Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

அம்பானி, அதானிக்காகவே "வாரிசு வரி"யை எதிர்க்கிறது, பாஜக; - பிரசாந்த் பூஷண்; காங்கிரசுக்கு கோரிக்கை

CHENDUR PANDIAN.K28-04-2024
அம்பானி, அதானிக்காகவே "வாரிசு வரி"யை எதிர்க்கிறது, பாஜக; - பிரசாந்த் பூஷண்; காங்கிரசுக்கு கோரிக்கை

புதுடெல்லி

பெருந்தொழில் அதிபர்கள் அம்பானி மற்றும் அதானிக்காகவே "வாரிசு வரி"யை பாஜக எதிர்க்கிறது என்று பிரபல சட்ட நிபுணர் பிரசாந்த் பூஷண் கூறியிருக்கிறார். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

நாடாளுமன்றமக்களவை தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கைவெளியிட்டுள்ளது. அதில், ‘‘காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்,நாடு முழுவதும் சொத்துகள் கணக்கெடுக்கப்பட்டு பகிர்ந்தளிக்கப்படும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாட்டு காங்கிரஸ் பிரிவு தலைவர் சாம் பிட்ரோடா கூறும்போது, ‘‘அமெரிக்காவில் வாரிசு வரி உள்ளது. அதாவது ஒருவர் இறந்தால், அவருடைய சொத்துகளில் பாதி அரசுக்கு செல்லும். அவரது வாரிசுக்கு பாதி சொத்து செல்லும். இதுபோன்ற சட்டம் இந்தியாவில் இல்லை’’ என்று கூறியிருந்தார்.

இந்தக் கருத்துகளுக்கு பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா உட்பட பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அத்துடன் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸை கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர்.

இதுகுறித்து உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும் பிரபல சட்ட நிபுணருமான பிரசாந்த் பூஷண் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது:-

"வாரிசு வரி விவகாரத்தில் சாம் பிட்ரோடா கருத்தில் காங்கிரஸ்கட்சி உறுதியாக இருக்க வேண்டும். இந்த வரியை கோடீஸ்வரர்களுக்கு மட்டும் விதிக்க வேண்டும். அந்த வரிப் பணத்தை நாட்டின் வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புகளை உருவாக்கு வதற்கும் பயன்படுத்த வேண்டும்.

இதுபோன்ற வரி எல்லா பணக்கார நாடுகளிலும் உள்ளது.அம்பானி, அதானி போன்ற தொழிலதிபர்களின் வாரிசுகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக வாரிசு வரியை பாஜக எதிர்க்கிறது. அவர்களிடம் லட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் உள்ளன.

சொத்துகளை குவிப்பது குற்றமல்ல. ஆனால், அது எந்த எல்லை வரை? அமெரிக்காவில் வாரிசு வரி உள்ளது. உதாரணமாக ஒருவர் 100 மில்லியன் டாலர் சொத்து சேர்த்துள்ளார். அவர் இறந்த பின்னர் 45 சதவீத சொத்துகளை அவரது வாரிசுகளுக்கு மாற்றிக் கொள்ள முடியும். 55 சதவீத சொத்துகளை அரசு எடுத்துக் கொள்ளும்.

அதேநேரத்தில் இந்தியாவில் ஒருவர் 10 பில்லியன் டாலர் சொத்து சேர்த்து இறந்தாலும், அவரது வாரிசுகளுக்கு 10 பில்லியன் டாலரும் மொத்தமாக செல்லும். பொதுமக்களுக்கு எதுவும் கிடைக்காது. இதுபோன்ற பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்த வேண்டும்".

இவ்வாறு பிரசாந்த் பூஷண் கூறினார்.

காங்கிரஸ் சொன்னது என்ன?

முன்னதாக, சாம் பிட்ரோடாவின் கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்து என்றும் காங்கிரஸ் கட்சியின் கருத்தில்லை என்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு இருந்தது.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் இது பற்றி கூறும்போது, "சாம் பிட்ரோடா தான் முக்கியமானதாக கருதும் விஷயங்களில் தன்னுடைய கருத்துக்களை மிகவும் சுதந்திரமாக வெளிப்படுத்தி வருகிறார். இந்த குறிப்பிட்ட பிரச்சினையிலும் அவர் காங்கிரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை" என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி ஷாம் பெற்றோராவின் கருத்தில் உறுதியாக இருக்க வேண்டும் என்று பிரசாந்த் பூஷண் வலியுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்