Logo
Logo

முக்கிய செய்தி:

பொழுதுபோக்கு

புறம்போக்கு நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணை போகும் அதிகாரிகள்...குற்றவியல் நடவடிக்கை...உயர் நீதிமன்றம் உத்தரவு

MARY RAJAKUMARI09-08-2023
புறம்போக்கு நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணை போகும் அதிகாரிகள்...குற்றவியல் நடவடிக்கை...உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு புறம்போக்கு நிலங்களை தனிநபர்கள் சொந்தம் கொண்டாட துணை போகும் அதிகாரிகள் மீது குற்றவியல் ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கீழ்கட்டளையைச் சேர்ந்த பாதம் சந்த் ஜெயின், சுனிதா ஜெயின், நீரஜ் ஜெயின் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், பல்லாவரம் தாலுாவில் உள்ள கீழ்கட்டளையில் எம்.கே.நகர் 1-வது தெருவில் எங்களுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த இடம் ரயத்துவாரி புஞ்சை என கிராம பதிவேடுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் எங்களது இடம் வருவாய் துறை ஆவணங்களில் ஏரி புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஆகவே நீர்ப்பிடிப்பு பகுதிக்குள் வருவதால் தடையில்லா சான்று வழங்க முடியாது எனக்கூறி கடந்த பிப்.6-ம் தேதி உத்தரவிட்டுள்ளனர்.

எனவே அந்த உத்தரவை ரத்து செய்து எங்களது நிலத்தை வீ்ட்டுமனைப் பகுதியாக மாற்ற உத்தரவிட வேண்டும், என கோரியிருந்தனர்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பி்ல் வழக்கறிஞர் சுந்தரம் ஆஜராகி, மனுதாரர்கள் வசம் உள்ள இடத்தை ஆய்வு செய்தபோது அந்த நிலம் ஏரிஉலுவை என வகைப்படுத்தப்பட்ட நீர்நிலைப் பகுதிக்குள் வருவதால் தடையில்லா சான்று வழங்க இயலாது, என்றார்.

அதற்கு மனுதாரர்கள் தரப்பில் நீர்நிலையின் அருகில் தங்களது நிலம் இருப்பதால் நீர்ப்பிடிப்பு பகுதி என அதிகாரிகள் தரப்பி்ல் கூறுவதாக ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்துள்ள உத்தரவில், வருவாய் துறை அதிகாரிகளும், நீர்வளத்துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து நீர்நிலைகளையும், அரசு புறம்போக்கு நிலங்களையும் கண்டறிந்து வரையறை செய்ய வேண்டும் எனவும் வீட்டு மனைகளின் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு சென்று விட்டதால் பேராசைக்காரர்கள் தங்களது சுயநலனுக்காக நீர்நிலைகளையும் விட்டு வைப்பதில்லை எனவும் அரசு நிலங்களை சட்டவிரோதமாக போலி ஆவணங்கள் மூலமாக மாற்றி சொந்தம் கொண்டாடுகின்றனர் எனவும் கூறினார். இதற்கு அதிகாரிகளும் துணை போகின்றனர், எனவே அரசு புறம்போக்கு நிலங்களை தனிநபர்கள் சொந்தம் கொண்டாட துணை போகும் அதிகாரிகள் மீது குற்றவியல் ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

அதிகாரிகளும் எவ்வித விசாரணையுமின்றி அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் நீர்நிலை பகுதிகளுக்கு தடையில்லா சான்று கொடுத்து விடுகின்றனர்.

இந்த நடைமுறை ஏற்புடையதல்ல, எனவே மனுதாரர் இந்த நிலம் தனக்கு சொந்தமானது எனக்கூறுவதற்கு ஆதரவாக எந்தவொரு ஆதாரங்களையும் சமர்ப்பிக்கவில்லை என்பதால், மனுதாரர்கள் கோரும் நிவாரணத்தை அளிக்க முடியாது. எனவே மாவட்ட ஆட்சியர் இந்த நிலத்தை ஆய்வு செய்து நீர்நிலையாக இருந்தால் அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற துரித நடவடிக்கை எடுக்க வேண்டும், என உத்தரவிட்டுள்ளார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்