென்று ஆய்வு நடத்திய பேராசிரியர் மார்க்ஸ், 18 ஜுலை 2014 அன்று தருமபுரியில் வெளியிட்ட இறுதி அறிக்கையிலும், சவுக்கு கட்டுரையை சுட்டிக்காட்டி விசாரணை கோருகிறார்.
பேராசிரியர் மார்க்ஸின் இறுதி அறிக்கை பின்வருமாறு.
“சென்ற ஜூலை 10, 2014 அன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு விவேகானந்தன் முன்னதாகக் கைதுசெய்யப்பட்ட சக்தி, சந்தோஷ் முத்லான ஆறு பேர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுப்புக் காவலில் வைக்க ஆணையிட்டுள்ளார் [எஸ்.சி.(தே.பா.ச) எண் 10/ 2014]..
இந்த ஆணையில் ஜூலை 28 அன்று போலீசாரால் கைது செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் சக்தி உள்ளிட்ட அறுவரும் 27 அன்று இரவு 11.30 மணிக்கு நத்தம் காலனியில் கூடி அடுத்த நாள் காலையில் மதியழகன் என்ன்பவரைக் கொலை செய்யச் சதித் திட்டம் தீட்டியதாகச் சொல்லப்படுகிறது. இந்த நேரத்தில் அவர்களில் மூவர் (சந்தோஷ், சங்கர், அதியமான்) தருமபுரியில் போலீஸ் காவலில் இருந்தனர். மற்ற மூவர் (சக்தி, துரை, அசோக்) அவர்களைத் தேடி தருமபுரி காவல் நிலையத்திற்கு, கவல்துறை எஸ்..பி.சி.ஐ.டி சிங்காரம் அறிவுறுத்தியபடி, வந்து கொண்டிருந்தனர். பின்னிரவு 12 மணி வாக்கில் அவர்களும் கைது செய்யப்பட்டனர். எனவே இந்த நேரத்தில் அவர்கள் நத்தம் காலனியில் சதி செய்துள்ளனர் என்பது அப்பட்டமான பொய்.
28ந்தேதி காலை 5 மணிக்கு நாய்க்கன் கொட்டாயில் மூவரும், பிறகு அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தங்கன் குட்டையில் மூவரும் பயங்கர ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டதாக ஆட்சியரின் ஆணையில் குறிப்பிடப் படுகிறது. இந்த நேரத்தில் அவர்கள் அறுவரும் போலீஸ் காவலில் இருந்துள்ளனர்.
தங்கள் வீடுகள் தாக்கப்பட்டதற்காக ஆத்திரமுற்று, அதற்குக் காரணமான சாதியினரைக் கொலை செய்ய வேண்டி. ஆயுதப் பயிற்சிக்காக, சமூகப் பணிகளை நோக்கமாகக் கொண்ட துடி அமைப்பில் சேர்ந்ததாகவும் அதன் தொடர்ச்சியாக நக்சல்பாரி இயக்கத்தில் சேர்ந்ததாகவும் மாவட்ட ஆட்சியரின் ஆணை கூறுகிறது. சமூகப் பணி செய்யும் துடி அமைப்பு எவ்வாறு ஆயுயதப் பயிற்சி அளிக்க முடியும் அந்த அமைப்பிற்கும் நக்சல்பாரி அமைப்பிற்கும் என்ன தொடர்பு, அல்லது அதையே ஒரு நக்சல்பாரி அமைப்பாக மாவட்ட ஆட்சியர் கருதுகிறாரா என்பவற்றிற்கு எந்த விளக்கமும் இல்லை.. கைது செய்யப்பட்டவர்களின் வாக்கு மூலங்கள் கடும் சித்திரவதையின் அடிப்படையில் வாங்கப்பட்டுள்ளது.
ஆக மாவட்ட ஆட்சியர் சிந்திக்காமல் (without applying his mind), காவல்துறையின் கூற்றை அப்படியே ஏற்றுத் தனக்கு அளிக்கப்பட்டுள்ள இந்தத் தடுப்புக் காவல் அதிகாரத்தைத், தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என இக்குழு கருதுகிறது. இதை அரசும் மத்திய உள்துறைச் செயலகமும் கணக்கில் கொண்டு இந்த ஆணைக்கு ஒப்புதல்வழங்கக் கூடாது என இக் குழு வேண்டிக் கொள்கிறது.
சென்ற ஜூலை 14ந் தேதிய சென்னை ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழில் ஒரு மேற்கு மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் தனது தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக மேலதிகாரிகளுக்குப் புகார் செய்துள்ளதாகவும், அது தொடர்பாக உளவுத் துறையினர், தாங்கள் அவரது தொலை பேசியை ஒட்டுக் கேட்கவில்லை, அவரது டிரைவரின் தொலைபேசியைத்தான் ஒட்டுக் கேட்டதாகக் கூறுவதாகவும் ஒரு செய்தி வந்தது. இந்த டிரைவர் அடிக்கடி காவல்துறை வாகனத்தை சேலத்திற்கு ஓட்டிச் சென்றது குறித்துப் புகார் வந்ததாகவும், அப்படி ஓட்டிச் சென்றது சுங்கச் சாவடி சி.சி.டி.வியில் பதிவாகி உள்ளதாக உளவுத் துறையினர் சொல்வதாகவும் அச் செய்தி கூறுகிறது.
