முக்கிய செய்தி:
அரசியல்
டி.எம்.செல்வகணபதியின் வேட்புமனுவுக்கு அதிமுக எதிர்ப்பு - உரிய ஆவணங்கள் சமர்பித்ததால் மனு ஏற்கப்பட்டது
சேலத்தில் அதிமுகவினர் எதிர்ப்பால் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனை சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. உரிய விளக்கத்திற்கு பிறகு அவரது வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனை நேற்று நடந்தது. சேலம் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, அதிமுக சார்பில் விக்னேஷ், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அண்ணாதுரை, நாம் தமிழர் கட்சி சார்பில் மனோஜ் குமார் மற்றும் சுயேட்சைகள் என 39 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை முதல் நடந்தது. மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான பிருந்தாதேவி தலைமையில் நாடாளுமன்ற தொகுதி பொதுபார்வையாளர் பாட்டீல் முன்னிலையில் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டது. தேர்தல் பிரிவு அலுவலர்கள் வேட்பாளர்கள், மாற்று வேட்பாளர்கள், வழக்கறிஞர்கள் பலர் கலந்துகொண்டனர். சேலம் தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்புமனு காலை 11 மணியளவில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, அவருக்கு சேலம் மேற்கு மற்றும் வடக்கு சட்டமன்ற தொகுதி என 2 தொகுதிகளில் வாக்குரிமை இருப்பதாக அதிமுக வேட்பாளர் விக்னேஷ் மற்றும் சுயேட்சை வேட்பாளர் ராஜாவின் வழக்கறிஞர் இளஞ்செழியன் ஆகியோர் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் உரிய விளக்கம் கொடுக்க வேண்டும் எனக்கூறி தற்காலிகமாக டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் திமுகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டது. இந்த புகார் சம்பந்தமாக டி.எம்.செல்வகணபதி தரப்பில் திமுக தலைமைக் கழக வழக்கறிஞர் விடுதலை மற்றும் ேசலம் திமுக வழக்கறிஞர் பிரிவு கார்த்திகேயன் மற்றும் வழக்கறிஞர்கள் உரிய ஆவணங்களை எடுத்து வந்து மதியம் 2 மணியளவில் மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் பிருந்தாதேவியிடம் வழங்கினர். இதனை பரிசீலித்த தேர்தல் அதிகாரி, திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனுவை 2.30 மணியளவில் ஏற்றுக்கொண்டார். இது குறித்து திமுக வழக்கறிஞர் விடுதலை நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக மற்றும் சுயேட்சை வேட்பாளரின் வழக்கறிஞர்கள் திமுக வேட்பாளர் டி.எம். செல்வகணபதியின் பெயர் இரண்டு இடங்களில் வாக்காளர் பட்டியலில் உள்ளது. அதனால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். இதற்குரிய விளக்கத்தை நாங்கள் அளித்தோம். ஏற்கனவே சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதியில் குடியிருந்தார். சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு குடியிருக்க வரும்போது தன்னுடைய பெயரை வாக்காளர் பட்டியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஏற்கனவே மனு செய்துள்ளார். அந்த மனுவை கொடுத்தபின்புதான், சேலம் வடக்கில் மனுவை பதிவு செய்தார். அந்த மனு கொடுத்தபின்பும், அவருடைய பெயரை எடுக்காமல் இருப்பது செல்வகணபதியின் தரப்பில் தப்பில்லை என சொல்லி வாதம் செய்தோம். அது மட்டும் இல்லாமல் ஏற்கனவே உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முன் உதாரணம் காட்டி இரண்டு சட்டமன்ற தொகுதியில் பெயர் இருந்தால், அது தகுதியிழப்பு வராது என்றும் சொன்னோம். மேலும் அவர் தனது விவரங்கள் எதையும் மறைக்கவில்லை என்பதையும் ஆதாரப்பூர்வமாக சொன்னோம். இதையடுத்து எங்களுடைய வாதங்களை ஏற்ற தேர்தல் அதிகாரி, அவர்களின் ஆட்சேபனை மனுக்களை நிராகரித்தார். செல்வகணபதியின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி ஏற்றுக்கொண்டனர். வேட்பாளரின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதால் அவர்கள் நீதிமன்றத்ைத அணுகுவதற்கு சட்டத்தில் இடம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் கருத்தை தெரிவிக்கவும்
டிரெண்டிங்
மேலும் பார்க்கசெய்திமடலுக்கு சந்தாதராகவும்
உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்