முக்கிய செய்தி:
அரசியல்
மத்திய அமைச்சருக்கு தற்கொலை மிரட்டல் விடுத்த திமுக எம்.பி…பிறகு என்ன நடந்தது தெரியுமா?
வேலூர் திமுக வேட்பாளரும், சிட்டிங் எம்.பி.யுமான கதிர் ஆனந்த நேற்று குடியாத்தம் பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது கதிர் ஆனந்த் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த போது பேசிய விவகாரம் பேசுபொருளாகியிருக்கிறது.
கடந்த 2019 மக்களவை தேர்தலின் போது பணப்பட்டுவாடா மற்றும் வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கியது உள்ளிட்ட தேர்தல் விதிகளை அரசியல் கட்சிகள் மீறியதால் வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தல் நடக்கவில்லை. அப்போது திமு க கூட்டணி சார்பில் கதிர் ஆனந்தும், அதிமுக கூட்டணியில் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் பிராதான வேட்பாளர்களாக வேலூரில் களமிறங்கினர்.
பின்னர் 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த தேர்தலில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வெறும் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார்.
வரும் மக்களவை தேர்தலிலும், வேலூர் தொகுதியில் போட்டியிட கதிர் ஆனந்துக்கு திமுக மீண்டும் சீட் வழங்கியுள்ளது. அதிமுக சார்பில் பசுபதியும், பாஜக சார்பில் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்கள்.
வேலூரில் இரண்டு நாட்களுக்கு முன்பு திமுக இளைஞர் அணி செயலாளரும் , அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். இந்நிலையில், நேற்று குடியாத்தம் பகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆன்ந்த பரப்புரை மேற்கொண்டார். அப்போது, பொதுமக்களிடம் அவர் பேசி வாக்குகள் சேகரி த்தது பேசுபொருளாகியுள்ளது.
குடியாத்தம் பகுதியில் பல ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசல் இருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது, கதிர் ஆனந்த தன்னை வெற்றி பெற வைத்தால் குடியாத்தம் பகுதியில் ரிங் ரோடு அமைப்பேன் என கடந்த மக்களவை தேர்தலில் பொதுமக்களுக்கு வாக்குறுதி அளித்ததாக பரப்புரையில் பேசினார்.
வேலூர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு குடியாத்தம் பகுதியில் ரிங் ரோடு அமைக்க வேண்டும் என மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை வைத்ததாக கதிர் ஆனந்த பிரச்சாரத்தில் பேசினார்.
அதற்கு, தற்போது நிதி இல்லை என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சோல்ல, குடியாத்தம் பகுதியில் ரிங் ரோடு அமைக்காவிட்டால் பாராளுமன்ற செண்ட்ரல் ஹாலில் தற்கொலை செய்வேன் என அமைச்சரையே தான் மிரட்டியதாக பிரச்சாரத்தில் பேசிய காட்சிகள் சமூ க வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
மேலும், ”கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுபவனே திமுக காரன் என கதிர் ஆனந்த் பேசியது அவருக்கு எதிராகவே திரும்பியுள்ளது. திமுக 2021 சட்டமன்ற தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியதா? என சமூக வலைதளங்களில் பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
தொடர்ந்து பேசிய கதிர் ஆனந்த, ”தனது பிறந்தநாள் அன்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தனக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு குடியாத்தத்தில் ரிங் ரோடு அமைக்க நிதி ஒதுக்கப்பட்டதாக தெரிவித்து பிறந்தநாள் வாழ்த்து கூறியதாக கதிர் ஆனந்த் பேசினார்.