இது தொடர்பாக ‘சவுக்கு’ எனும் ஒரு சமூக ஊடக வலைத் தளம் சில புகார்களை முன்வைக்கிறது. . காவல்துறையில் உள்ள குழு மோதல்கள் இதற்குப் பின்னணியாக உள்ளதெனவும், அந்த எஸ்.பி வேறு யாருமல்ல தருமபுரி மாவட்ட கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க்தான் எனவும் அது கூறுகிறது. தவிரவும் காவல்துறை வாகனம் தினந்தோறும் அஸ்ரா கார்கின் மைத்துனி கீர்த்தி ஶ்ரீ என்பவரை தருமபுரியிலிருந்து அவர் எம்,டி படிக்கும் சேலம் வினாயகா மிஷன் மருத்துவமனைக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப் பயன்படுத்தப்பட்டதாகவும் அந்த ஊடகம் குறிப்பிடுகிறது. இந்த மருத்துவமனையின் கிட்னி ஊழலை விசாரித்த ஒரு அதிகாரி எவ்வாறு அதே மருத்துவமனைக் கல்லூரியில் தன் மைத்துனியை அதிகத் தொகை கொடுத்துப் பெறக்கூடிய ஒரு மேற்படிப்பில் சேர்த்தார் என்கிற அய்யத்தையும் அது முன் வைக்கிறது.
இவை உண்மையா இல்லையா என்பது குறித்து ஆய்வு செய்வது எங்களது நோக்கத்திற்கு உட்பட்டதல்ல. ஆனால் தன் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுவதாகப் புகார் கொடுத்த அதிகாரி அஸ்ரா கார்க்தான் எனில் அவருக்கும் காவல்துறை மேல்மட்டத்திற்கும் இடையே உள்ள பிளவுக்கும் இந்தக் கைதுகளுக்கும் ஒரு தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது. இன்று இந்தக் கைது நடவடிக்கைகளை பெரிய அளவில் மேற்கொண்டு மீண்டும் நக்சல்பாரி இயக்கம் இப்பகுதியில் உயிரூட்டப் படுவதாகப் பீதியைக் கிளப்புவது அவருக்குப் பயன்படலாம்.. தான் தேசியப் பாதுகாப்பிற்கு ஊறு விளைவித்தவர்களைக் கைது செய்யும் முக்கிய பணியில் உள்ளபோது இப்படி மேலதிகாரிகளால் பழி வாங்கப் படுவதாக ஒரு கருத்தை உருவாக்க இந்த உற்சாகம் காட்டப்படுகிறதா என்கிற கேள்வியும் எழுகிறது.
எப்படி ஆயினும் இத்தகைய அய்யங்கள் உள்ள சூழலில் தமிழகக் காவல்துறை இவ்வழக்கைப் புலனாய்வு செய்தால் நீதி கிடைக்காது எனவும், மேலும் பல அப்பாவி தலித்கள் பழிவாங்கப்படுவதற்கும், இரு சமூகங்களுக்கும் இடையே உள்ள பகை அதிகரிக்கவுமே இது வழி வகுக்கும் எனவும் நாங்கள் உறுதியாகக் கருதுகிறோம்.
எங்களைப் பொறுத்த மட்டில் வன்முறை அரசியலையும், அதற்கென ஆயுதப் பயிற்சி மேற்கொள்வதையும் கண்டிக்கிறோம். அது குறித்துப் புலன் விசாரணை செய்ய காவல்துறைக்கு பொறுப்புள்ளதையும் ஏற்கிறோம். ஆனால் இந்தப் பொறுப்பு பழி வாங்கும் நோக்கில் யார் மீதும் பயன்படுத்தப்படக் கூடாது எனவும், அதைவிடவும் இது இரு சமூகங்களுக்கு இடையே உள்ள பகையை அதிகரிக்கப் பயன்படுத்தப் படக் கூடாது என்பதிலும் கவலை கொள்கிறோம்.
எனவே நாங்கள் கோருகிற நீதிபதி விசாரணையில் இந்த தொலைபேசி ஒட்டுக் கேட்டல் புகாரும் உள்ளடக்கப்பட்டு விசாரிக்க வேண்டும் எனக் கோருகிறோம். நக்சல்பாரித் தொடர்புகள் குறித்த விசாரணை தேவை எனில் வேறு புலனாய்வு முகமைகள் மூலமாக அது செய்யப்பட வேண்டும் என்கிறோம்.
ஜூலை 4 அன்று இப்போது கைது செய்யப்பட்டுள்ளவர்கள் கொலை செய்யும் நோக்குடன் ஆயுதங்களுடன் சென்ற கதை முற்றிலும் பொய் என்பதால் அவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். இது தொடர்பான முன் குறிப்பிட்ட முதல் தகவல் அறிக்கை முற்றிலுமாக ரத்து செய்யப்பட வேண்டும்.”
தொடர்ச்சியாக அஸ்ரா கர்க் மீது புகார்கள் எழுந்துள்ள நிலையில், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளும் நக்சலைட்டுகள் என்று தலித்துகள் கைது செய்யப்பட்டது குறித்து பிரச்சினை எழுப்ப உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இப்பிரச்சினைகளில் இருந்து அஸ்ரா கர்க் தப்பித்து, மத்திய புலனாய்வுத் துறை செல்வாரா அல்லது சிக்கலில் மாட்டுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கலக்குங்க….எனது மின்னஞ்சலின் சுட்டியை அமுக்கி முழுக் கட்டுரையைப் படிக்கச் சென்றால் இணைய முகவரி…”ctselvam.net”…ஹா ஹா..இப்படித்தான் மூஞ்சில கரியப் பூசணும் இந்த நீதி மான்களுக்கு..
பத்தவச்சுட்டியே பரட்ட……… செத்தான் சிவனாண்டி.