Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

நெல்லை காங்கிரசில் உச்சகட்ட கோஷ்டி பூசல்.. காங்கிரஸ் கட்சியில் இருவர் வேட்புமனு தாக்கல்..!

VASUKI RAVICHANDHRAN27-03-2024
நெல்லை காங்கிரசில் உச்சகட்ட கோஷ்டி பூசல்.. காங்கிரஸ் கட்சியில் இருவர் வேட்புமனு தாக்கல்..!

காங்கிரஸ் கட்சியில் தலைமை அறிவித்த வேட்பாளரை எதிர்த்து முன்னாள் எம்.பி ராமசுப்பு வேட்பாளராக மனுத்தாக்கல் செய்திருப்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மற்றொரு காங்கிரஸ் நிர்வாகியும் மனுதாக்கல் செய்ய வந்த நிலையில் கால தாமதமானதால் அவர் மனுவை வாங்க ஆட்சியர் மறுப்பு தெரிவித்தார்.

தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிவடைந்தது. எனவே கடைசி நாள் என்பதால் அரசியல் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு வேட்புமனுத் தாக்கல் செயதனர்.

நெல்லை தேர்தல் களத்தை பொறுத்தவரை ஏற்கனவே முக்கிய கட்சிகளான அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் மனுத் தாக்கல் செய்துள்ளனர். திமுக சார்பில் நெல்லை தொகுதியை கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியுள்ளது. ஆனால் காங்கிரஸ் நிலவும் உள்கட்சி பூசலால் வேட்பாளர் அறிவிப்பு தாமதமானதால் நேற்று வரை நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் மனு தாக்கல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இன்று கடைசி நாள் என்பதால் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் மனுத்தாக்கல் செய்வதற்காக நெல்லை ஆட்சியர் அலுவலகம் வந்தார்.

அப்போது அவருக்கு முன் சுயேட்சை வேட்பாளர் அதிசயமணி மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா மீண்டும் மனுத்தாக்கல் செய்வதற்காக வந்திருந்தனர், ஆனால் தேர்தல் அலுவலர்கள் முதலில் காங்கிரஸ் வேட்பாளரை ஆட்சியர் அலுவலகத்தின் வாசல் அருகே அனுமதித்ததால் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் காவலர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நாங்கள் தான் முதலில் டோக்கன் வாங்கியுள்ளோம் பிறகு எப்படி திமுக காங்கிரஸ் நிர்வாகிகளை உள்ளே அனுப்பலாம் என கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது காவலர்கள், அவர்களை உள்ளே அனுப்பவில்லை ஓய்வு எடுப்பதற்காக அருகில் உள்ள அறையில் தான் அமர வைத்துள்ளோம் டோக்கன் வரிசைப்படி தான் வேட்பாளர்கள் அழைக்கப்படுவார்கள் என்று கூறினர். இருப்பினும் அதை ஏற்காமல் போலீசாரிடம் இருந்து நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து வாக்குவாதம் செய்தனர்.

ஜனநாயக முறைப்படி நடந்து கொள்ளவில்லை என குற்றம் சாட்டினர் ஆளுங்கட்சி என்பதால் அராஜகம் செய்கிறார்கள் என நாம் தமிழர் கட்சியினர் கோஷமிட்டனர் இதனால் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இன்று பெரும் பரபரப்புடன் இயங்கிய சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு போட்டி வேட்பாளராக மனு தாக்கல் செய்த சம்பவம் மேலும் பரபரப்பாக்கியது.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் கடும் கோஷ்டி பூசல் நிலவுவதால் வேட்பாளர் அறிவிப்பில் தாமதமானது பீட்டர் அல்போன்ஸ் ராமசுப்பு நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், பால்ராஜ் உள்ளிட்ட பல முக்கிய விஐபிகள் நெல்லை தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பு கேட்டனர். இறுதியாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ராபர்ட் புரூஸ் போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைமை அறிவித்தது.

இதனால் கடும் அதிர்ச்சியில் இருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் வேட்பாளருக்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இந்த நிலையில் தனக்கு சீட் கிடைக்காத ஆதங்கத்தில் ராமசுப்பு போட்டி வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ளார் இது சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வந்தீர்களா என ராமசுப்புவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது நான் ஒரு காங்கிரஸ்காரன் எனவே காங்கிரஸ் சார்பில் தான் போட்டியிடுவேன் என ஆவேசமுடன் கூறினார். அதேபோல் நாங்குநேரியை சேர்ந்த மற்றொரு காங்கிரஸ் நிர்வாகி வாணுமாமலை என்பவரும் காங்கிரஸ் சார்பில் போட்டி வேட்பாளராக போட்டியிடப் போவதாக தெரிவித்தார் ஆனால் நேரம் தவறியதால் (3 மணியை கடந்ததால்) அவர் மனுவை வாங்க தேர்தல் அதிகாரி மறுத்து விட்டார். அரசியல் கட்சி சார்ந்த வேட்பாளராக இருந்தால் ஒரு கட்சி சார்பில் ஒரே ஒரு நபர் மட்டுமே போட்டியிட கட்சி தலைமை அனுமதி கொடுக்கும் எனவே காங்கிரஸ் சார்பில் கட்சி அறிவிக்கப்பட்ட வேட்பாளரை தவிர மேலும் ஒருவர் போட்டி வேட்பாளராக போட்டியிடப் போவதாக கூறியிருப்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே போட்டி வேட்பாளர்களின் வேட்புமனு ஏற்கப்படுமா இல்லையா என்பது நாளை நடைபெறும் வேட்புமனு பரிசீலனையில் தெரியவரும்.

இதனிடையே போட்டி வேட்பாளராக ராமசுப்பு மனு தாக்கல் செய்ததை ஒளிப்பதிவு செய்ய பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது இதனால் அங்கு பரபரப்பான சூழல் காணப்பட்டது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்