முக்கிய செய்தி:
தேர்தல் களம்
ஆளுங்கட்சிக்கு பாடம் புகட்ட அரசு ஊழியர்கள் முடிவு - பாமக நிறுவனர் ராமதாஸ்
தமிழகத்தை ஆளும் கட்சிக்கு இத்தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது
தமிழகத்தில் திமுக ஒவ்வொருமுறை ஆட்சிக்கு வருவதற்கும் ஏணியாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள்தான். ஆட்சிக்கு வந்தபின் திமுக அரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் தாங்கிப் பிடிப்பவர்களும் அவர்கள்தான். ஆனால், அவர்களே திமுக அரசை இப்போது சபிக்கின்றனர்.
திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகியும் அந்தக் கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை.
எனவே, தங்களை ஏமாற்றியவர்களுக்கு பாடம் புகட்ட அவர்கள் தயாராகி விட்டனர். 2021-ம் ஆண்டு தேர்தலில் 500-க்கும் கூடுதலான வாக்குறுதிகளை அளித்து மக்களை மயக்கி ஆட்சிக்கு வந்த திமுக, அவற்றில் 50 வாக்குறுதிகளைக்கூட இதுவரை நிறைவேற்றவில்லை.
கடந்த இரு ஆண்டுகளில் மட்டும், 60,000 கோடி ரூபாய்க்கு மின் கட்டணம், சொத்து வரி, குடிநீர் கட்டணம், பால் விலை, பத்திரப்பதிவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அரிசி, மளிகை பொருட்கள் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
இதனால், ஒவ்வொரு ஏழை, நடுத்தர குடும் பத்தின் செலவுகள் மாதத்திற்கு, 5,000 முதல் 10,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதுதான் தி.மு.க., அரசின் சாதனை. அதை நினைத்தாலே மக்கள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தி.மு.க.,வுக்கு எப்போதும் ஆதரவளிக்கும் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் இப்போது அக்கட்சிக்கு பாடம் புகட்ட தயாராகி விட்டனர். பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட அவர்களின் கோரிக்கையை, தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை. ஓட்டுப்பதிவின் போதும், ஓட்டுப்பதிவு முடிந்த பின்னும் ஆளுங்கட்சியும், ஆண்ட கட்சியும் தங்களின் பண பலத்தையும், படைபலத்தையும் பயன்படுத்தி, கள்ள ஓட்டுகளை கொத்துக் கொத்தாக போட முயற்சிக்கும். அதை பா.ம.க.,வினர் முறியடிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.