முக்கிய செய்தி:
தேர்தல் களம்
நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக் கோரி மனு – நாளை விசாரணை
பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்த மனுவை நாளை விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீதான வழக்கில் அமலாக்கத் துறை விசாரணை நடத்த வேண்டும். அவரை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரிய மனுவை ஏப்ரல் 18 ஆம் தேதியான நாளை, விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்து ள்ளது.
இதுதொடர்பாக திருநெல்வேலி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ராகவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், "தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பிடிப்பட்டது தொடர்பாக பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது சட்ட விரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்கத் துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த மனு மீது அமலாக்கத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், வாக்களர்களுக்கு அளிப்பதற்காக பணம் பதுக்கி வைத்திருந்ததால் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென தமிழக தேர்தல் ஆணையரிடம் மனு அளித்தும், அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத் துறைக்கு உத்தரவிட வேண்டும். அவரை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இம்மானுவேல் முறையிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, நாளை விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.