Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

அண்ணாமலை வேட்புமனுவை ஏற்க திமுக, அதிமுக, நாதக கட்சியினர் எதிர்ப்பு

SAMYUKTHA28-03-2024
அண்ணாமலை வேட்புமனுவை ஏற்க திமுக, அதிமுக, நாதக கட்சியினர் எதிர்ப்பு

கோவை பாஜ வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனுவை ஏற்க அதிமுக, நாம் தமிழர் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது.

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோவை தொகுதிக்கு உட்பட்ட வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் கலெக்டருமான கிராந்திகுமார்பாடி தலைமையில் இன்று நடந்தது. அப்போது, திமுக, அதிமுக, நாதக மற்றும் சுயேட்சை கட்சி வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. பாஜ சார்பில் போட்டியிடும் அண்ணாமலையின் வேட்பு மனுவும் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. அண்ணாமலை தரப்பில் 2 வேட்புமனுக்கள் அளிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மற்றொரு வேட்புமனு பரிசீலிக்கப்பட்டது. அப்போது அண்ணாமலையின் வேட்புமனுவில் தவறு இருப்பதாகவும், அதனை ஏற்கக்கூடாது என்றும் அதிமுக, நாம் தமிழர், திமுகவினர் கூறினர். அண்ணாமலையின் வேட்புமனு படிவம்-26 தேர்தல் ஆணையத்தால் அளிக்கப்பட்டுள்ளதுபோல் இல்லை எனவும், ‘எக்ஸ்ட்ராக்ட்' பகுதியில் அவருக்கு வாக்கு இருக்கும் தொகுதி மற்றும் நாடாளுமன்ற தொகுதியை பற்றி குறிப்பிடாமல் இருப்பதாகவும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் மற்றும் அவரின் வக்கீல் விஜயராகன் ஆகியோர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அண்ணாமலையின் வேட்பு மனுவில் குறைகள் இருப்பதாக கூறிய அதிமுக வக்கீல்கள் தேர்தல் ஆணையம் அளித்துள்ள கையேட்டை காண்பித்து கேள்வி எழுப்பினர். அண்ணாமலை வேட்புமனுவில் தவறுகள் இருப்பதால் ஏற்கக்கூடாது என தெரிவித்தனர். கடும் வாக்குவாதம் நடந்து கொண்டிருந்த நிலையில், கிராந்திகுமார்பாடி அண்ணாமலையின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவித்தார். இதனால் திமுக, அதிமுக, நாதக கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுபற்றி அதிமுக வக்கீல் கோபால் கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: கோவை மக்களவை தொகுதிக்கு நீதிமன்ற பயன்பாட்டிற்கான முத்திரைத்தாளில் (Indian court Fee) பத்திரம் மூலம் அண்ணாமலை வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். நீதிமன்றம் அல்லாத முத்திரைத்தாளில் (Indian non judicial) மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். நீதிமன்ற பயன்பாட்டிற்கான முத்திரைத்தாளை பயன்படுத்தி வேட்புமனு தாக்கல் செய்யக்கூடாது. இதனை சட்டப்படி ஏற்கக்கூடாது. இந்த முத்திரைத்தாள் பயன்படுத்தியதால் அவர் வெற்றி பெற்றாலும் அது செல்லாது. இவ்வளவு பெரிய தவறை தேர்தல் அதிகாரி கவனிக்கவில்லை. அண்ணாமலை வேட்பு மனுவை ஏற்றுக்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் அழுத்தம் கொடுத்து இருக்கும். வேட்புமனு பரிசீலனையின்போது 10 நிமிடங்கள் அண்ணாமலை வேட்புமனுவை நிறுத்தி வைக்க வேண்டும், அதில் தவறுகள் இருப்பதாக கூறினோம். ஆனால், தேர்தல் நடத்தும் அலுவலர் அதனை செய்யவில்லை. ஐபிஎஸ் படித்தேன், ஐஐஎம்-ல் படித்தேன் என தன்னை புத்திசாலியாக கூறி வரும் அண்ணாமலை இப்படி ஒரு வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். பாஜவிடம் தேர்தல் ஆணையம் இருப்பதை இது காட்டுகிறது. அண்ணாமலை வெற்றி பெற்றாலும் அவரின் வெற்றி உறுதியாக செல்லாது. இந்த முத்திரைத்தாள் குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம். இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து கலெக்டர் விளக்கம் அளிக்கையில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் கலெக்டருமான கிராந்திகுமார் பாடியிடம் கேட்ட போது, ‘அண்ணாமலை சார்பில் எண் 17 மற்றும் எண் 27 என இரண்டு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதில், எண் 17-ல் கையெழுத்து இல்லை மற்றும் நீதிமன்ற முத்திரை தாள் பத்திரம் பயன்படுத்தியதால் நிராகரிக்கப்பட்டது. எண் 27 வேட்புமனு சரியாக இருந்ததால், அந்த வேட்புமனு ஏற்பட்டது,’ என விளக்கம் அளித்தார்.

தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் கூறுகையில், ‘‘அண்ணாமலை வேட்புமனுவுடன் இணைத்துள்ள படிவம் 26 தேர்தல் ஆணையத்தால் அளிக்கப்பட்டதுபோல் இல்லை. படிவம் 26ம் பக்கம் பகுதி ஏ வரிசை எண் 5 பகுதி, பில் பக்கம் 30 ஆகியவற்றில் தவறு இருக்கிறது. இது தொடர்பாக கேள்வி எழுப்பினோம். ஆதாரத்துடன் காண்பித்தும், அவரின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் தேர்தல் விதி ஒரே மாதிரி இருக்க வேண்டும் இது தொடர்பாக நாங்கள் நீதிமன்றம் செல்ல உள்ளோம்’’ என்றார்.

கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் பெயரில் 4 பேரும், அதிமுக வேட்பாளர் ராமச்சந்திரன் பேரில் 4 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். பாஜவினர் தான் திமுக, அதிமுக வேட்பாளர்களின் பெயர்களில் வேட்புமனுவை தாக்கல் செய்ய வைத்துள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள சுயேட்சை வேட்பாளர் ராஜ்குமார் என்பவர், பாஜ வேட்பாளர் அண்ணாமலையுடன் ெநருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. எனவே அவர் அண்ணாமலையின் நண்பராக இருக்கலாம் என்றும், பாஜவின் தூண்டுதலில் அவர் வேட்புமனு செய்திருக்கலாம் என்றும் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்