Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

போதமலைக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை தலைமேல் தூக்கி சென்ற அதிகாரிகள்

SAMYUKTHA18-04-2024
போதமலைக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை தலைமேல் தூக்கி சென்ற அதிகாரிகள்

ராசிபுரம் அருகே போதமலைக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை தலை சுமையாக அதிகாரிகள் எடுத்து சென்றனர்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், மலை கிராமப் பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடி மையங்களுக்கு முன்னதாகவே வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது. அதன்படி, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கிழக்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியான போதமலை கடல் மட்டத்திலிருந்து சுமார் 1100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. போதமலை மலைப் பகுதியில் கீழூர், மேலூர், கெடமலை என 3 குக்கிராமங்களில் 1142 வாக்காளர்கள் உள்ளனர். மலைப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் வாக்களிப்பதற்காக ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப் பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ராசிபுரம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கம் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போதமலை மலைப்பகுதிக்கு இன்று காலை அனுப்பப்பட்டது. மலை பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்ல சாலை வசதி இல்லாததால் போதமலை அடிவாரத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு கரடு முரடான பாதையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை அரசு அதிகாரிகள் தலை சுமையாக எடுத்துச் சென்றனர். மேலும் அரசு அதிகாரிகளுக்கு தேவையான இதரப் பொருட்களை மலைவாழ் மக்கள் தலை சுமையாக கொண்டு சென்றனர். மலைப்பகுதியில் உள்ள கீழூர் ஊராட்சி பகுதியில் மண்டல அலுவலர் விஜயகுமார் தலைமையில் பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப்பள்ளியிலும், கெடமலை பகுதியில் மண்டல அலுவலர் பழனிச்சாமி தலைமையில் பழங்குடியினர் உண்டு உறைவிட துவக்க பள்ளியிலும் என 2 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவானது தேர்தல் நடைமுறை விதிகளின்படி நாளை நடைபெற உள்ளது. கடந்த 50 வருடத்திற்கு மேலாக அரசு அதிகாரிகள், காவல் துறையினர் மற்றும் மலைவாழ் மக்கள் இவ்வாறு வாக்குப்பதிவு இயந்திரங்களை தலை சுமையாக எடுத்துச் சென்று வருவது குறிப்பிடத்தக்கது. போதமலையில் தற்போது 140 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 31 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை அமைக்கும் பணியானது தொடங்கப்பட்டு இன்னும் ஒரு வருட காலத்திற்குள் பணி முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அடுத்த சட்டமன்ற தேர்தலில் போதமலைக்கு வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான பொருட்களை இருசக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்