Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

லஞ்சம் வாங்கிய ஆய்வாளர்கள் கைது

SAMYUKTHA27-04-2024
லஞ்சம் வாங்கிய ஆய்வாளர்கள் கைது

லஞ்சம் வாங்கிய ஆய்வாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், நல்லகுற்றாலம் தெருவைச் சேர்ந்தவர் வாசுதேவன் (48). ஆட்டோ ஓட்டுநர். இவர் தனக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் சிங்கம்மாள்புரம் கிராமத்தில் உள்ள சொந்தமான இடத்தில் வீடு கட்டுவதற்கு அனுமதி கோரி, ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் கட்டிட அமைப்பு வரைவு ஆய்வாளர் ஜோதிமணியிடம் (56) மனு செய்தார். இதற்காக, அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தையும் செலுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஜோதிமணியை அணுகியபோது, அவர் தனக்கு ₹10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வாசுதேவன், விருதுநகரில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனைப்படி, நேற்று காலை நகராட்சி அலுவலகத்திற்கு ரசாயனம் தடவிய பணத்துடன் வந்தார். அங்கு ஜோதிமணியிடம் லஞ்ச பணத்தை வாசுதேவன் வழங்கினார். அப்போது அந்தப் பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ஜோதிமணியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினத்தை சேர்ந்தவர் முகமது பிலால். இவர் தனது வீட்டின் மேலே செல்லும் மின்சார கம்பியை மாற்றி அமைப்பதற்காக, தேவிப்பட்டினம் மின்வாரிய அலுவலகத்தில் மனு செய்து ₹42,900 கட்டணம் செலுத்தினார். இதுதொடர்பாக மின் உதவி பொறியாளர் அலுவலகத்தில் பணிபுரியும் வணிக ஆய்வாளர் ரமேஷ்பாபுவை நேற்று முன்தினம் சந்தித்து முகமது பிலால் வலியுறுத்தி உள்ளார். அப்போது வேலையை சீக்கிரம் முடிக்க உதவி மின்பொறியாளருக்கு ₹3 ஆயிரம், லேபருக்கு ₹6 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று ரமேஷ்பாபு கூறியுள்ளார்.

இதுகுறித்து முகமது பிலால் ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். அவர்களது அறிவுறுத்தலின்பேரில் ரசாயனம் தடவிய ₹9 ஆயிரம் பணத்தை வணிக ஆய்வாளர் ரமேஷ்பாபு மற்றும் வயர்மேன் கந்தசாமி ஆகியோரிடம் முகமது பிலால் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், இருவரையும் கையும் களவுமாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் அலுவலக பெண் ஊழியர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதால், தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்