முக்கிய செய்தி:
தேர்தல் களம்
வாக்காளர்கள் அன்பளிப்புக்கு ஏமாற வேண்டாம் - டிடிவி தினகரன் வேண்டுகோள்
வாக்காளர்கள் அன்பளிப்புக்கு இடமளித்து ஏமாற வேண்டாம் என்று அ.ம.மு.க பொதுச்செயலர் டி.டி.வி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்களவை தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இன்று இறுதிக்கட்ட பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. தேர்தல் ஆணையம் பரிசுப்பொருட்கள், பணப்பட்டுவாடா போன்ற தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வாகன சோதனையில் கட்டுக்கட்டாக பணங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். வாக்காளர்கள், ஓட்டுக்கு பணம், அன்பளிப்பு எதுவும் வாங்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பிரதமர் மோடியை, மூன்றாவது முறையாக பிரதமர் அரியணையில் அமர வைப்பதன் வழியாக, உலக நாடுகள் மத்தியில், இந்தியாவை வலிமையான நாடாக மாற்றவும், பொருளாதார ரீதியாக நம் நாடு முன்னேற வழிவகுக்கவும் உதவும் என்பதை, மக்கள் உணர்ந்துள்ளனர்.
தேனி தொகுதியை தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றும் முனைப்பில், தொலை நோக்கு பார்வையுடன் தயாரிக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை, 152 அடியாக உயர்த்தி, நம் மாநில உரிமை மற்றும் விவசாயிகள் நலனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நம் ஒவ்வொருவரின் ஓட்டும், நம் தொகுதி வளர்ச்சி மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கு அளிக்கக் கூடிய பாதுகாப்பு என்பதை, ஒவ்வொருவரும் உணர வேண்டும். உங்களிடமே சுரண்டி, இறுதிகட்ட அன்பளிப்பு என்ற பெயரில் உங்களுக்கே, 300, 500 என கொடுக்க முயற்சிக்கும் சூழ்ச்சியை, ஆளுங்கட்சியினரும், ஆண்ட கட்சியினரும் முன்னெடுத்து செய்து வருகின்றனர். அவற்றுக்கு இடமளித்து ஏமாற வேண்டாம். இவ்வாறு தினகரன் கூறியுள்ளார்.